சரியான நேரத்தில் தீர்க்கதரிசன நியமங்கள் வெளிப்பட்டன!

வேதபாடங்கள்  18

உங்கள் இருக்கையின் நாடாவை உறுதியாக கட்டிக் கொள்ளுங்கள்.  இயேசுவின் முதல் வருகையையும் அவருடைய மரணத்தின் நேரத்தையும் துல்லியமாக முன்சொல்லியிருந்த வேதாகமத்திலுள்ள மிக நீண்ட தீர்க்கதரிசனத்தைப் படிக்கபோகிறோம்.

 விண்வெளியிலிருந்து தூதனின் செய்தி என்னும் வேதபாடம் 16ல், கிறிஸ்து வருமுன்பாக இந்த உலகம் கட்டாயம் கேட்கவேண்டிய மிக முக்கியமான செய்தி இருப்பதாக நீங்கள் படித்தீர்கள். 

அதில் முதலாவது குறிப்பு, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்துவிட்டதால் (வெளிப்படுத்தல் 14:7) அவருக்கு பயந்து, அவரைத் தொழுது மகிமைப்படுத்தும்படி மக்களுக்கு கட்டளையிட்டது.  தானியேல் 8 மற்றும் 9ம் அதிகாரங்களில் தேவன் தமது முடிவான நியாயத்தீர்ப்பைத் துவங்கும் நேரத்தை வெளிப்படுத்தி, கிறிஸ்துதான் மேசியா என்பதை நிரூபிக்கும் வல்லமையுள்ள தீர்க்கதரிசன ஆதாரங்களையும் கொடுக்கிறார்.  இக்காரணத்தினால் வேதவாக்கியங்கள் அனைத்திலும் இதுவே அதிக முக்கியமான தீர்க்கதரிசனமாக இருக்கிறது.  எனினும் வெகு சிலரே இதை அறிந்திருக்கிறார்கள்.  மற்றவர்கள் இதற்கு முற்றிலும் தவறான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள்.  இதைப் படிப்பதற்கு முன்பாக தானியேல் 8 மற்றும் 9ஐ படித்து, இந்த சிறப்பான பாடத்தைப் புரிந்துகொள்ள தேவ ஆவிக்காக ஜெபியுங்கள்.

1. இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்ந்து, சந்திக்கிற ஒவ்வொரு மிருகத்தையும் வெற்றிகொள்வதாக (தானியேல் 8:3,4) தானியேல் தரிசனம் கண்டாரே, அந்த ஆட்டுக்கடா எதைக் குறிக்கிறது?

பதில்:  அந்த ஆட்டுக்கடா, தானியேல் 7:5 ல் கரடியாக குறிக்கப்பட்டிருக்கிற மேதிய பெர்சியா என்னும் சாம்ராஜ்யத்தின் அடையாளமாயிருக்கிறது.  வேதபாடம் 15-ஐ பார்க்கவும்.  இவை வேதாகமத்திலிருக்கும் தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகத்தின் தீர்க்கதரிசனங்கள் “திரும்பக் கூறி தெளிவாக்கு” என்னும் கொள்கைளைப் பின்பற்றிகின்றன.  அதாவது, அந்த அதிகாரங்களுக்குமுன் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை திரும்பக் கூறி அவைகளைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும்.  அந்த அணுகுமுறை வேதாகம தீர்க்கதரிசனங்களைக்குறித்த தெளிவையும் தீர்க்கத்தையும் கொண்டுவருகிறது.

2. எந்த குறிப்பான மிருகத்தை தானியேல் அடுத்ததாகப் பார்த்தான்?

“அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்” – தானியேல் 8:21,22.

பதில்:  தானியேலின் தரிசனத்தில் அடுத்ததாக மிகப்பெரிய கொம்பையுடைய வெள்ளாட்டுக்கடா சடிதியாகத் தோன்றி, மிக வேகமாக பயணிக்கிறது.  அது ஆட்டுக்கடாவைத் தாக்கி வெற்றிகொண்டது.  பின்னர் அந்த பெரிய கொம்பு முறிந்துபோக, அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன.  முரடான வெள்ளாட்டுக்கடா மூன்றாம் உலக இராஜ்யமான கிரேக்க இராஜ்யத்தை அடையாளப்படுத்தியது.  அதன் பெரிய கொம்பு மகா அலெக்சாண்டர்.  அந்த பெரிய கொம்பிற்குப் பதிலாக முளைத்த நான்கு கொம்புகள், அலெக்சாண்டரின் இராஜ்யத்திலிருந்து வந்த நான்கு பிரிவுகளைக் குறித்தன.  இந்த 4 இராஜாக்களும் தானியேல் 7:6-ல் கிரேக்க தேசத்தைக்குறித்த சிவிங்கியின் நான்கு தலைகளால் குறிக்கப்படுகின்றனர்.  இந்த அடையாளங்கள் சரியாக பொருந்துவதால் சரித்திரத்தில் அவைகளை அடையாளம் காண்பது எளிது.

3. தானியேல் 18:8,9ன்படி அடுத்ததாக சின்னகொம்பு எழும்பியது, இது எதை குறிக்கிறது?

பதில்:  சின்னக்கொம்பு ரோமைக் குறிக்கிறது.  இது கி்.மு.2ம் நூற்றாண்டில் பாலஸ்தினத்தின்மேல் ஆட்சி செய்த செலூக்கிய இராஜாவான ஆன்டியோகஸ் எபிபேனசை குறிக்கிறதாக சிலர் சொல்லுகிறார்கள்.  அவன் யூதர்களின் ஆராதனை முறையை இடையூறு பண்ணினான்.  ஆனால் சீர்திருத்த தலைவர்களில் மிக அதிகமானோர் சின்ன கொம்பு அதனுடைய அஞ்ஞான வழியிலோ போப்புமார்க்கத்தின் வழியிலோ ரோமையே குறிக்கிறது என்று நம்பினார்கள்.  இதற்கான தெளிவான வேதாகம சான்றுகளை ஆராய்வோம்.

