வேதாகம தீர்க்கதரிசனத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள்

வேதபாடங்கள் 21

வேதாகம தீர்க்கதரிசனத்தில் அமெரிக்க தேசம் இருக்கிறது என்பது உண்மையாக இருக்கமுடியுமா?

ஆமாம்! பூமியின் நாடுகளிலே மிகவும் வல்லமையும் செல்வாக்குமுள்ள நாடு, உலகத்தின் முடிவுகால சரித்திரத்தின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று யோசிக்கும்போது இது அர்த்தமுள்ளதாயிருக்கும்.  இருப்பினும், உலகத்தின் முன்னணியில் நிற்கும் இந்த நாடு எதற்காக, எவ்விதம் உருவாகியது என்கிறதை வேதாகமம் வெளிக்கொண்டுவரும்போது இன்னும் அதிக ஆச்சரியங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.  இந்த பாடத்தை துவங்கும் முன்பாக வெளிப்படுத்தல் 13:11-18ஐ தயவாக படியுங்கள்.  ஏனெனில் இந்த 8 வசனங்களும் இனி வரப்போகும் நாட்களில் அமெரிக்காவைக்குறித்த தீர்க்கதரிசன படத்தைக் கொடுக்கிறது.

1. வெளிப்படுத்தல் 13ல் இரண்டு வல்லமைகள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றனவே, அதில் முதல் வல்லமை எது?

பதில்:  ஏழு தலைகளையுடைய மிருகம் (வௌிப்படுத்தல் 13:1-10) ரோம போப்புமார்க்கமே அல்லாது வேறல்ல.  (இந்த தலைப்பைக்குறித்த முழுமையான விளக்கத்தை பாடம் 15ல் பார்க்கவும்). வேதாகம தீர்க்கதரிசனங்களில் மிருகம் என்பது தேசங்களை அல்லது உலக வல்லமைகளை அடையாளப்படுத்துகிறது என்பதை நினைவுகூறுங்கள் (தானியேல் 7:17,23).

2. போப்புமார்க்கம் தன்னுடைய உலக செல்வாக்கையும் வல்லமையையும் எந்த வருடத்தில் இழக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டிருந்தது?

“நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது” – வெளிப்படுத்தல் 13:5.

பதில்:  போப்புமார்க்கம் தனது உலக செல்வாக்கையும் வல்லமையையும் 42 மாதங்களின் முடிவில் இழக்கும் என்று வேதாகமம் முன்னறிவித்திருந்தது.  இந்த தீர்க்கதரிசனம் 1798ல் நெப்போலியனுடைய தளபதி பெர்த்தியர் போப்புவை சிறைபிடித்தபோது நிறைவேறியது.  போப்பு வல்லமை சாவுக்கேதுவாக காயமடைந்தது. (முழுமையான விவரங்களுக்கு பாடம் 15 ஐ பார்க்கவும்).

3.போப்புமார்க்கம் சாவுக்கேதுவாக காயமடைந்த அந்த சமயத்திலே எந்த தேசம் எழும்பும் என்று முன்சொல்லப்பட்டிருந்தது?

“வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது” – வெளிப்படுத்தல் 13:11.

தில்:  வசனம் 10ல் சொல்லப்பட்டிருக்கிற போப்புமார்க்கத்தின் சிறைபிடிப்பு 1798-ல் நடந்தது.  அந்த நேரத்தில் ஒரு புதிய வல்லமை (வசனம் 11) எழும்புவது காணப்பட்டது.  அமெரிக்க ஐக்கிய நாடு தனது சுதந்திரத்தை 1776-ல் அறிவித்து, 1787-ல் தன் அரசியலமைப்பை தெரிந்தெடுத்து, 1791-ல் தனது உரிமைகளின் மசோதாவைப் பின்பற்றத் தொடங்கி, 1798-ல் உலக வல்லமையாக தெளிவாக உணரப்பட்டது.  இந்த காலங்கள் அமெரிக்காவிற்கு வெளிப்படையாகப் பொருந்துகின்றன.  வேறு எந்த வல்லமையும் அந்த தகுதியைப் பெறமுடியாது.

4. “பூமியிலிருந்து எழும்பின” மிருகத்தின் குறிப்படையாளம் என்ன?

பதில்:  இந்த தேசம் தானியேலும் வெளிப்படுத்தலும் குறிப்பிடுகிற மற்ற தேசங்களைப்போல தண்ணீரிலிருந்து எழும்பாமல், “பூமியிலிருந்து” எழும்புகிறது.  தண்ணீர் மக்கள் தொகை மிகுந்த இடங்களை அடையாளப்படுத்தினது என்று நாம் அறிவோம்.

“அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்” – வெளிப்படுத்தல் 17:15.  இப்படியிருக்க பூமி என்றால் அதற்கு எதிரானது.  அதாவது 1700 க்கு முன்பாக வெகுசிலரே குடியேறியிருந்த ஒரு இடத்திலிருந்து இந்த புதிய தேசம் எழும்பும் என்று பொருள். பழைய உலகத்தின் நெருக்கடிகளும் சந்தடிகளும் நிறைந்த இடத்திற்கு நடுவிலிருந்து எழும்பாமல், குறைவான மக்கள்தொகை கொண்ட கண்டத்திலிருந்து அது எழும்பி வரவேண்டும்.

5. அதனுடைய கிரீடம் இல்லாத ஆட்டுக்குட்டிக்கொப்பான இரண்டு கொம்புகளால் என்ன அடையாளப்படுத்தப்படுகின்றது?

பதில்:  கொம்புகள் இராஜாக்களையும் இராஜாங்கத்தையும் அல்லது அரசாங்கத்தை எடுத்துக்காட்டுகிறது (தானியேல் 7:24; 8:21).

இங்கே இது தனிநபர் சுதந்திரம் மற்றும் மத சுதந்திரமாகிய அமெரிக்காவின் இரண்டு நிர்வாகக் கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறது.  இந்த இரண்டு ஆட்சி செய்யும் கொள்கைகளும் “குடியரசு கொள்கை” (அரசனில்லாத அரசாங்கம்) என்றும், “புரொட்டஸ்டண்டு கொள்கை” (போப்பு இல்லாத சபை) என்றும்கூட அழைக்கப்படுகின்றன.  நாட்டின் மதத்திற்கு ஆதரவு தரும்படி மற்ற தேசங்கள் ஆதிகாலத்திலிருந்தே மக்களை வற்புறுத்தின.  அநேக தேசங்கள் அவ்விதம் மதத்திற்கு இணங்கிப்போகாதவர்களை ஒடுக்கவும் செய்தன.  ஆனால் அமெரிக்கா முற்றிலும் புதிய ஒன்றை நிலைநிறுத்தியது.  விருப்பப்படி ஆராதனை செய்வதற்கான சுதந்தரத்தை-அரசாங்கம் தலையிடாத அல்லது கட்டுப்படுத்தாத, ஆனாலும் பாதுகாப்பளிக்கிற சுதந்திரத்தை- நிலைநிறுத்தியது.  கிரீடங்கள் இல்லாதிருந்தது.  தனிநபர் ஆட்சியல்லாத குடியரசு அமைப்பைக் காட்டுகிறது;  ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புகள், குற்றமற்ற, இளமையான, ஒடுக்காத, சமாதானத்தை நேசிக்கிற, ஆவிக்குரிய தேசத்தை எடுத்துக்காட்டுகிறது.  இயேசுகிறிஸ்து ஆட்டுக்குட்டியாக 28 முறை வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.  இவ்விதம் இந்த புதிய அரசாங்கம் இயேசுவின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்க முயன்றது.  அமெரிக்காவைத் தவிர்த்து உலகத்திலுள்ள வேறு எந்த வல்லமையும் இந்த குணாதிசயங்களிலும், (ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புகளையுடைய மிருகம் எழும்பிய) நேரத்திலும் பொருந்த முடியாது.

