மிருகத்தின் முத்திரை

வேதபாடங்கள்  20

மிருகத்தின் முத்திரை என்பது பச்சை குத்தப்படும் ஒரு எண்ணா? அல்லது தோலிற்குக்கீழ் வைக்கப்படும் கணினியின் சில்லா (chip)? அல்லது இன்னும் அதிக தந்திரமான வேறு ஏதாவதா?  வேதாகமத்திலே அதிக தவறாக விளக்கம் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களில் இதுவுமொன்று! ஆயினும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளுவது மிகவும் அவசியம்.  மிருகத்தின் முத்திரையைக்குறித்துப் படிக்கும்போது, குறிப்பான பெயர்கள் உட்பட சில உணர்ச்சிப்பூர்வமான காரியங்களையும் அறிவிக்கவேண்டியதிருக்கும். 

இன்றைக்கு இந்த காரியம் பிரபலமாக இல்லாவிடினும், தேவன் தமது மக்களை நேசித்து, அவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவதால், நாம் இதை புரிந்து கொண்டு இதில் உறுதியாக இருக்கவேண்டும்.  இது நம்முடையது அல்ல; இயேசுவினுடைய செய்தி.  இந்த முத்திரையை பெற்றுக்கொள்ளுகிறவர்கள்முன் நித்திய மரணம் இருக்க, இந்த செய்தியை சொல்ல அவருக்கு நாம் நம்மை கொடுக்கவில்லையென்றால், அது ஒரு குற்றமாகும்.  “இந்த வேதபாடத்தை நீங்கள் படித்து முடிப்பதில் பிசாசுக்கு விருப்பமில்லை” என்ற எச்சரிப்பின் முன்னுரையோடு இந்த பாடத்தைத் துவக்கியிருக்கவேண்டும்.  இப்பாடத்தை படிக்குமுன் தயவுசெய்து வெளிப்படுத்தல் 13:1-8; 16-18; 14:9-12, வசனங்களை வாசித்து, புரிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவிக்காக ஜெபியுங்கள்.]

ஒரு அவசரமான நினைவூட்டல்

  தேவனுக்கும் பிசாசிற்குமிடையே பயங்கரமான போராட்டமொன்று நடந்துகொண்டிருக்கிறது என்பதை பாடம் 2ல் படித்தோம்.  பரலோகத்தில் வல்லமையான தூதனாயிருந்த லூசிபர் தேவனுக்கெதிராக கலகம் செய்ததிலிருந்து நூற்றாண்டுகள் நெடுக இது நடந்து கொண்டிருக்கிறது.  தன்னோடு சேர்ந்த தூதர்களோடு, தேவனை மேற்கொள்ளவும் பிரபஞ்சத்தின் ஆதிக்கத்தை பறிக்கவும் அவன் முயற்சித்தான்.  லூசிபரையும் அவன் தூதரையும் வெளியேற்றுவதைத்தவிர தேவனுக்கும் மெய்யான தூதர்களுக்கும் வேறுவழி இருக்கவில்லை.  எனவே பிசாசென்றும் சாத்தானென்றும் பின்னர் அறியப்பட்ட இந்த லூசிபர் வெகுண்டான்.  தேவனை அழித்து பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டை அடையவேண்டும் என்கிற அவனுடைய தீர்மானம் வருடங்களாக வளர்ந்தது.  தன்னுடைய கலகத்திற்கு பூமியின் குடிகளுடைய பெரும்பான்மையான ஆதரவையும் ஆச்சரியப்படும்விதமாக அவன் சம்பாதித்தான்.  ஆண்டவரும் மக்களுடைய உண்மையையும் ஆதரவையும் வேண்டுகிறார்.  எனினும் தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தை அவர்களுடைய தெரிந்துகொள்ளுதலுக்கே அவர் விடுகிறார்.  பூமியிலிருக்கும் ஒவ்வொருவரும் விரைவில் சாத்தானுடைய பக்கமோ அல்லது தேவனுடைய பக்கமோ தங்களை வைப்பார்கள்.  சற்றுமுன் இருக்கிற சாத்தானுக்கும் தேவனுக்குமிடையேயான கடைசியுத்தம் வெளிப்படுத்தல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.  தேவனுக்கு ஒரு சின்னம் அல்லது ஒரு முத்திரை இருக்கிறதென்று இந்த புத்தகம் குறித்துக்காட்டுகிறது.  அது அவருடைய மக்களை அடையாளப்படுத்தும்.  சாத்தானுக்கும் ஒரு சின்னம் அல்லது ஒரு முத்திரை இருக்கிறது.  அது அவனுடைய ஆதரவாளர்களை அடையாளப்படுத்தும்.  வெளிப்படுத்தலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மிருகத்தின்வழியாக பூமியின் வல்லமையை உபயோகித்து இந்த முத்திரையை திணிக்க சாத்தான் வழக்கம்போல செயல்படுவான்.  இந்த வேதபாடம் மிருகத்தின் முத்திரை என்ன என்பதை வெளிப்படுத்தும்.  கடைசிகாலத்தில் இரட்சிப்பை இழந்துபோகும் ஒவ்வொருவரும் அதை பெற்றுகொள்ளுவார்கள்.  இந்த முத்திரை என்ன என்பதை நீங்கள் அறியாவிட்டால் அதை பெறுவதை எவ்வாறு தவிர்க்கமுடியும்?

1. முத்திரை என்ன எனபதை அறிய, மிருகம் என்ன என்பதை நாம் முதலாவது அடையாளம் காணவேண்டும்.  வேதாகமம் மிருகத்தை எவ்விதம் விவரிக்கிறது?