  • “திரும்ப கூறி பெரிதாக்கு” என்னும் தீர்க்கதரிசன சட்டத்திற்கு இசைவாக, சின்னகொம்பால் குறிக்கப்பட்ட வல்லமை ரோமாகவே இருக்கவேண்டும்.  ஏனெனில் தானியேல் 2 மற்றும் 7 ம் அதிகாரங்கள் ரோம்தான் கிரேக்க இராஜ்யத்தை பின்தொடருகிறதென்று காட்டுகின்றன.  தானியேல் 7:24-27-ம் கூட, போப்புமார்க்கத்தின் உருவிலிருக்கும் ரோம இராஜ்யத்தை கிறிஸ்துவின் இராஜ்யம் பின்தொடரும் என்று அறிவிக்கிறது.  வேதபாடம் 15-ஐ பார்க்கவும்.  தானியேல் 8ல் வரும் சின்ன கொம்பு இந்த வரிசையில் சரியாகப் பொருந்துகிறது.  அது கிரேக்க இராஜ்யத்தைப் பின் தொடர்ந்து, இயேசுவின் இரண்டாம் வருகையில் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுகிறது-இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அழிந்துபோகிறது.  (தானியேல் 8:25 யும், 2:34 யும் ஒப்பிடவும்.)
  • மேதிய பெர்சியர்கள் “வல்லமை கொள்வார்கள்” (வசனம் 4) என்றும், கிரேக்கர்கள் “மிகுதியும் வல்லமை கொள்வார்கள்” (வசனம் 8) என்றும், சின்ன கொம்பின் வல்லமை “மிகவும் பெரியதாகும்” (வசனம் 9) என்றும் தானியேல் 8 கூறுகிறது.  ரோம இராஜ்யத்தை தவிர்த்து வேறு எந்த இராஜ்யமும் கிரேக்க இராஜ்யத்திற்குப்பின் “மிகவும் பெரியதாகவில்லை” என்பது சரித்திரத்தின் வழியாக தெளிவாக இருக்கிறது.
  • தீர்க்கதரிசனம் முன்னுரைத்ததைப்போல மிகவும் சரியாக ரோம் தனது வல்லமையை தெற்கிலும் (எகிப்து), கிழக்கிலும் (மக்கெதோனியா), சிங்காரமான தேசத்திலும் (பாலத்தீனம்) விரிவாக்கியது.  ரோமைத்தவிர்த்து வேறு எந்த வல்லமையும் இதில் பொருந்துவதில்லை.
  • சேனையின் அதிபதியும் (வசனம் 11) “அதிபதிகளுக்கு அதிபதியுமான” (வசனம் 25) இயேசுவிற்கு விரோதமாக ரோம் மாத்திரமே எழும்பியது.  அஞ்ஞான ரோம் அவரை சிலுவையில் அறைந்து, யூத ஆலயத்தை அழித்துப்போட்டது.  பரலோகத்தில் மகா பிரதான ஆசாரியரான இயேசுகிறிஸ்துவின் முக்கியமான ஊழியத்திற்கு பதிலாக, பாவங்களை மன்னிக்கும் உரிமையை பாராட்டி பூமியிலே ஆசாரிய ஊழியத்தை ஏற்படுத்தியதில் போப்புமார்க்கம் வல்லமையாக பரலோக பரிசுத்த ஸ்தானத்தை தள்ளி (வசனம் 11) பரிசுத்த ஸ்தலத்தை மிதித்தது (வசனம் 13).  தேவனைத் தவிர்த்து வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது (லூக்கா  5:21).  இயேசு கிறிஸ்து மாத்திரமே நம்முடைய ஆசாரியரும் மத்தியஸ்தருமாயிருக்கிறார் (1 தீமோத்தேயு 2:5).
4. சின்ன கொம்பின் வல்லமை தேவனுடைய பிள்ளைகள் அநேகரை அழித்து (வசனம் 10,24,25)
சத்தியத்தை தரையிலே தள்ளும் (வசனம் 12) என்று தானியேல் 8 நமக்கு அறிவிக்கிறது.  தேவனுடைய மக்களும் பரலோக ஆசரிப்புக்கூடாரமும் எவ்வளவு காலம் மிதிக்கப்படும் என்ற ஒரு பரிசுத்தவானின் கேள்விக்கு பரலோகத்தின் பதில் என்ன?

“அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்” – தானியேல் 8:14.

பதில்:  பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஸ்தலம் 2300 இராப்பகல்களுக்குப் பின்னர் அல்லது 2300 வருடங்களுக்குப் பின்னர் சுத்திகரிக்கப்படும் என்று பரலோகம் பதிலளித்தது. (எசேக்கியேல் 4:6 மற்றும் எண்ணாகமம் 14:34-ல் காணப்படும் “ஒரு தீர்க்கதரிசன நாள் ஒரு வருடம்” என்கிற கொள்கைக்கு பாடம் 15 முழுமையான விளக்கத்தைக் கொடுக்கிறது.).  முற்கால இஸ்ரவேலில் பூமிக்குரிய ஆசரிப்புக்கூடார சுத்திகரிப்பு பாவ நிவாரண நாளில் நடந்ததென்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.  அந்த நாளில் தேவனுடைய மக்கள் அவருடையவர்களென்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுடைய பாவபதிவுகள் அகற்றப்பட்டன.  பாவத்தில் நிலைத்திருந்த துன்மார்க்கர் இஸ்ரவேலிலிருந்து என்றைக்குமாக அறுப்புண்டுபோயினர். இவ்விதம் பாளயம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டது.  பாவமும் சின்ன கொம்பின் வல்லமையும் எந்நாளும் செழிக்காது என்றும், உலகத்தை கட்டுப்படுத்தி, தேவனுடைய மக்களை அது முடிவில்லாது உபத்திரவப்படுத்தாது என்றும் பரலோகம் இங்கே தானியேலுக்கு உறுதியளித்தது.  தேவன் 2300 வருடங்களில் பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் அல்லது நியாயத்தீர்ப்பில் பிரவேசித்து, பாவத்தையும் பாவிகளையும் அடையாளம் கண்டு, பின்னர் பிரபஞ்சத்திலிருந்து என்றைக்குமாக அவர்களை அகற்றுவார்.  இவ்விதம் பிரபஞ்சம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படும்.  தேவனுடைய மக்களுக்கு எதிரான தவறுகள் முடிவாக சரிபடுத்தப்பட்டு, ஏதேனின் சமாதானமும் இணக்கமும் மீண்டும் ஒருமறை பிரபஞ்சத்தை நிரப்பும்.

5. என்ன அவசரமான குறிப்பை தூதன் காபிரியேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினான்?

“மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.”  “கோபத்தின்முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்.”  “இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்” – 8:17, 19, 26.

பதில்:  பாடம் 15 ல் படித்ததைப்போல, 1798 ல் துவங்கிய முடிவுகாலத்தின் சம்பவங்களை 2300 இராப்பகல் தீர்க்கதரிசனம் உள்ளடக்கியிருக்கிறது என்பதை காபிரியேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினான்.