விசேஷ குறிப்பு:  இயேசு அமெரிக்காவை வர்ணிக்கிறதை இங்கே நிறுத்தவே விரும்புகிறோம்; ஆனால் முடியாது!  ஏனெனில், அவர் நிறுத்தவில்லை.  அடுத்து வருவது நம்மை அசைக்ககூடியதும், நம்மில் பய உணர்வை எழுப்பக்கூடியதுமாக இருக்கும்.  மனசாட்சி சுதந்தரம், எழுத்து சுதந்தரம், பேச்சு சுதந்தரம், அதன் சாசகங்கள், அது ஏற்பாடு செய்திருக்கிற பாதுகாப்பு, அங்கிருக்கும் சந்தர்ப்பங்கள், நியாயத்தைக்குறித்த உணர்வுகள், கீழானவர்கள்மேலிருக்கும் பரிதாபம், மேலும் அதனுடைய கிறிஸ்தவ துவக்கம் இவைகள் இருப்பதினால் அமெரிக்கா உண்மையிலேயே பெரிய தேசம்தான்.  அதல் குறைகள் இருக்கிறதுதான்; எனினும், மற்ற நாடுகளிலிருக்கிற கூட்டங்கூட்டமான மக்கள் அமெரிக்கா குடிமகன்களாக ஒவ்வொரு வருடமும் துரிதப்படுகின்றனர்.  அமெரிக்காவின் கதவுகள் தாராளமாகத் திறந்திருக்குமெனில் உலகத்தின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உடனடியாக “பூமியிலிருக்கும் பரலோகம்” என்று உணரப்படுகிற அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துவிடுவார்கள்.  வருந்தக்கூடியவிதத்தில், அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட இந்த தேசம் சற்றுகாலத்தில் சடிதியாக மாறும்.  தேவனுடைய மக்களுக்கு இணையில்லாத வேதனையையும் ஆபத்தையும் சேர்க்கும்.  இதை நாங்கள் அடக்கமாகவும் ஆழ்ந்த கரிசனையோடும் அறிவிக்கிறோம்.

6.வெளிப்படுத்தல் 13:11ல் அமெரிக்கா வலுசர்ப்பத்தைப்போல பேசும் என்கிற தீர்க்கதரிசனத்தின் பொருள் என்ன?

பதில்:  பூமியிலிருக்கிற பல்வேறு அரசாங்கங்களைக்கொண்டு தன்னுடைய தீய இராஜ்யத்தை நிலைப்படுத்தி, தேவனுடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தி அழிப்பதன் வழியாக தேவனுடைய சபையை நசுக்க செயல்படுகிற வலுசர்ப்பம் சாத்தான்தான் என்று பாடம் 20ல் நாம் படித்தோம்.  தேவனுடைய அதிகாரத்தையும் சிங்காசனத்தையும் பறித்துக்கொண்டு, தன்னை ஆராதித்து தனக்கு பணியும்படியாக மக்களை நிர்பந்திப்பதே எப்போதும் சாத்தானுடைய நோக்கம். (பாடம் 2ஐ பார்க்கவும்).  எனவே “வலுசர்ப்பத்தைப்போல பேசினது” – மனசாட்சிக்கு எதிராக ஆராதனை செய்ய கடைசிகாலத்தில் சாத்தானுடைய செல்வாக்கினால் அமெரிக்கா மக்களை நிர்பந்திக்கும்.  அவ்விதம் ஆராதனை செய்யாதபட்சத்தில் அவர்களைத் தண்டிக்கும்.

7.வலுசர்ப்பத்தைப்போல அமெரிக்காவை பேசவைக்கிற குறிப்பான செயல் எது?

பதில்:  நான்கு முக்கியமான கருத்துக்களை கவனியுங்கள்.

அ. “அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து” – வெளிப்படுத்தல் 13:12: வெளிப்படுத்தல் 13 ன் முந்தைய பாகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற போப்புமார்க்கத்தைப்போலவே, தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட அமெரிக்காவும் மக்களை உபத்திரவப்படுத்தும்.

ஆ. “சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது” – வெளிப்படுத்தல் 13:12: போப்புமார்க்கத்தின் அந்திகிறிஸ்துவுக்கு உண்மையாயிருக்கவும், அதை ஆராதிக்கவும், அமெரிக்கா ஐக்கிய நாடு உலகத்தின் நாடுகளைக் கொண்டுசெல்லும்.  தொழுகையே எப்போதும் இதன் வாதமாக இருக்கும். உங்கள் ஆராதனையும் கீழ்ப்படிதலும் யாருக்கு?  உங்கள் சிருஷ்டிகரும் மீட்பருமாகிய கிறிஸ்துவிற்கா அல்லது அந்திகிறிஸ்துவிற்கா?  பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் இவர்களில் யாராவது ஒருவரைத்தான் ஆராதிப்பார்கள்.  முழுவதும் ஆவிக்குரியதுபோல காணப்படும்; நம்பக்கூடாத அற்புதங்கள் நடப்பிக்கப்படும் (வெளிப்படுத்தல் 3:14,15); அது கோடிக்கணக்கானோரை வஞ்சிக்கும் (வெளிப்படுத்தல் 13:3); இந்த இயக்கத்தில் சேர மறுக்கிறவர்கள் தேவனற்றவர்களாக கருதப்படுவார்கள்.  ஆவிக்குரியதுபோலவும் நம்பத்தகுந்ததுபோலவும் காணப்பட்டு, தன் நடக்கைகளில் சாத்தானைப்போல இருக்கும் கடைசிகால புரொட்டஸ்டண்டு அமெரிக்காவை, இயேசு “கள்ளத்தீர்க்கதரிசி” என்று அழைக்கிறார் (வெளிப்படுத்தல் 19:20; 20:10).  இதெல்லாம் நடக்கக்கூடாததைப்போலத் தோன்றலாம்.  ஆனால் இயேசுவின் வார்த்தைகள் முழுவதும் நம்பக்கூடியதும் உண்மையுமானவை (தீத்து 1:2). நான்கு உலக சாம்ராஜ்யங்களும் அந்திகிறிஸ்துவும் எழும்புவதையும் விழுவதையுங்குறித்து அவர் முன்னறிவித்தபோது (தானியேல் 2, மற்றும் 7) அந்த முன்னறிவிப்புகள் நடப்பில் இல்லாதவையாகவும் நம்பக்கூடாதவைபோலும் தோன்றியது.  எனினும் சொல்லப்பட்டவிதமாகவே மிகவும் குறிப்பாக இவைகள் நடந்தேறின. “இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 14:29) என்பதே தர்க்கதரிசனத்தைக்குறித்து இன்று நமக்குக் கொடுக்கப்படுகிற இயேசுவின் எச்சரிப்பு.

இ. “பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று” – வெளிப்படுத்தல் 13:14.  மத செய்கையைக்குறித்த சட்டமியற்றுவதன்வழியாக அமெரிக்க ஐக்கிய நாடு மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணும்.  தொழகையை கோரும் சட்டமியற்றி, கீழ்ப்படியவோ அல்லது மரணத்தை சந்திக்கவோ அது மக்களை நிர்பந்திக்கும்.  தன்னுடைய அதிகாரத்தின் உச்சகாலத்தில் இருந்தபோது இலட்சக்கணக்கானோரை அவர்களுடைய விசுவாசத்திற்காக கொலைசெய்ய போப்புமார்க்கம் உபயோகித்த சபை மற்றும் அரசியல் இணைப்பின் நகல் அல்லது சொரூபமே இந்த செயல்.  உள்நாட்டு அரசாங்கத்தையும் விசுவாசதுரோகம் செய்த புரொட்டஸ்டண்டு மார்க்கத்தையும் போப்புமார்க்கத்திற்கு ஆதரவு அளிக்கும்படியாக அமெரிக்கா ஒன்றிணைக்கும்.  பின்னர் தன்னுடைய உதாரணத்தைப் பின்பற்றும்படி அனைத்து நாடுகள்மேலும் அது தன் தாக்கத்தைச் செலுத்தும்.  இவ்விதம் போப்புமார்க்கம் உலகளாவிய ஆதரவைப் பெறும்.

ஈ. “மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும்” – வெளிப்படுத்தல் 13:15.  உலகளாவிய இயக்கத்தின் தலைமையிலிருக்கும் அமெரிக்க ஐக்கிய தேசம் அடுத்ததாக மிருகத்தை அல்லது அதன் சொரூபத்தை வணங்க மறுக்கிற அனைவருக்கும் மரண தண்டனை கொடுக்கும்படி உலக நாடுகள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த உலகளாவிய கூட்டிணைப்பின் மறுபெயர்தான் “மகா பாபிலோன்”. (பாடம் 22 இன்னும் அதிக விளக்கங்களைக் கொடுக்கும்).  பரிசுத்த ஆவியின் உந்துதலுக்கு பதிலாக காவல்காரனின் வல்லமையை வைத்து இயேசுவின் பெயரிலான உலகளாவிய இந்த இணைப்பு ஆராதனையை கட்டாயப்படுத்தும்.

8.எந்த குறிப்பிட்ட காரியத்திற்காக பலம் உபயோகிக்கப்பட்டு, மரண தண்டனை இயற்றப்படும்?

“மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதி் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது” – வெளிப்படுத்தல் 13:15-17.

பதில்:  போராட்டத்தி்ன் முடிவான குறிப்பு, மிருகத்தை வணங்கி அதற்குக் கீழ்ப்படிந்து அதனுடைய முத்திரையை பெற்றுக்கொள்ளுவதற்கும்-ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தநாளாக ஆசரிப்பதற்கும், கிறிஸ்துவை வணங்கி அவருக்கு கீழ்ப்படிந்து  அவருடைய முத்திரையை பெற்றுக்கொள்ளுவதற்கும்-தேவனுடைய பரிசுத்த ஏழாம்நாள் ஓய்வை ஆசரிப்பதற்கும் இடையே இருக்கும்.  (விளக்கத்திற்கு பாடம் 20ஐ பார்க்கவும்). இந்தக் காரியங்கள் தெளிவாகி, ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்து ஓய்வுநாளை மீறவோ, அதை மறுத்தால் கொல்லப்படவோ மக்கள் கட்டாயப்படுத்தப்படும்போது, ஓய்வுநாளுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையை தெரிந்துகொள்பவர்கள் மிருகத்தை வணங்குவதாக பொருள்படும்.  சிருஷ்டிகர்த்தாவாகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு பதிலாக உண்டாக்கப்பட்ட ஒரு மனிதனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய அவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள்..  போப்புமார்க்கத்தின் சொந்த வாக்கியத்தை கவனியுங்கள். “சபை ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியது.  கத்தோலிக்க சபையின் கட்டளைக்கு மெளனமாக கீழ்ப்படிந்து உலகம் முழுவதும் அந்த நாளில் தாழ பணிந்து ஆராதனை செய்கிறது.”- Hartford Weekly Call, February 22, 1884.

9. வாங்குவதையும் விற்பதையும் அரசாங்கத்தால் உண்மையில் கட்டுப்படுத்த முடியுமா?

பதில்:  இரண்டாம் உலகயுத்தத்தில் சில பொருட்களை வாங்குவதற்கு (சக்கரை, சக்கரங்கள், வாகன எரிபொருள் போன்றவற்றை) ரேஷன் பத்திரங்கள் தேவைப்பட்டன.  பத்திரங்களில்லாதபோது பணம் மதிப்பற்றதாக கருதப்படும்.  இந்த கணினி யுகத்தில், கமூக பாதுகாப்பு எண்ணின் (ஆதார் எண்) அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இலகுவாக ஏற்படுத்தப்படமுடியும்.  உலக கூட்டணியோடு இனைந்துபோக நீங்கள் ஒப்புகொள்ளாதபட்சத்தில் பொருட்கள் வாங்குவதற்கு முன்னதாகவே உங்களுடைய எண் உங்களை தகுதியற்றவர்களென்று காண்பிக்கக்கூடும்.  இவையெல்லாம் எவ்விதம் நடக்கும் என்கிறது நமக்கு குறிப்பாக தெரியாது.  ஆனால் இவை நடக்கும் என்று நாம் நம்பிக்கையாயிருக்கலாம். வெளிப்படுத்தல் 13:16,17ல் இவ்விதம் நடக்கும் என்று தேவன் கூறுகிறார்.

எழும்பும் இரண்டு வல்லமைகள்

  கடைசி நாட்களில் அமெரிக்க, ஐக்கிய தேசம் மற்றும் போப்புமார்க்கம் என்கிற இரண்டு மகா பெரிய வல்லமைகள் எழும்பும் என்று வெளிப்படுத்தல் 13 தெளிவாக சொல்லுகிறது.  மிருகத்தை வணங்கி மரணத்தின்பேரில் அதன் முத்திரையை பெற்றுக்கொள்ளும்படி மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு உந்துதலை ஏற்படுத்துவதன்வழியாக,, அமெரிக்க ஐக்கிய தேசம் போப்புமார்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கும்.  கீழ்கண்ட இரண்டு போள்விகளும் இந்த மாபெரும் வல்லமைகளின் பலத்தை கணக்கிடுகின்றன.

10.போப்புமார்க்கம் இன்றைக்கு எவ்வளவு வல்லமையையும் செல்வாக்கையும் கொண்டிருக்கிறது?

பதில்:  அவள்தான் உலகத்திலேயே மிக பலமான அரசியல் வல்லமை, உலகத்தின் ஏறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளின் அதிகாரப்பூர்வ முகவரும் வாட்டிகனில் இருக்கிறார்கள். கீழ்காணும் உண்மைகளை கவனியுங்கள்.

அ. மிகப்பெரிய கொள்கைகளை ஏற்படுத்தும் முன்பாக ஏறக்குறைய பெரிய நாடுகள் அனைத்தும் அவளோடு கலந்து ஆலோசிக்கும் அளவு போப்புமார்க்கம் மிகவும் செல்வாக்கும் வல்லமையுமுடையதாக இருக்கிறது.  அவளுடைய பரந்த தூதராக காவல் நூற்றுக்கும்மேலான நாடுகளுடன் உறவு வைத்திருக்கிறது – U.S. News and World Report. October 30, 1978, P. 24.