உலக சரித்திரத்தின் முடிவுகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு முதன்மையாகப் பொருந்துகிற 2300 இராப்பகல் தீர்க்கதரிசனத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று காபிரியேல் தூதன் விரும்பினான்.  அது இன்றைக்கும் விசேஷ பொருளை கொண்டிருக்கிறது.

தானியேல் 9ன் முன்னுரை

தானியேல் 8ன் தரிசனத்திற்குப்பிறகு, காபிரியேல் தூதன் தரிசனத்தை தானியேலுக்கு விளக்கத் துவங்கினான். 2300 நாட்களைக்குறித்த விளக்கத்திற்கு தூதன் வந்தபோது, தானியேல் பெலவீனமடைந்து சிலகாலம் வியாதிப்பட்டான்.  பின்னர் பெலனடைந்து இராஜாவின் வேலையை தொடர்ந்தபோதும், 2300 நாட்களின் விளக்கப்படாத பகுதியை குறித்த விசாரத்தோடு இருந்தான்.  மேதிய பெர்சியரின் சிறையிருப்பிலிருந்த யூதருக்காக ஊக்கமாக ஜெபித்து, தன் பாவங்களை அறிக்கைசெய்தான்.  தன் மக்களின் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்று மன்றாடினான். தீர்க்கதரிசியின் ஊக்கமான மன்னிப்பை ஜெபத்தோடும் வேண்டுதலோடும் தானியேல் 9 துவங்குகிறது.  இந்தப் பாடத்தை தொடருமுன் தானியேல் 9ஐ தயவுகூர்ந்து வாசியுங்கள்.

6. தானியேல் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியோடு அவனை சடிதியாகத் தொட்டது யார் (தானியேல் 9:21-23)?

பதில்:  தானியேல் 8லுள்ள தீர்க்கதரிசனத்தின் மீதிபாகத்தை விளக்கும்படி தான் வந்ததாக காபிரியேல் தூதன் கூறினான்.  (தானியேல் 8:26ஐ 9:23 உடன் ஒப்பிடவும்).

7. 2300 இராப்பகலில் எவ்வளவு காலம் தானியேலின் மக்களான யூதர்களுக்கும் அவர்களுடைய தலைநகரமான எருசலேமிற்கும் ஒதுக்கப்பட்டது (தானியேல் 9:24)?

பதில்:  யூதர்கள்மேல் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டது.  70 வாரங்கள் என்றால் 490 வருடங்கள் (70 X 7 = 490). மேதிய பெர்சியாவின் சிறையிருப்பிலிருந்து அவர்கள் விரைவில் திரும்புவார்கள். 2300 வருடங்களிலிருந்து 490 வருடங்களை பிரித்து, தெரிந்துகொண்ட தமது மக்களுக்கு, மனந்திரும்பி தம்மை சேவிக்க மற்றோரு சந்தர்ப்பமாக தேவன் கொடுப்பார்.

8. 2300 இராப்பகல்கள் மற்றும் 490 தீர்க்கதரிசன வருடங்களின் துவக்கம் (தானியேல் 9:25) எங்கேயிருக்கிறது?

பதில்:  எருசலேமிற்குத் திரும்பி நகரத்தைக் கட்டும்படி பெர்சியா இராஜாவான அர்த்தசஷ்டா (மேதிய பெர்சிய சிறையிருப்பிலிருந்த) தேவனுடைய மக்களுக்கு கொடுத்த கட்டளையோடு இவைகள் துவங்கியது.  எஸ்ரா 7 ல் காணப்படும் இந்த கட்டளை இராஜாவின் 7 வது வருடமான (வசனம் 7) கி.மு. 457 ல் கொடுக்கப்பட்டு, அவ்வருடத்தின் இலையூதிர் காலத்தில் செயலுக்கு வந்தது.  அர்த்தசஷ்டா தனது ஆட்சியை கி.மு. 464ல் துவங்கினா்.

9. கி.மு. 457க்குப்பின் 69 தீர்க்கதரிசன வாரங்கள் அல்லது 483 வருடங்களைச் (69 x 7 = 483)  சேர்த்தால், அது மேசியா வரையிலும் (தானியேல் 9:25) சென்றடையும் என்று தூதன் சொன்னானே, சென்றடைந்ததா?

பதில்:  ஆமாம்.  கி.பி. 457லிருந்து 483 வருடங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, அது கி.பி. 27ஐ சென்றடைகிறது.  “மேசியா” என்பதற்கு “அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்று பொருள் (யோவான் 1:41).  இயேசு பரிசுத்த ஆவியானவரால் (அப்போஸ்தலர் 10:38) அவருடைய ஞானமுழுக்கின்போது (லூக்கா 3:21,22) அபிஷேகம் பண்ணப்பட்டார்.  அது திபேரியு இராயனுடைய 15ம் வருடம் (லூக்கா 3:1), அதாவது கி.பி. 27.  இந்த அறிவிப்பு 500 வருடங்களுக்குமுன்பு கொடுக்கப்பட்டது என்பதை சிந்தியுங்கள்!  பின்னர் “காலம் நிறைவேறியது” (மேசியாவரையிலுமான 483 வருடங்கள்) என்று போதித்து (மாற்கு 1:14,15; கலாத்தியர் 4:4), இவ்விதம் 2300 இராப்பகலின் தீர்க்கதரிசனத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் துல்லியத்தையும் அழுத்தமாக கூறி, இயேசு தமது ஊழியத்தைத் துவங்கினார்.  இது,

  • வேதாகமம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கும்,
  •  இயேசுதான் மேசியா என்பதற்கும்,
  • 2300 இராப்பகல் மற்றும் 490 வருட தீர்க்கதரிசனங்களின் அனைத்து தேதிகளும் நம்பக்கூடியவை என்பதற்குமான சிலிர்ப்பூட்டுகிற பயபக்தியான சான்று.  கட்டும்படியான என்ன ஒரு உறுதியான அஸ்திபாரம்!
10. இப்போது நாம் 483 வருட காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வோம்.  490 வருட தீர்க்கதரிசனத்தில் 483 வருடத்தைப் பார்த்தோம்.  இன்னமும் 7 வருடங்கள் அல்லது ஒரு தீர்க்கதரிசன வாரம் மீந்திருக்கிறது (தானியேல் 9:26,27). அடுத்து என்ன எப்போது சம்பவிக்கும்?