ஆ. பொதுவுடமையை (கம்யூனிசத்தை) ஒன்றுமில்லாமல் செய்த போப்புவின் தந்திரத்தை இயேசுவின் தாயாகிய மரியாள் நடத்தினாள் என்று சொல்லி, கம்யூனிசத்தை தான் உடைத்ததாக அது உரிமை பாராட்டுகிறது. – “Handmaid or Feminist” Time. December 30, 1991, PP. 64. 65.

இ. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக போப்புமார்க்கத்தின் தலைமையின்கீழ் கிறிஸ்தவ உலகத்தை ஒன்றுபடுத்துவதுதான் போப்புவின் நோக்கம்.  இந்த நோக்கத்திற்கான தளத்தை அமைப்பதற்கு அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட உலக பயணங்களைச் செய்திருக்கிறார். – Gene H. Hogberg, The Plain Truth, November/December 1989, PP. 24, 25.

ஈ. உலகளாவிய பதிலும் மிகவும் சாதகமாக இருந்துவருகிறது.  ஈராக்கின் நெருக்கடியில் போப்புவும் அமெரிக்க அதிபதியும் சிலவேளைகளில் தொலைபேசியின்வழியாக உலக நடக்கைகளை வாரந்தோறும் விவாதித்தனர் – U.S. News and World Report, August 13, 1990, P. 18.

உ. 1982 ஜீன் 7ம் தேதி, முந்தைய அதிபதி ரொனால்ட் ரீகனும் இரண்டாவது போப் ஜான் பாலும் வாடிகனில் 50 நிமிடங்கள் சந்தித்து கம்யுனிசத்தை ஒழிப்பதற்கான திட்டத்தை வரைந்தனர்.  தேவையான விவரங்களை மக்களிடம் பரப்புவதற்காக, நவீன தொடர்பு சாதனங்களை ஆயிரக்கணக்கான கிலோவில் போலந்திற்கு (அதுதான் துவக்க இடம்) அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்றுமதி செய்தது. – “The Holy Alliance,” Time, February 1992, PP. 28, 31, 35.

ஊ. “போப்பினுடைய முயற்சிகளும், அரசியல் உட்பட உலக அரங்கிலான அவருடைய பங்கீடும் இல்லாது கிழக்கு ஐரோப்பாவில் சமீபித்திய வருடங்களில் நடந்த அனைத்தும் நடந்திருக்கமுடியாது என்று கோர்பசேவ் கூறினார்.” – Milkhail Gorbachev, Toronta Star, March 9, 1992.

புரொட்டஸ்டண்டுகளை முதலில் “துரோகிகள்” என்று குறிப்பிட்டிருந்த போப்புமார்க்கம் இப்போது அவர்களை “பிரிந்துசென்ற சகோதரர்கள்” என்று அழைத்து, உலக சமாதானத்திற்காகவும் ஆண்டவருடைய பிரசன்னத்திற்காகவும் ஜெபிக்க ஆலோசனை கூறிக்கொண்டிருக்கிறது.  இலட்சக்கணக்கான புரொட்டஸ்டண்டுகள் ஆழமாக உணர்த்தப்பட்டிருக்கின்றனர்.  கூறப்போனால் மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருந்த வேறுபாடுகளை முடிவிற்கு கொண்டுவர முயலும்படி போப்புமார்க்கத்தோடு அநேக புரொஸ்டண்டு அமைப்புகள் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

11.இன்று ஐக்கிய நாடுகள் எந்த அளவிற்கு வலிமை வாய்ந்ததாகவும் செல்வாக்கை உடையதாகவும் இருக்கிறது?

பதில்:  ஐக்கிய நாடுகளே உலக செல்வாக்கின் மையமாகவும் உலகின் மிக வல்லமையான இராணுவத்தை வைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

அ. “வல்லமையின் முக்கிய வகைபாடுகளில் பார்க்கும்போது, ஐக்கிய நாடுகளே எதிர்காலத்திலும் மேலாதிக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.” – Ian Bremmer, Time magazine, May 28, 2015.

ஆ. “யுத்தம் மற்றும் சமாதானத்திற்கு இடையேயான வித்தியாசத்தை இறுதியில் காண்பிப்பது எது … நல்ல நோக்கங்களோ அல்லது வலிமையான சொற்களோ அல்லது மாபெரும் தற்காலிகக் கூட்டணியோ அல்ல, ஆனால் உறுதியான அமெரிக்க வல்லமையின் செயல் திறனும், நம்பகத்தன்மையும் மற்றும் அதன் உலகளாவிய இலக்காகும்.” – Senator John McCain, November 15, 2014.

இ. “ஐக்கிய நாடுகளே இப்பொழுதும் எப்பொழுதும் மிகவும் இன்றியமையாத தேசமாக இருக்கும்.  இக்கருத்து கடந்த நூற்றாண்டின் உண்மையாக இருந்தது.  இனிவரும் நூற்றாண்டிற்கும் இதுவே உண்மையாக இருக்கும்.” – President Barak Obama, May 28, 2014.

ஈ. “பிரான்ஸ் நாட்டின் முன்னால் அமைச்சரான ஹீபர்ட் வர்டின் என்பவர் பாரீஸ் மக்களிடம் ஐக்கிய நாடுகளை “ஹைப்பர் பவர்” அதாவது … ஆதிக்கம் செலுத்தக்கூடிய, மிகுந்த வலிமை வாய்ந்த நாடு என்று கூறினார்” – The New York Times, February 5, 1999.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களிடமிருந்து தன் வல்லமைக்கு எதிராக சவால்களை உண்மையாக சந்தித்தாலும், உலகத்தை  தொடர்ந்து ஆளுகை செய்வதற்கு அமெரிக்காவின் அடக்கியாளும் ஆற்றலானது, தேவைப்படும்போது துரிதமாக அதின் எதிரிகளை செயலிழக்கச்செய்து தன் பலத்தை விரிவுபடுத்தும்.  ஒரு கடுமையான உலக நிகழ்வுக்குப்பின், அமெரிக்காவின் எதிர்கால அதிபர் புதிய உலகச் சட்டங்களை, விசேஷமாக அவை உலக சமாதானம் மற்றும் அதின் ஸ்திரத்தன்மைக்காக என்ற போர்வையில் இருந்தாலும், அவற்றை பிறப்பிப்பதற்கு தேசத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்.

12.மனசாட்சிக்கு விரோதமாகப் பாவம் செய்யாதவர்களை அழிக்க ஒரு உலகளாவிய சட்டம் இயற்றப்படுவதற்கான சூழலை அமைக்க உதவும் மற்றக் காரணிகள் என்ன?

பதில்:  குறிப்பாக நம்மால் சொல்லமுடியாது.  எனினும் ஒன்றுசேர்ந்துகொண்டிருக்கிற சாதகங்கள் கிழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

  • தீவிரவாதிகளின் செயல்கள்.
  • உயர்ந்துகொண்டிருக்கும் குற்றங்களும் கலவரங்களும்.
  • போதைமருந்துக்கு எதிரான யுத்தங்கள்.
  • ஒரு பெரிய பொருளாதார சரிவு.
  • எய்ட்ஸ் மற்றும் வேறுசில தொற்றுநோய்கள்.
  • தீவிரவாத நாடுகளிலிருந்து வரும் அணு அச்சுறுத்துதல்கள்.
  • அரசியல் ஊழல்கள்.
  • நீதிமன்றங்களின் அநீதியான ஊழல்கள்.
  • தவறாக உபயோகிக்கப்படும் சலுகைகள்.
  • உயர்ந்துவரும் வரிகள்.
  • நிர்வாணப்படங்களும் கேடுண்டாக்கும் ஒழுக்கக்கேடும்.
  • திகைக்கவைக்கும் உலகளாவிய பேரழிவுகள்.
  • விசேஷ விருப்பங்களோடு எழும்பும் புதுவிதமான கூட்டங்கள்.
  • கருக்கலைப்பு நெருக்கடிகள்.