பதில்:  “அந்த வாரம் பாதி சென்றபோது,” இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டு, மூன்றரை வருடத்திற்குப்பிறகு, அல்லது கி.பி. 31 ம் வருடத்தின் வசந்தகாலத்தில் “சங்கரிக்கப்படுவார்.”  “அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல” என்று வசனம் 26 ல் சுவிசேஷம் எவ்விதம் வெளியாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்.  இயேசு சங்கரிக்கப்பட்டது தமக்காக அல்ல.  கர்த்தருக்கு ஸ்தேத்திரம்.  அவர் பாவம் செய்யவில்லை (1 பேதுரு 2:22), நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையிலறையப்பட்டார் (1 கொரிந்தியர் 15:3; ஏசாயா 53:5).  இயேசுவின் விலைமதிப்பற்ற வாழ்க்கை, பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கும்படி அன்போடு மனதார கொடுக்கப்பட்டது.  அல்லேலூயா!  எப்படிப்பட்ட ஒரு இரட்சகர்! இயேசுவின் நிவாரணபலிதான் தானியேல் 8 மற்றும் 9 ம் அதிகாரங்களின் மையம்!

11. இயேசு மூன்றரை வருடங்களுக்குப்பின் மரித்துவிட்டாரே, பின்னர் தானியேல் 9:27 அறிவிப்பதைப்போல எவ்விதம் அவர் ஏழு வருடங்கள் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார்?”

பதில்: மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கும் ஒரு ஏற்பாடுதான் அவருடைய உடன்படிக்கை (எபிரெயர் 10:16,17). மூன்றரை வருடங்கள் முடிந்தபின்பு இயேசு தமது சீடர்களின் வழியாக உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் (எபிரெயர் 2:3).  தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மனந்திரும்பும்படியான சந்தர்ப்பமாக 490 வருடத்தின் கடைசி மூன்றரை வருடங்கள் இருந்ததால், அவர் அவர்களை முதலாவது யூத தேசத்திற்கு அனுப்பினார் (மத்தேயு 10:5,6).

12. யூத தேசத்திற்குக் கொடுக்கப்பட்ட கடைசி சந்தர்ப்பமான 490 வருட காலம் கி.பி. 34ல் முடிந்தபோது சீடர்கள் என்ன செய்தனர்?

பதில்:  அவர்கள் மற்ற மக்களுக்கும், உலகத்தின் மற்ற தேசங்களுக்கும் சுவிசேஷத்தை போதிக்கத் துவங்கினர் (அப்போஸ்தலர் 13:46).  நீதிமானாகிய ஸ்தேவான் கி.பி. 34 ல் பொதுமக்கள் முன்னிலையில் கல்லெறியப்பட்டான்.  அந்த தேதியிலிருந்து இயேசுவையும் தேவனுடைய திட்டத்தையும் நிராகரித்த யூதர்கள் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக அல்லது தேசமாக இராமற்போயினர்.  அதற்குப்பதிலாக இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்கிற அனைத்து மக்களையும் ஆவிக்குரிய யூதர்களாக தேவன் பார்க்கிறார்.  அவர்கள் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக, “வாக்குத்தத்தத்தின் சுதந்திரமாக” இருக்கிறார்கள்.  தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு சேவை செய்கிற யூதர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது (கலாத்தியர் 3:27-29; ரோமர் 2:28,29).

13. கி.பி. 34க்குப் பிறகு 2300 இராப்பகல் தீர்க்கதரிசனத்தில் எத்தனை வருடங்கள் மீந்திருந்தன.  அதன் முடிவு தேதி என்ன?  அந்த நாளில் என்ன சம்பவிக்கும் என்று (தானியேல் 8:14) தூதன் கூறினான்?

பதில்:  அதில் 1810 வருடங்கள் இன்னும் மீந்திருக்கின்றன (2300 – 490 = 1810). அந்த தீர்க்கதரிசனத்தின் முடிவுவருடம் கி.பி. 1844 (கி.பி. 34 + 1810 = 1844).  அப்போது பரலோக பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் அல்லது பரலோக நியாயத்தீர்ப்பு துவங்கும் என்று தூதன் கூறினான் (பூமியிலிருந்த ஆசரிப்புக்கூடாரம் கி.பி. 70ல் அழிக்கப்பட்டது).  பாடம் 17ல் பரலோக பாவ நிவாரண நாள் அல்லது நியாயத்தீர்ப்பு கடைசி காலத்தில் நடக்க திட்டமிடப்பட்டது என்று நாம் படித்தோம்.  1844 ம் வருடம்தான் அதன் துவக்கம் என்று இப்போது அறிகிறோம்.  தேவன் இந்த வருடத்தை குறித்தார்.  இயேசு மேசியாவாக ஊழியத்தைத் துவக்கிய கி.பி. 27 ம் வருட கணக்கைப்போலவே இது நிச்சயமானது.  தேவனுடைய முடிவுகால மக்கள் இதை அறிவிக்கவேண்டும் (வெளிப்படுத்தல் 14:6,7). 19 ம் பாடத்தில் நியாயத்தீர்ப்பின் விவரங்களைக் குறித்து படிக்கும்போது நீங்கள் சிலிப்படைந்து களிகூருவீர்கள்.  நோவாவின் காலத்தில் 120 வருடங்களில் வெள்ளம் வரும் என்று தேவன் கூறினார் (ஆதியாகமம் 6:3), அவ்விதமே சம்பவித்தது.  தானியேலின் காலத்தில் 2300 வருடங்களில் அவருடைய முடிவுகால நியாயத்தீர்ப்பு துவங்கும் என்று தேவன் அறிவித்தார் (தானியேல் 8:14), அவ்விதமே சம்பவித்தது.  1844லிருந்து தேவனுடைய கடைசிகால நியாயத்தீர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது.

பாவ நிவாரணம் என்பதன் பொருள்

பாவ நிவாரணம் என்றால் பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து, ஆதியிலே பிரபஞ்சம் முழுவதிலும் இருந்த இணக்கத்திற்கு அதை மீண்டும் கொண்டுவருவதே.  பிரகாசமான தூதனாகிய லூசிபர் (பாடம் 2 ல் படித்ததன்படி) தேவனுக்கும் அவருடைய இராஜ்யத்தின் கொள்கைகளுக்கும் சவால் விட்டான்.  தூதரில் மூன்றில் ஒரு பகுதியினர் லூசிபரோடு கலகத்தில் இணைந்தனர். (வெளிப்படுத்தல் 12:3,4,7-9).