ஊழல்கள், அக்கிரமங்கள், ஒழுக்கக்கேடுகள், சகிப்பின்மை, அநியாயம், வறுமை, பலமில்லாத உபயோகமற்ற அரசியல் தலைவர்கள், இன்னும் இப்படிப்பட்ட அநேக பிரச்சனைகள் அவைகளுக்கு எதிராக பலமான குறிப்பிட்ட சட்டங்கள் கண்டிப்புடன் கட்டாயப்படுத்தப்படுவதற்கான நிர்பந்தத்தை உண்டாக்கலாம்.

13.உலக நிலைமை கேடடையும்போது மக்களை வஞ்சிக்கும்படியாக சாத்தான் என்ன செய்வான்?

“அன்றியும், அது மனுஷருக்குமுன்பாகப் வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று” – வெளிப்படுத்தல் 13:13,14.

பதில்:  அமெரிக்கா உலகளாவிய போலி எழுப்புதலை பெற்று, அதில் ஒவ்வொரு நபரும் பங்கெடுப்பதற்குத் தேவையான மத சட்டங்களை ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தும். (இதுதான் வெளிப்படுத்தல் 13:14 ல் மிருகத்தின் சொரூபமாக காட்டப்பட்டிருக்கிறது).  தேவனுடைய பரிசுத்த ஏழாம்நாள் ஓய்வுநாளை அப்புறப்படுத்தி, அதற்கு பதிலாக மிருகத்தினுடைய “பரிசுத்த” நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்யும்படியாக மக்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். சிலர் வெறும் சமூக அல்லது பொருளாதார காரணங்களுக்காக இதற்கு சம்மதிப்பார்கள்.  ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலும் ஜெபத்திலும் தேவனிடம் திரும்பி உலகம் முழுவதும் ஒன்றிணைந்து ஜெபிக்கும் இயக்கமே ஒரே தீர்வாகத் தோன்றுமளவு உலக நிலைமைகள் தாங்கக்கூடாதவைகளாக மாறும்.  வேதாகம சத்தியத்தை சமரசம் செய்து ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தமாக கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று நம்பும்படி சாத்தான் உலகத்தை வஞ்சிப்பான்.  ஆனால் உண்மையில் மிருகத்தை வணங்கி அதற்குக் கீழ்ப்படிவது மக்களை தேவனுடைய இராஜ்யத்திற்கு வெளியே அடைக்கும்.  மிருகத்தை வணங்கி அதன் முத்திரையை பெற்றுக்கொள்வதைக்குறித்து தேவன் வெளிப்படுத்தலில் இவ்விதம் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

14.போலியான எழுப்புதலில் ஆர்வம் உயரும்போது தேவனுடைய கடைசிகால மக்களின் மெய்யான உலகளாவிய எழுப்புதலுக்கு என்ன சம்பவிக்கும்?

பதில்:  உலகம் முழுவதும் அதனுடைய மகிமையினால் பிரகாசமடையும் (வெளிப்படுத்தல் 18:1) என்று வேதாகமம் சொல்லுகிறது. வெளிப்படுத்தல் 14:6-14 வரையிலுள்ள தேவனுடைய முடிவுகால செய்தியாகிய முத்தூது, பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் (மாற்கு 16:15).  இலட்சக்கணக்கானோர் தேவனுடைய மக்களுடன் சேர்ந்து, இலவச கிருபையினாலும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தினாலும் கிடைக்கும் இரட்சிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; தேவனுடைய கடைசிகால சபை ஆச்சரியப்படும் வேகத்தில் வளரும். அது அவர்களை அவருக்குக் கீழ்ப்படிதலுள்ள ஊழியக்காரராக மாற்றும்.  உலகத்தின் அனைத்து நாடுகளிலும் அநேக மக்களும் தலைவர்களும்கூட மிருகத்தை வணங்கி அதன் பொய் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.  அதற்குமாறாக இயேசுவை தொழுதுகொண்டு அவருக்கே கீழ்ப்படிவார்கள்.  அப்போது அவருடைய பரிசுத்த ஓய்வுநாளின் சின்னம் அல்லது முத்திரையை தங்கள் நெற்றியில் பெற்று (வெளிப்படுத்தல் 7:2,3) நித்தியத்திற்கும் இவ்விதமாக தங்களை முத்திரிப்பார்கள்.  (வேதபாடம் 20-ல் தேவனுடைய முத்திரையை குறித்து படியுங்கள்.)

15.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைமையிலிருக்கிற இந்த அமைப்பு, விரக்தியில் அடுத்ததாக தன் சத்துருக்களின்மேல் மரண ஆக்கினையை செலுத்த தீர்மானிக்கும் (வெளிப்படுத்தல் 13:15).
தேவன் தங்களோடு இருப்பதாக மக்களை உணர்த்தும்படி அதன் தலைவர்கள் என்ன செய்வார்களென்று வெளிப்படுத்தல் 13:13,14 சொல்லுகிறது?

பதில்: தேவனுயை விசுவாசமுள்ள கடைசிகால மக்களைத்தவிர மற்ற அனைவரையும் இணங்கவைப்பதற்கேதுவாக, நம்பத்தகுந்த அற்புதங்களை அவர்கள் செய்வார்கள் (மத்தேயு 24:24).  சாத்தானுடைய ஆவிகளை (அல்லது விழுந்துபோன தூதர்களை) உபயோகித்து (வெளிப்படுத்தல் 16:13,14), பில்லி சூனியத்தின் வழியாக, மரிக்கக்கொடுத்த அன்பானவர்களைப்போலத் தோன்றுவார்கள் (வெளிப்படுத்தல் 18:23).  வேதாகம தீர்க்கதரிசிகளைப்போலவும், அப்போஸ்தலரைப்போலவும் காணப்படுவார்கள்.  இணைந்து செயல்பட அனைவரையும் ஏவும்படி தேவன்தாமே தங்களை அனுப்பியிருப்பதாக இந்த பொய்யான (யோவான் 8:44) பிசாசுகளின் ஆவிகள் சந்தேகமின்றி உரிமைபாராட்டும்.

சாத்தான் கிறிஸ்துவைபோல தோற்றமளிக்க, அவனுடைய தூதர்கள் கிறிஸ்தவ ஊழியக்காரரைப்போல காணப்படுவார்கள்

சாத்தானுடைய தூதர்கள் பயபக்தியான ஊழியக்காரரைப்போல காணப்பட, சாத்தான் ஒளியின் தூதனைப்போல காணப்படுவான். (2 கொரிந்தியர் 11:13-15). தன்னுடைய அற்புதங்களின் சிகரமாக, தன்னை இயேசுவென்றே அவன் காண்பிப்பான் (மத்தேயு 24:23,24).  இயேசுவைப்போல தோற்றமளிக்கும்போது, ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டதாகவும், தன்னுடைய பின்னடியார்கள் உலகளாவிய எழுப்புதலில் தொடர்ந்து தன்னுடைய பரிசுத்தநாளாகிய ஞாயிற்றுக்கிழமையை உயர்த்திப்பிடிக்கும்படியாகவும்கூட சாத்தான் எளிதாக கோரலாம்.