தேவனுக்கும் அவருடைய அன்பின் கொள்கைகளுக்கும் எதிரான கலகம்தான் வேதாகமத்தில் பாவம் என்று அழைக்கப்படுகிறது (1 யோவான் 3:4; ஏசாயா 53:6). இது, குழப்பங்களையும், வேதனைகளையும், ஏமாற்றங்களையும், துக்கத்தையும், மறுதலிப்பையும், அனைத்துவிதமான தீமைகளையும் கொண்டுவருகிறது.  இவை எல்லாவற்றிக்கும்மேலாக இதன் தண்டனை மரணமே (ரோமர் 6:23).  அக்கினிக் கடலில் முடியும் இந்த மரணத்திலிருந்து உயிர்தெழுதல் கிடையாது (வெளிப்படுத்தல் 21:8).  பாவம் வெகு வேகமாகப் பரவுகிறது.  அது மிகக் கொடிய புற்றுநோயைவிடவும் மிகவும் நிச்சயமாகக் கொல்லக்கூடியது.  அது பிரபஞ்சம் முழுவதையும் ஆபத்திற்குள்ளாக்குகிறது.

எனவே தேவன் லூசிபரையும் அவனுடைய தூதரையும் பரலோகத்தைவிட்டு வெளியேற்றினார் (வெளிப்படுத்தல் 12:7-9). லூசிபர் “சத்துரு” என்று பொருள்படும் “சாத்தான்” என்கிற புதுப்பெயரைப் பெற்றான்.  அவனோடு விழுந்த தூதர்கள்: பேய்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.  சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் மயக்கினான்.  இவ்விதம் மனுக்குலத்தின்மேல் பாவம் வந்தது.  என்ன பயமுறுத்தும் சோதனை! தீமைக்கும் நன்மைக்குமிடையேயான அழிவுண்டாக்கும் போராட்டம் துவங்கியது.  தீமை வெற்றி பெறுவதுபோல காணப்பட்டு, சூழ்நிலை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது. ஆனால் அப்படியல்ல. 

இதுவரை வாழ்ந்திருந்த, இனிமேலும் வாழப்போகிற அனைத்து மக்களுக்கும் மேற்பட்டவரான இயேசு என்னும் தேவகுமாரன்தாமே, ஒவ்வொரு பாவியின் மரண தண்டனையையையும் செலுத்தித்தீர்க்க தம்மை தியாகம்செய்ய ஒப்புக் கொண்டார் (1 பொரிந்தியர் 5:7). அவருடைய தியாகத்தை ஏற்றுக்கொள்ளுவதினால் பாவி பாவ உணர்விலிருந்து விடுதலை பெறுகிறான் (ரோமர் 3:25).  ஒரு நபர் வருந்தி அழைக்கும்போது இயேசு அவருடைய வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதையும் (வெளிப்படுத்தல் 3:20), அவரை புதிய நபராக மாற்றுவதையும் (2 கொரிந்தியர் 5:17) இந்த மகிமையான திட்டம் உள்ளடக்கியிருக்கிறது.  சாத்தானை எதிர்க்கும் வல்லமையையும், மனந்திரும்பும் ஒவ்வொரு நபரையும் ஆதியில் உண்டாக்கப்பட்டவிதமாக தேவனுடைய சாயலுக்கு மாற்றும் வல்லமையையும் இது ஏற்பாடு செய்திருக்கிறது (ஆதியாகமம் 1:26,27; ரோமர் 8:29).

இந்த ஆசிர்வாதமான பாவ நிவாரணம் சாத்தானையும், விழுந்துபோன தூதரையும், அவனோடு கலகத்தில் இணையும் அனைவரையும் தனிமைப்படுத்தி அழிப்பதை உள்ளடக்கியிருக்கிறது (மத்தேயு 25:41; வெளிப்படுத்தல் 21:8).

மேலும், கிறிஸ்துவுடனோ அல்லது சாத்தானுடனோ இணைவதற்கேதுவாக, ஞானமான தெளிவான தீர்மானம் எடுப்பதற்கு, இயேசுவையும் அவருடைய அன்பின் இராஜ்யத்தையும், சாத்தானையும் அவனுடைய கொடூரமான சர்வதிகாரத்தையும் குறித்த முழு செய்தியும் அறிவிப்பும் பூமியிலிருக்கும் ஒவ்வொருவரிடமும் கொண்டுசெல்லப்படும் (மத்தேயு 24:14; வெளிப்படுத்தல் 14:6,7).

ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும் பரலோக நீதிமன்றத்தில் ஆராயப்படும் (ரோமர் 14:10-12).  பின்னர் கிறிஸ்துவையோ அல்லது சாத்தானையோ சேவிக்க ஒவ்வொருவரும் எடுக்கும் தீர்மானத்தை தேவன் கனப்படுத்துவார் (வெளிப்படுத்தல் 22:11,12).  பாவத்தை முடிவாக முற்றிலும் அழித்தபின்னர், பாவம் மீண்டும் எழும்பாது (நாகூம் 1:9) புதிய வானங்களையும் புதிய பூமியையும் சிருஷ்டித்து (2 பேதுரு 3:13; ஏசாயா 65:17), அவைகளை நித்திய வீடாக தமது மக்களுக்குக் கொடுப்பது தேவனுடைய திட்டம் (வெளிப்படுத்தல் 21:1-5). பின்னர் பிதாவும் குமாரனும் பூரண மகிழ்ச்சியிலும் நித்திய இணக்கத்திலும் என்றென்றுமாக தமது மக்களுடன் வசிப்பார்கள்.

இவையனைத்தும் பாவ நிவாரணத்தில் அடங்கியிருக்கிறது.  தேவன் இதை பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக்கூடார ஊழியங்களில் – விசேஷமாக பாவ நிவாரணநாளின் ஆராதனையில் விளக்கினார்.  இயேசுவே பாவ நிவாரணத்தின் திறவுகோல்.  கல்வாரியில் அவர் செய்த அன்பின் தியாகம், இவையனைத்தையும் சாத்தியமாக்குகிறது.  அவரால் மாத்திரம் நம் வாழ்க்கையிலும் பிரபஞ்சத்திலுமிருந்து  பாவத்தை அழிக்கக்கூடும் (அப்போஸ்தலர் 4:12). பரலோகத்தின் கடைசி முத்தூது அவரை தொழும்படி அனைவரையும் அழைப்பதில் (வெளிப்படுத்தல் 14:6-12) எந்த ஒரு ஆச்சரியமுமில்லை.

14. ஏன் சில வேதாகம விளக்கவுரையாளர்கள், யூத மக்களுக்கு குறிக்கப்பட்ட 490 வருடத்திலிருந்து கடைசி ஒரு வாரத்தை பிரித்தெடுத்து உலக சரித்திரத்தின் முடிவுகாலத்தில் வரும் அந்திகிறிஸ்துவின் வேலைக்கு அதைப் பொருத்துகிறார்கள்?

பதில்:  ஏன் யூத மக்களுக்கு கொடுக்கப்பட்ட 490 வருடங்களின் கடைசி 7 வருடங்களை அப்புறப்படுத்தி உலக சரித்திரத்தின் முடிவில் அதை பொருத்தவேண்டும் என்பது நல்ல கேள்வி.