கோடிக்கணக்கானோர் வஞ்சிக்கப்படுவார்கள்

சாத்தனை இயேசுவென்று நம்பினவர்களாக கோடிக்கணக்கானோர் அவனுடைய பாதத்தில் விழுந்து போலி இயக்கத்தில் சேர்ந்துகொள்வார்கள். “பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி” – வெளிப்படுத்தல் 13:3.  வஞ்சகம் வாரிக்கொண்டுபோகுமளவு வல்லமையுள்ளதாயிருக்கும்.  ஆனாலும் தேவனுடைய கடைசிகால மக்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள்.  ஏனெனில் அவர்கள் ஒவ்வொன்றையும் வேதாகமத்தோடு ஒப்பிட்டு சோதித்துப்பார்ப்பார்கள் (ஏசாயா 8:19,20; 2 தீமோத்தேயு 2:15).  தேவனுடைய பிரமாணம் மாற்றப்படமுடியாதென்று (மத்தேயு 5:18) வேதாகமம் சொல்லுகிறது.  மேலும் இயேசு மீண்டும் வரும்போது கண்கள் யாவும் அவரைக் காணும் (வெளிப்படுத்தல் 1:7) என்றும், அவர் பூமியை தொடாமல் மேகங்கள் மேலேயே இருப்பார் என்றும், தம்மை ஆகாயத்தில் சந்திக்கும்படியாக தமது மக்களை அழைப்பார் என்றும் (1 தெசலோனிக்கேயர் 4:16,17) வேதாகமம் கூறுகிறது. 

16.வல்லமையான கடைசிகால வஞ்சகங்களிலிருந்து நாம் எவ்விதம் பாதுகாப்பாயிருக்கலாம்?

பதில்:

அ. ஒவ்வொரு போதனையையும் வேதாகமத்தோடு ஒப்பிட்டு சரிபாருங்கள் (2 தீமோத்தேயு 2:15; அப்போஸ்தலர் 17:11; ஏசாயா 8:19,20).

ஆ. இயேசு வெளிப்படுத்தினதைப்போன்று சத்தியத்தைப் பின்பற்றுங்கள்.  தமது சித்தத்தை செய்கிறவர்கள் ஒருபோதும் தவறில் இருக்கமாட்டார்கள் என்று இயேசு வாக்குக்கொடுக்கிறார் (யோவான் 7:17).

இ. அனுதினமும் இயேசுவின் அருகில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள் (யோவான் 15:5).

நினைவிற்கு:  முத்தூதின் பாட வரிசையில் இது 6வது பாடம். அடுத்த பாடம் கிறிஸ்தவ சபைகளும் உலகளாவிய மதங்களும் கடைசிகால சம்பவங்களை எவ்விதம் பார்க்கும் என்பதைக் காண்பிக்கும்.

17.இயேசுவை தொழுது அவருக்குக் கீழ்ப்படிவது பரிகாசத்தையும் உபத்திரவத்தையும், முடிவாக மரண தண்டனையையும் உள்ளடக்கியிருந்தாலும், அவரை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிய நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: _________________________________________

சிந்தனைக் கேள்விகள்

1. முடிவு நெருக்கடியில் தேவனுடைய சத்தியத்தை ஒருபோதும் கேட்டிராதவர்கள் தங்கள் அறியாமையில் போலியை தெரிந்தெடுத்து இவ்விதம் இரட்சிப்பை இழந்துபோவார்கள் என்பது நியாயமல்ல.

பதில்:  இன்றைக்கான தேவனுடைய முத்தூதின் செய்தியை (வெளிப்படுத்தல் 14:6-12) கேள்விப்பட்டு புரிந்து கொள்ளாது (மாற்கு 16:15; யோவான் 1:9) ஒருவரும் முடிவு நெருக்கடியை சந்திக்க மாட்டார்கள்.  கிறிஸ்துவை பின்பற்றுவதின் விலையை சந்திக்க விரும்பாத மக்கள் அந்த நேரத்தில் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளத் தெரிந்துகொள்வார்கள்.

2. வெளிப்படுத்தல் 16:12-16வரையில் சொல்லப்பட்டிருக்கிற அர்மகெதோன் யுத்தம் என்ன?  அது எங்கே எப்போது நடக்கும்?

பதில்:  கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்குமிடையே நடக்கிற கடைசி யுத்தமே அர்மகெதோன் யுத்தம். அது பூமியில், கடைசி காலத்திற்குச் சற்றுமுன் துவங்கி, இயேசுவின் இரண்டாம் வருகையினால் நிறுத்தப்பட்டு, ஆயிரம் வருடங்களுக்குப்பின் பரிசுத்த நகரத்தை பிடித்துக்கொள்ளும் நம்பிக்கையில் துன்மார்க்கர் அதை வளைந்து கொள்ளும்போது (பாடம் 12) மீண்டும் தொடரும்.  தேவன் வானத்திலிருந்து அக்கினி அனுப்பி துன்மார்க்கரை அழிக்கும்போது (வெளிப்படுத்தல் 20:9) இந்த யுத்தம் முடிவடையும்.

அர்மகெதோன் என்கிற வார்த்தையின் பொருள்

உலகத்து மக்கள் அனைவரும் பங்குபெறும் – கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்குமிடையே “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தின்” அடையாளமான வார்த்தையே அர்மகெதோன் (வெளிப்படுத்தல் 16:12-16, 19).  பிதாவாகிய தேவனும் குமாரானாகிய தேவனுமே, “சூரியன் உதிக்குந்திசையிலிருந்து வரும் இராஜாக்கள்.”  வேதாகமத்தில் “சூரியன் உதிக்குந் திசை,”  தேவனுடைய பரலோக இராஜ்யத்தை குறிக்கிறது

(வெளிப்படுத்தல் 7:2; எசேக்கியேல் 43:2; மத்தேயு 24:27).  இந்த முடிவான யுத்தத்தில் (வெளிப்படுத்தல் 16:14) ஆட்டுக்குட்டியாகிய இயேசுவிற்கு எதிராகவும் அவருடைய மக்களுக்கு எதிராகவும் யுத்தம்பண்ண (வெளிப்படுத்தல் 17:14; 19:19) உலகம் முழுவதும் ஒன்றுசேரும்.  அவர்கள் நோக்கம், மிருகத்தை வணங்கி அதன் முத்திரையை பெற மறுக்கிறவர்களை அழிப்பதே (வெளிப்படுத்தல் 13:15-17).

மறுப்பை வஞ்சகம் தொடரும்

  தேவனுடைய கடைசிகாலத்திற்கான முத்தூதின் செய்தியை (அது சத்தியம் என்றும் அறிந்தும்) ஏற்க மறுக்கும் மக்கள் பெய்யை நம்பும்படியாக பலமாக வஞ்சிக்கப்படுவார்கள் (2 தெச. 2:10-12).  தேவஜனத்தை அழிக்க முயலும் அதே நேரத்தில் அவருடைய மாபெரும் இராஜ்யத்தை உயர்த்திப் பிடிப்பதாக உண்மையாகவே அவர்கள் நம்புவார்கள்.  போலி எழுப்புதலில் இணைய மறுக்கும் பரிசுத்தவான்களை, முழு உலகையும் அழிவிற்குட்படுத்தும் நம்பிக்கையற்ற வெறியராக அவர்கள் பார்ப்பார்கள்.