சில உண்மைகளைப் பார்ப்போம்

அ. 490 வருட தீர்க்கதரிசனத்தின் இடையில் ஒரு பிளவை நுழைப்பதற்கு எங்கும் எப்படிப்பட்ட சான்றும் இல்லை.  தானியேல் 9:2 ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவ மக்களின் 70 வருட சிறையிறுப்பைப்போன்று இதுவும் தொடர்ச்சியான ஒன்று.

ஆ. வேதாகமத்திலிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்ட (நாட்கள், மாதங்கள், வருடங்கள், வாரங்கள்) தீர்க்கதரிசனங்கள் எங்குமே பிளவுபடவில்லை.  அவை தொடர்ச்சியானதாகவும் தொடர்ந்துவருகிறதாகவுமே இருக்கிறது.  காலத்தைக்குறித்த தீர்க்கதரிசனத்தின் எந்த ஒரு பகுதியும் பிரிக்கப்பட்டு வேறு எங்காவது சேர்க்கப்படவேண்டும் என்று சொல்லுகிறவர்கள் அதை நிரூபிக்கவும்வேண்டும்.

இ. “காலம் நிறைவேறியது” (மாற்கு 1:15) என்று இயேசு போதிக்கத் துவங்கிய கி.பி. 27ம் வருடமே (இயேசுவின் ஞானமுழுக்கு வருடம்) தீர்க்கதரிசனத்தின் கடைசி ஏழு வருடங்கள்

ஈ. கி.பி. 31ல் சிலுவையில் மரித்த அந்த நேரத்தில், “முடிந்தது” என்று இயேசு கதறினபோது, (யோவான் 19:30)

  1. “மேசியா சங்கரிக்கப்படுவார்” (வசனம் 26).
  2. நம் அனைவருக்காகவும் மெய்யான தேவ ஆட்டுக்குட்டியாக மரிப்பதினால் “பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்” (வசனம் 27; 1 கொரிந்தியர் 5:7; 15:3), மற்றும்
  3. “அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும்” (வசனம் 24) எனப்படுகிற தானியேல் 9 ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களையே இரட்சகர் தெளிவாக குறிப்பிட்டார்.

யூதர்களுக்குக் குறிக்கப்பட்ட 490 வருடங்களின் கடைசி வாரத்தை அல்லது ஏழு வருடங்களை பிரித்தெடுத்து, உலக சரித்திரத்தின் முடிவில் வரும் அந்திகிறிஸ்துவின் வேலைக்குப் பொருத்துவதற்கு, வேதாகமத்தில் எந்த ஆதாரமும் சான்றும் இல்லை.  இன்னும் தீவிரமாக பார்க்கும்போது, 490 வருட தீர்க்கதரிசனத்திலிருந்து கடைசி ஏழு வருடங்களைப் பிரித்தெடுப்பது, தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் அநேக தீர்க்கதரிசனங்களின் மெய்யான பொருளை சிதைக்கிறது.  மக்கள் அவைகளை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது.  எனவேதான் இந்த ஏழு வருட பிளவைப்போன்ற – தீர்க்கதரிசனத்தைக்குறித்த எந்த சுயதோற்றமான பொருளையும் தேவன் கடிந்துகொள்ளுகிறார்.  அப்படிப்பட்ட விளக்கங்கள் மக்களை வழிதப்பிப் போகச் செய்யும்.

15. இயேசு தம்மை தியாகபலியாக உனக்காக செலுத்தினார்.  உங்கள் பாவங்களை சுத்திகரித்தது புதிய மனிதனாக மாற்றும்படி அவரை அழைக்கீறீார்களா?

பதில்: __________________________________________________

சிந்தனைக் கேள்விகள்

1. தானியேல் 7லும் 8லும் சின்ன கொம்பின் வல்லமை தோன்றுகிறதே, அவை இரண்டும் ஒரே வல்லமைதானா?

பதில்: தானியேல் 7ல் வரும் சின்ன கொம்பின் வல்லமை போப்புமார்க்கத்தைக் குறிக்கிறது.  தாியேல் 8ல் வரும் சின்ன கொம்பின் வல்லமை போப்பு மற்றும் அஞ்ஞான ரோமைக் குறிக்கிறது.

2. தானியேல் 8:14ல் வரும் “2300 இராப்பகல்” எபிரெய மொழியிலிருந்து அப்படியே மொழிபெயர்த்தால் “2300 சாயங்காலங்களும் விடியற்காலங்களும்” என்று பொருள்படுகிறது.  அப்படியானால் அது சிலர் கூறுவதைப்போல 1150 நாட்களைக் குறிக்கிறதா?

பதில்:  இல்லை.  சாயங்காலமும் விடியற்காலமும்தான் ஒரு நாள் என்று ஆதியாகமம் 1:5,8,13,19,23,31 வசனங்கள் தெளிவாக காட்டுகின்றன.  இந்த தீர்க்கதரிசனத்தில் பொருந்தக்கூடிய எந்த சம்பவமும் 1150 நாட்களின் முடிவில் நடக்கவில்லை.

3. கிறிஸ்தவ வாழ்க்கையில் “தெரிந்துகொள்ளுதல்” என்ன பங்கு வகிக்கிறது?

தில்:  “தெரிந்துகொள்ளுதல்” வெற்றிக்கான முக்கியத் திறவுகோல், தேவனுடைய வழி எப்போதுமே தெரிந்துகொள்ளும் உரிமையை கொடுப்பதில்தான் இருக்கிறது (யோவான் 24:15). ஒவ்வொரு நபரையும் இரட்சிக்க விரும்புகிறபோதும் (1 தீமோத்தேயு 2:3,4), தெரிந்தெடுக்கும் சுதந்தரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுக்கிறார் (உபாகமம் 30:19).  தமக்கு விரோதமாக கலகம் செய்ய சாத்தானை அவர் அனுமதித்தார்.  கீழ்ப்படியாமையை தெரிந்துகொள்ள ஆதாமையும் ஏவாளையுங்கூட அவர் அனுமதித்தார். நீதி என்பது, நான் எவ்விதம் வாழ்ந்தாலும் அல்லது பரலோகம் போகும் விருப்பமற்றிருந்தாலுங்கூட என்னை அங்கு கொண்டுபோய் சேர்க்கும் முன்னதாகவே எழுதப்பட்ட ஏற்பாடு அல்ல.  என்னுடைய மனதை மாற்றும் உரிமை எனக்கு எப்போதும் இருக்கிறது என்று “தெரிந்துகொள்ளுதல்” காட்டுகிறது.  தம்மை தெரிந்தகொள்ளவும் (மத்தேயு 11:28-30), தெரிந்துகொள்ளுதலை ஒவ்வொருநாளும் உறுதிப்படுத்தவும் (யோசுவா 24:15) இயேசு என்னிடம் கேட்கிறார், நான் அன்றாடம் அவரைத் தெரிந்துகொள்ளம்போது, அவரைப்போல என்னை மாற்றி, தமது ஆசீர்வாதமான புதிய இராஜ்யத்திற்குள் முடிவாக என்னை எடுத்துச் செல்லுவார்.  ஆனால் எந்த நேரத்திலும் நான் வேறொரு திசையில் செல்லும் சுதந்திரம் பெற்றிருக்கிறேன் என்பதை தயவாக நினைவில் கொள்ளவேண்டும்.  தேவன் என்னை வற்புறுத்தமாட்டார். இவ்விதம் அன்றாடம் அவரை சேவிக்கத் தெரிந்துகொள்ளுவது மிக முக்கியமான ஒன்று.

4. தானியேல் 8ல் வரும் சின்ன கொம்பின் வல்லமை, செலூக்கிய இராஜாவான ஆன்டியோகஸ் எபிபேனஸ்தான் என்று அநேகர் நம்புகிறார்கள்.  இது உண்மையல்ல என்பதை நான் எவ்விதம் அறியலாம்?

பதில்:  இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.  அவற்றில் சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ. ஆன்டியோகஸ் எபிபேனஸ் தீர்க்கதரிசனம் சொல்லுவதைப்போல ஒருபோதும் “மிகவும் பெரியதாகவில்லை” (தானியேல் 8:9).

ஆ. அவன் தானியேல் 8:23 சொல்லுவதைப்போல, செலூக்கிய இராஜ்யத்தின் “கடைசி காலத்தில்” எழும்பவில்லை.  மாறாக, அவர்களுடைய ஆட்சியின் மையத்தில் எழும்பினான்.

இ. 2300 இராப்பகல்கள், 2300 வருடங்களுக்குச் சமம் என்கிற தீர்க்கதரிசன கொள்கையை, ஆன்டியோகஸ் எபிபேனஸ்தான் சின்ன கொம்பின் வல்லமை என்று சொல்லுகிறவர்கள் பின்பற்றவில்லை.  2300 நாட்களான ஆறு வருட காலம் தானியேல் 8 ம் அதிகாரத்திற்கு அர்த்தமுள்ள விளக்கத்தைக் கொடுக்கவில்லை.  இவ்விதம், அதை ஆன்டியோகஸ் எபிபேனஸ்-க்குப் பொருத்தின எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன.  அதைக் கொண்டுவந்தவர்களுக்கு அது வெட்கத்தை உண்டுபண்ணியது. 

ஈ. இந்த சின்ன கொம்பின் வல்லமை “முடிவு காலத்தில்” (தானியேல் 8:12,17,19) இருக்கும்.  ஆனால் ஆன்டியோகஸ் எபிபேனஸ் கி.மு. 164 லேயே மரித்துப்போனார்.

உ. தெற்குக்கும் கிழக்கிற்கும் எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் சின்ன கொம்பின் வல்லமை “மிகவும் பெரியதாயிற்று.” ஆன்டியோகஸ் எபிபேனஸ் பாலஸ்தீனத்தை கொஞ்சகாலம் ஆண்டிருந்தபோதும் அவனுக்கு எகிப்திலும் (தெற்கு) மக்கெதோனியாவிலும் (கிழக்கு) எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

ஊ. சின்ன கொம்பின் வல்லமை தேவனுடைய பரிசுத்த ஸ்தானத்தை தள்ளிற்று (தானியேல் 8:11). ஆன்டியோகஸ் எபிபேனஸ் எருசலேமின் ஆலயத்தை தீட்டுப்படுத்தினானே ஒழிய, அதை அழிக்கவில்லை.  அது கி.பி. 70ல் ரோமர்களாலேயே அழிக்கப்பட்டது.  அவன் எருசலேமையும் அழிக்கவில்லை (தானியேல் 9:26)

எ. தானியேல் 9:26,27 ல் வரும் “பாழாக்கும் அருவருப்பை” கிறிஸ்து கி.மு. 167ல் நடந்த ஆன்டியோகஸ் எபிபேனஸின் மூர்க்கத்திற்குப் பொருத்தாமல், தமக்குப்பின்னர், தம்முடைய சொந்த தலைமுறையிலேயே, ரோம படை எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்த கி.பி. 70 க்குப் பொருத்தினார் (லூக்கா 21:20-24).  மத்தேயு 24:15 ல் இயேசு தானியேல் தீர்க்கதரிசியை குறிப்பாகக் கூறி, பாழாக்கும் அருவருப்பை கிறிஸ்தவர்கள் (எதிர்காலத்தில்) எருசலேமிலுள்ள “பரிசுத்த ஸ்தலத்தில்”  நிற்கக் காணும்போது தானியேல் 9:26,27 நிறைவேறும் என்று கூறினார்.  இது தவறாக புரிந்துகொள்ளக்கூடாதபடி தெளிவாக இருக்கிறது.

ஏ. இறுதியாக, இஸ்ரவேல் தம்தை இராஜாவாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள மறுப்பதை, எருசலேம் அழிவோடு இயேசு தெளிவாக ஒப்பிட்டார் (மத்தேயு 21:33-45; 23:37,38; லூக்கா 19:41-44),  நகரமும் ஆலயமும் அழிக்கப்படுவதற்கு இடையிலிருக்கிற இந்த உறவுதான், தானியேல் 9:26,27 ன் முக்கியமான செய்தி.  490 வருடங்கள் அன்போடு கிருபையின் காலமாக கூட்டிக்கொடுக்கப்பட்டபின்பும், இஸ்ரவேல் தொடர்ந்து மேசியாவை நிராகரித்ததின்  விளைவை அறிவிக்கிற செய்தி அது.  இயேசுவின் பிறப்பிற்கு வெகு முன்பாகவே கி.மு. 164 ல் மரித்த ஆன்டியோகஸ் எபிபேனஸ்-க்கு இந்த தீர்க்கதரிசனத்தைப் பொருத்துவது, தானியேல் 9 ன் மிக முக்கியமான தீர்க்கதரிசனத்தின் பொருளை முழுவதுமாக அழித்துப் போடுகிறது.