இயேசுவின் இரண்டாம் வருகை யுத்தத்தை நிறுத்தும்

  இந்த யுத்தம் உலகளாவியதாக இருக்கும்.  எல்லா அரசாங்கங்களும் ஒரே சமயத்தில் தேவனுடைய மக்களை அழிக்க முயற்சிக்கும்.  ஆனால் தேவன் இடைபடுவார்.  அடையாளமான ஐபிராத்துநதி வற்றிப்போகும் (வெளிப்படுத்தல் 16:12).  தண்ணீர் மக்களை குறிக்கிறது (வெளிப்படுத்தல் 17:15).  ஐபிராத்துநதியின் தண்ணீர் வற்றிப்போவது, மிருகத்திற்கு (சத்தானுடைய இராஜ்யத்திற்கு) ஆதரவு அளித்தவர்கள் சடிதியாக தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்வதே.  மிருகத்திற்கு இருந்த ஆதரவு வற்றிப்போக, அந்த கூட்டணி (வெளிப்படுத்தல் 16:13,14) பிரிந்துபோகும் (வெளிப்படுத்தல் 16:19).  இயேசுவின் இரண்டாம் வருகை இந்த யுத்தத்தை நிறுத்தி, அவருடைய மக்களை இரட்சிக்கும் (வெளிப்படுத்தல் 6:14-17; 16:18-21; 19:11-20).

ஆயிரம் வருடங்களுக்குப்பின்பு யுத்தம் மீண்டும் தொடரும்

ஆயிரம் வருடங்களுக்குப்பின் சாத்தான் தேவனுக்கும் அவருடைய ஜனத்துக்கும் எதிரான கூட்டணியின் தலைவனாக அனைவரும் காணும்விதமாக வெளிப்படுவான்.  பரிசுத்த நகரத்தை பிடிக்கும் முயற்சியால் தேவனுக்கு எதிரான யுத்தத்தை தொடருவான்.  அப்போது வானத்திலிருந்து வரும் அக்கினியால் அவனும் அவனுடைய தூதரும் அழிக்கப்படுவர். (பாடங்கள் 11,12).  சாத்தனை பின்பற்றின ஒவ்வொருவரும் அழிக்கப்படுவார்கள்.  இயேசுவை பின்பற்றின ஒவ்வொருவரும் அவருடைய நித்திய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள்.

3. “உங்களைக் சொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்” (யோவான் 16:2) என்று வேதாகமம் சொல்லுகிறதே!  அது எழுத்தின்படியாகவே நிறைவேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:  ஆமாம்.  போலியான எழுப்புதலில் சேரவோ அல்லது அதன் அடையாளத்தை (ஞாயிறு ஆசரிப்பை) பெறவோ மறுக்கிற தேவபிள்ளைகள் மேலிருக்கும் அனுதாபம் உலக அரசியலிலும் மதஇணைப்பிலும் முழுமையாக மறையும்.  எழுப்புதலுக்குத் துணைபோகும் நோயாளிகள் குணமடைவது, தேவனை வெறுக்கிற துன்மார்க்கர், ஒழுக்கமற்ற திரைநட்சத்திரங்கள், போதை அரசர்கள், பிரபலமான குற்றவாளிகள் ஆகியோர் மனமாறும் அற்புதங்கள் எழுப்புதலை உண்மையென்று நிரூபிப்பதாக அவர்கள் உணருவார்கள்.  அனைத்து மதங்களையும் ஒன்றாக்குகிற உலகளாவிய எழுப்புதலை உடைக்க எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்த இணைப்பு வலியுறுத்த, தங்களுடைய சொந்த உணர்வுகளையும் வெறித்தனமான போதனைகளையும் (ஓய்வுநாளுக்கடுத்த போதனை) அப்புறப்படுத்தி, சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்குமான உண்மையான எழுப்புதலில் உலகத்தோடு சேர்த்துகொள்ள அனைவரும் நிர்பந்திக்கப்படுவார்கள்.  இந்த எழுப்புதலை தவிர்த்து மற்ற அனைத்தும் சிறிய காரியமாகவே கருதப்படும்.  இணைய மறுக்கிறவர்கள் உண்மையற்றவர்களாகவும், தேசபக்தியற்றவர்களாகவும், அராஜகமானவர்களாகவும், கடைசியாக இனி சகிக்கக்கூடாத ஆபத்தான வெறியர்களாகவும் கருதப்படுவார்கள்.  அந்த நாளில் தேவனுடைய மக்களை கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு தொண்டு செய்கிறதாக உணருவான்.

4. தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனங்களை படிக்கும்போது பிசாசுதான் எப்போதுமே உண்மையான சத்துரு என்று எனக்குத் தோன்றுகிறது. சரியா?

பதில்:  ஆமாம்.  நீங்கள் 100 சதம் சரியே!  மெய்யான சத்துரு எப்போதுமே சாத்தான்தான்.  அவன் உலக தலைவரையும் மக்களையும் உபயோகித்து, தேவனுடைய மக்களை தாக்கி, இயேசுவிற்கும் பிதாவிற்கும் மன வேதனையை கொண்டுவருகிறான்.  சத்துரு சாத்தான்தான் என்கிறதை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.  அவனே அனைத்து தீமைக்கும் பொறுப்பாளி.  தேவனுடைய ஜனங்களையும் அவருடைய சபையையும் தாக்குபவர்களை குற்றப்படுத்தி நியாயந்தீர்ப்பில் நாம் கவனமாயிருப்போமாக.  சிலவேளைகளில் அவர்கள் போதுமான அளவு அறிவிக்கப்படுவதில்லை.  மக்களுக்கு தீங்கிழைப்பதைக்கூட அறியாமல் செய்கிறார்கள்.  ஆனால் சாத்தான் அப்படியல்ல.  அவன் அனைத்தையும் அறிந்திருக்கிறான்.  குறிப்பாக தேவனையும் அவருடைய மக்களையும் அவன் தாக்குகிறான்.

5. போப்புவின் மரணமோ அல்லது புதிய அதிபரின் தேர்வோ வெளிப்படுத்தல் 13:11-18 வரையிலான அமெரிக்காவைக் குறித்த தீர்க்கதரிசனத்தை எவ்விதம் பாதிக்கும்?

பதில்:  யார் போப்பாக இருப்பினும் அல்லது அதிபராக இருப்பினும் தீர்க்கதரிசனம் நிறைவேறும்.  புதிய அதிபரரோ அல்லது போப்புவோ இதன் நிறைவேறுதலை தற்காலிகமாகத் துரிதப்படுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.  ஆனால் முடிவு வேதாகம தீர்க்கதரிசனத்தினால் நிச்சயப்படுத்தப்படுகிறது.

6. வெளிப்படுத்தல் 13:11-18ல் வரும் ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புகளுள்ள மிருகமும், வெளிப்படுத்தல் 16:13ல் வரும் கள்ளத்தீர்க்கதரிசியும் ஒரே வல்லமைதானா?