கேள்விகள்

1. தானியேல் 8ல் வரும் “ஆட்டுக்கடா” குறிப்பது:  (1)

_____ பாபிலோன்.
_____ மேதிய பெர்சிய.
_____ கிரேக்கு.
_____ ரோம்.


2. தானியேல் 8ன் “வெள்ளாட்டுக்கடா” குறிப்பது: (1)

_____ எகிப்து.
_____ பாலஸ்தீனம்.
_____ கிரேக்கு.
_____ அசீரியா.


3. தானியேல் 8ன் “சின்ன கொம்பு வல்லமை” குறிப்பது: (1)

_____ ஆன்டியோகஸ் எபிபேனஸ்.
_____ ரோமின் அஞ்ஞான மற்றும் போப்புமார்க்கம்.
_____ நாத்தீகம்.
_____ ஈராக்.


4. முற்கால இஸ்ரவேலின் பாவ நிவாரண நாள் ஒரு நியாயத்தீர்ப்பின் நாள்:
(1)

_____ ஆம்.
_____ இல்லை.


5. 2300 வருடங்களின் எந்த பகுதி யூதர்களுக்குக் குறிக்கப்பட்டது? (1)

_____ 490 வருடங்கள்.
_____ 700 வருடங்கள்.
_____ 1810 வருடங்கள்.
_____ 100 வருடங்கள்.


6. வேதாகம தீர்க்கதரிசனத்தில் ஒரு தீர்க்கதரிசன நாள் ஒரு வருடத்திற்குச் சமம்: (1)

_____ ஆம்
_____ இல்லை.


7. 2300 வருட தீர்க்கதரிசனம் (நடப்பதற்கு 500 வருடங்களுக்கு முன்பே), மேசியா கி.பி. 27ல் தோன்றுவார் என்று கூறியது. அவர் சரியான நேரத்தில் தோன்றனார். இது: (3)

_____ வேதாகமம் ஏவப்பட்டு எழுதப்பட்டதை நிரூபிக்கிறது.
_____ காபிரியேல் தூதன் சரியாக யூகித்தான் என்பதை காட்டுகிறது.
_____ தீர்க்கதரிசனத்தின் மற்ற அனைத்து தேதிகளும் துல்லியமானவை என்று நிரூபிக்கிறது.
_____ இயேசுதான் மேசியா என்று நிரூபிக்கிறது.


8. யூத தேசத்திற்கு ஒதுக்கப்பட்ட 490 வருடங்கள் கி.பி. 34ல் முடிவடைந்தபோது சீடர்கள் என்ன செய்தனர்? (1)

_____ மற்ற தேசங்களின் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினர்.
_____ அவர்கள் நீண்ட விடுமுறையில் சென்றனர்.
_____ கி.பி. 34க்குப்பின் எந்த யூதனும் இரட்சிக்கப்படமுடியாது என்று கூறினர்


9. தானியேல் 8,9ன் 2300 வருட தீர்க்கதரிசனத்தின்படி 1844ல் என்ன நடந்தது? (1)

_____ பரலோகத்தில் நியாயத்தீர்ப்பு துவங்கியது.
_____ யூதர்களுக்கான கிருபையின் காலம் முடிந்தது.
_____ இயேசு பரலோகத்திற்கு ஏறினார்.
_____ அனைவருக்கும் கிருபையின் காலம் முடிவடைந்தது.


10. பரலோக பாவ நிவாரண நாள், பிரபஞ்சம் முழுவதையும் தேவனுடனான முப இணக்கத்திற்குக் கொண்டுவரும்! பாவ நிவாரணத்தைக் குறித்த சில முகப்புகள்: (10)
_____ நம்முடைய பாவகடனைச் செலுத்த இயேசு தமது வாழ்க்கையை தியாகம் செய்தார்.
_____ பாவத்தின் குற்றத்திலிருந்து இயேசு நம்மை விடுவித்தார்.
_____ இயேசு நம்மை மாற்றி, முழுவதும் புதிய நபராக்குகிறார்.
_____ இயேசு தேவனுடைய சாயலுக்கு நம்மை மீண்டும் கொண்டுவருகிறார்.
_____ பரலோக நீதிமன்றத்தில் கிறிஸ்துவையோ அல்லது சாத்தானையே சேவிக்கும்படி ஒவ்வொரு நபரும் எடுத்த தீர்மானத்தை இயேசு கனப்படுத்துகிறார்.
_____ அழிக்கும் சாத்தானின் திட்டத்தையும், இரட்சிக்கும் தேவனுடைய மகிமையான திட்டத்தையுங்குறித்த முழுமையான அறிவிப்பு பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரையும் சென்றடைகிறது.

_____ பாவமும், சாத்தானும், பாவிகளும் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
_____ தேவன் தமது மக்களுக்காக புதிய வானங்களையும் புதிய பூமியையும் உண்டாக்கி அவர்களோடுகூட வாசம் செய்வார்.
_____ பாவம் மீண்டும் எழும்பாது.
_____ கல்வாரியில் இயேசுவின் தியாகத்தின் வழியாக பாவ நிவாரணம் சாத்தியமாகிறது.
_____ சாத்தானும் அவனுடைய தூதர்களும் மனமாறி இரட்சிக்கப்படுவார்கள்.


11. யூத தேசத்திற்கு குறிக்கப்பட்ட 490 வருடங்களின் கடைசி வாரத்தை அல்லது ஏழு வருடங்களை பிரித்தெடுத்து, உலக சரித்திரத்தின் முடிவில் நடக்கும் அந்திகிறிஸ்துவின் செய்கைக்குப் பொருத்துவதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் சான்றும் இல்லை. (1)

_____ உண்மை.
_____ பொய்.


12. கி.பி. 34ல்: (3)

______ தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமென்ற கிருபையின் காலம் யூதர்களுக்கு முடிவடைந்தது.
_____ மற்ற மக்களுக்கு தேசங்களுக்கும் சீடர்கள் போதிக்க துவங்கினர்.
_____ நீதிமானாகிய மூப்பன் ஸ்தேவான் கல்லெறியப்பட்டான்.
_____ பரலோகத்தில் நியாயத்தீர்ப்பு துவங்கியது.


13. 2300 இராப்பகல் துவங்கிய வருடம்: (1)

_____ கி.பி. 34.
_____ 1944.
_____ கி.மு. 1491.
_____ கி.மு. 457.


14. தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகத்தின் தீர்க்கதரிசனங்கள் நமக்கும் நம்முடைய காலத்திற்கும் முக்கியமாக பொருந்துகிறது. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


15. என் வாழ்க்கைக்கான கிறிஸ்துவின் பாவநிவாரண பலியை நான் ஏற்றுக்கொண்டு, என் பாவங்களைக் கழுவும்படி அவரை அழைக்கிறேன்.

_____ ஆம்.
_____ இல்லை