பதில்:  ஆமாம்.  வெளிப்படுத்தல் 19:20 ல், அந்திகிறிஸ்துவான மிருகத்தின் அழிவை குறிப்பிடுகிற தேவன், கள்ளத்தீர்க்கதரிசியின் அழிவையும் அங்கு குறப்பிடுகிறார்.  இந்த வாக்கியத்தில் மிருகத்தின் முன்பாக அற்புதங்களை நடப்பித்த வல்லமை கள்ளத்தீர்க்கதரிசியின் வல்லமைதான் என்று தேவன் அடையாளங்காட்டுகிறார்.  “மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதன் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்.”  இது வெளிப்படுத்தல் 13:11-18 வரை விவரிக்கப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புள்ள மிருகத்தின் நடவடிக்கைகளுக்கான தெளிவான குறிப்பு.  இந்த பாடத்தில் ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புள்ள மிருகம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பதை நாம் அடையாளங்கண்டோம்.  எனவே ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புள்ள மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் ஒரே வல்லமைதான்.

கேள்விகள்

1. வேதாகம தீர்க்கதரிசனத்தில் அமெரிக்கா இவ்விதம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.   (1)

_____ சிவப்பு வெள்ளை மற்றும் நீலநிற மிருகமாக.
_____ கணினியை தன் பின்புறம் கொண்ட ஒரு கழுகாக.
_____ ஆட்டுக்குட்டிக்கொப்பாக இரண்டு கொம்புள்ள மிருகமாக.


2. கொம்புகளும் எதைக் காட்டுகின்றன? (1)

_____ செல்வம், யுத்தவல்லமையை.
_____ பெஞ்சமின் ஃபிராங்கிளின், ஜார்ஜ் வாஷிங்டனையும்.
_____ உள்நாட்டு மட்டும் மத உரிமைகளை


3. “பூமியிலிருந்து” எழும்பக்கண்டது: (1)

_____ அமெரிக்கர்கள் நாட்டுப்புற வாழ்க்கையை விரும்புவார்கள்.
_____ மிகக்குறைவான மக்கள்தொகை கொண்ட இடத்திலிருந்து இந்த புதிய தேசம் எழும்பும்.
_____ சில ஆதிகால அமெரிக்கர்கள் குகையில் வசிப்பார்கள்.


4. அமெரிக்கா எதைச் செய்யுமென்று ஆட்டுக்குட்டிக்கொப்பான கொம்புகள் குறிக்கின்றன? (1)

_____ வெட்கமடையும், தடுக்கப்படும்.
_____ செம்மறியாடுகளை வளர்க்கும்.
_____ சமாதானத்தை விரும்பும் ஆவிக்குரிய தேசமாக எழும்பும்.


5. அமெரிக்கா எப்போது எழும்பும் என்று வெளிப்படுத்தல் 13ன் தீர்க்கதரிசனம் காட்டுகிறது? (1)

_____ 1492
_____ 1798
_____ 1620


6. அமெரிக்கா வலுசர்ப்பத்தைப்போல பேசும் என்று வெளிப்படுத்தல் 13 காட்டுவதன் பொருள்? (1)

_____ அதன் மக்கள் கோபங்கொண்ட, புரிந்துகொள்ளக்கூடாதவர்களாக இருப்பார்கள்.
_____ அழிக்கும் அக்கினி ஆயுதங்களை அது அழிவிற்காக உபயோகிக்கும்.
_____ மனசாட்சிக்கு எதிராக ஆராதிக்கவோ அல்லது மரணத்தை சந்திக்கவோ அவள் மக்களை கட்டாயப்படுத்துவாள்.


7. அதிகாரத்தைக் குறித்த தேவனுடைய சின்னம் என்ன? (1)

_____ ஒரு ஆட்டுக்குட்டி.
_____ தேவனுடைய பரிசுத்த நாளாகிய ஓய்வுநாள்.
_____ இரண்டு கொம்புள்ள ஒரு மிருகம்.


8. அமெரிக்கா எவ்விதம் மிருகத்திற்கு சொரூபத்தை உண்டுபண்ணும்? (1)

_____ மிருகத்தின் படங்களை அதிகம் உற்பத்தி செய்து விற்பதன் வழியாக.
_____ வாஷிங்டன் டி.சி.யில் மிருகத்திற்கு ஒரு சிலை வைப்பதன் வழியாக.
_____ மத செயல்பாடுகளை சட்டமாக்கி (போப்புமார்க்கம் அதன் வல்லமையின் உச்சகட்டத்தில் செய்ததைப்போல) சபையையும் நாட்டையும் இணைப்பதன் வழியாக.


9. மிருகத்தின் முத்திரையை மறுக்கிறவர்கள் மேல் எந்தவிதமான தண்டனைகள் செலுத்தப்படும் என்று வெளிப்படுத்தல் 13:15-17 சொல்லுகிறது? (2)

_____ வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
_____ விண்வெளிக்கு வெளியே துரத்தப்படுவார்கள்.
_____ கொல்லப்படுவார்கள்.
_____ மிருகத்திடம் தனிப்பட்டவிதத்தில் மன்னிப்பை கோரும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.


10. முடிவுகாலத்தில் எந்த இரண்டு வல்லமைகள் அதிக செல்வாக்கு பெற்றிருக்கும்? (2)

_____ மீண்டும் பலமடைந்த ஐரோப்பா.
_____ ஜப்பான்.
_____ சீனா.
_____ அமெரிக்க ஐக்கிய நாடு.
_____ போப்புமார்க்கம்.


11. அர்மகெதோன் யுத்தத்தைக் குறித்த உண்மைகள்: (6)

_____ இது பூமியின் கடைசி யுத்தம்.
_____ “சூரியன் உதிக்குந்திசையிலிருந்து வரும் இராஜாக்கள்” - ஜப்பானும் சீனாவும்.
_____ தேவனுடைய மக்களை அழிப்பதே இந்த யுத்தத்தில் மிருகத்தின் நோக்கம்.
_____ இது உலகளாவிய ஒன்றாயிருக்கும்.
_____ இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன் துவங்கி, ஆயிரம் வருடங்களின் முடிவில், துன்மார்க்கர் பரிசுத்த நகரத்தை சூழும்போது முடிவடையும்.
_____ கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்குமான முடிவு யுத்தத்தின் அடையாளப்பெயர்.
_____ மிருகம் அல்லது அந்திகிறிஸ்து முடிவாக தன் பின்னடியாரின் ஆதரவை இழப்பதே ஐபிராத்து வற்றிப்போவது.
_____ இது பாலஸ்தீனத்தில் மாத்திரம் நடக்கும்.


12. தேவனுடைய மெய்யான கடைசி எழுப்புதல் எவ்வளவு வெற்றியானதாயிருக்கும்? (1)

_____ முழு உலகமும் மனமாற்றமடையும்.
_____ பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரும் செய்தியைக் கேட்பான்.
_____ இலட்சக்கணக்கானோர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
_____ அது வெற்றிபெறாது; பிசாசு அதை நிறுத்திவிடுவான்.


13. கடைசிகால போலி இயக்கம் எவ்வளவு வெற்றியானதாயிருக்கும்? (1)

_____ அநேக நாடுகள் அதற்கு ஆதரவளிக்காது.
_____ அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மாத்திரமே வெற்றிபெறும்.
_____ தேவனுடைய கடைசிகால மக்களைத் தவிர்த்து பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரும் அதற்கு ஆதரவளிப்பர்.


14. பரிகாசத்திற்கும், உபத்திரவத்திற்கும், முடிவாக மரணத்திற்கும் கொண்டு சென்றாலும் இயேசுவை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிய தீர்மானிக்கிறீர்களா?

_____ ஆம்.
_____ இல்லை.