பதில்:

வெளிப்படுத்தல் 13:1-8, 16-18 வசனங்கள் மிருகத்தினுடைய 11 குணாதிசயங்களைக் காட்டுகின்றன.  அவைகள்:

  1. அது சமுத்திரத்திலிருந்து எழும்புகிறது (வசனம் 1).
  2. அது தானியேல் 7ம் அதிகாரத்தின் நான்கு மிருகங்களின் கூட்டு! (வசனம் 2).
  3. வலுசர்ப்பம் அதற்கு பலம் மற்றும் அதிகாரத்தை கொடுத்தது (வசனம் 2).
  4. அது சாவுக்கேதுவாக காயப்படுகிறது (வசனம் 3).
  5. சாவுக்கேதுவான அதன் காயம் சொஸ்தமடைந்தது (வசனம் 3).
  6. வல்லமையான அரசியல் பலம் (வசனம் 3,7).
  7. வல்லமையான மத பலம் (வசனம் 3,8).
  8. தேவதூஷணத்தைக் குறித்த குற்றத்தில் இருக்கிறது (வசனம் 1,5,6).
  9. பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணி மேற்கொள்கிறது (வசனம் 7).
  10. 42 மாதங்கள் ஆட்சி செய்கிறது (வசனம் 5).
  11. 666 என்கிற இரகசியமான எண்ணை கொண்டிருக்கிறது (வசனம் 18).

இந்த குணங்களில் சிலது ஏற்கனவே அறிமுகமானதைப்போலத் தோன்றுகிறதா? நிச்சயமாக! தானியேல் 7ன் அந்திகிறிஸ்துவைக்குறித்த முந்தைய பாடங்களில் இவற்றில் அநேகவற்றைப் பார்தோம்.  வெளிப்படுத்தல் 13ல் வரும் மிருகம், தானியேல் 7ல் போப்புமார்க்கம் என்று நாம் படித்த அந்திகிறிஸ்துவின் மற்றொரு தோற்றம்தான்.

தானியேலும் வெளிப்படுத்தல் விசேஷமும் இதற்கு முந்தைய தீர்க்கதரிசனங்களைப்போல ஒரே கார்யத்தையே சொல்லுகின்றன.  ஒவ்வொரு முறையும் புதிய குறிப்புகள் சேர்க்கப்பட, அது தீர்க்கதரிசனங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுகிறது.  எனவே அந்திகிறிஸ்துவைப்பற்றி இந்த பாடத்திலிருந்து சில புதிய காரியங்களை அறிந்து கொள்ளுவோம்.  மிருகத்தை குறிக்கும் இந்த 11 குறிப்புகளையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அ. அது சமுத்திரத்திலிருந்து எழும்பும் (வெளிப்படுத்தல் 13:1):

கடல் அல்லது தண்ணீர் என்பது தீர்க்கதரிசனத்தில் மக்களை அல்லது ஜனக்கூட்டம் நிறைந்த இடத்தைக் குறிக்கிறது (வெளிப்படுத்தல் 17:15).  இதன்படி, மிருகம் அல்லது அந்திகிறிஸ்து அப்போது ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேசங்களுக்கு நடுவிலிருந்து எழும்பும்.  நாம் அனைவரும் அறிந்ததைப்போல, போப்புமார்க்கம் மேற்கு ஐரோப்பாவிலிருந்து எழும்பியது.  இது இந்தக் கருத்திற்குப் பொருந்துகிறது.

விளக்கம்

அனைத்து மக்களையும் கனம் பண்ணவேண்டும் என்கிற தேவனுடைய கட்டளைக்கு இசைவாக (1 பேதுரு 2:17), போப்புமார்க்கத்தினுடைய அநேக நல்ல காரியங்களையும் செயல்களையும் கருத்தில்கொள்ள நாம் இங்கே சற்று நிறுத்தவேண்டும்.  அவளுடைய மருத்துவமனைகளும், அநாதை இல்லங்களும், ஏழைகளுக்கு காண்பிக்கப்படும் கவனமும், திருமணமாகாது தாய்களான பெண்களுக்கான இல்லங்களும், வயதானவர்களுக்கான கவனிப்பும் உலகமுழுவதும் பாராட்டப்படுகின்றன.  உண்மையாகவே அநேக காரியங்களுக்காக அவளை நாம் பாராட்டலாம்.  ஆனால் மற்ற அனைத்து அமைப்புகளையும்போலவே அவளும் தவறு செய்திருக்கிறாள்; அவளுடைய சில குறைகளை தேவன் வெளிப்படுத்தலில் சுட்டிக்காட்டுகிறார்.  ஆசீர்வதித்து ஆறுதல்படுத்துகிற ஆண்டவர், சிலவேளைகளில் சிட்சித்து சரிசெய்யவும் வேண்டும்.  இந்த முக்கியமான தலைப்பைப் படிக்கும்போது தேவ ஆவியானவர் உங்களிடம் பேசும்படியாக ஜெபித்து கொள்ளுங்கள்.

ஆ. தானியேல் 7 ம் அதிகாரத்தின் நான்கு மிருகங்களின் கலவை இது (வெளிப்படுத்தல் 13:2).

இது எவ்வளவு சரியாக பொருந்துகிறது என்பதை அறிய இந்த ஒப்புநோக்குதலை கவனியுங்கள்.

தானியேல் 7  வெளிப்படுத்தல் 13
பாபிலோன்சிங்கத்தைப்போன்று (வச. 4)“வாய் சித்தைப்போல 
இருந்தது” (வச. 2)
மேதியா பெர்சியா கரடியைப்போன்று (வச. 5) “கரடிக்கொப்பான கால்கள்” (வச. 2)
கிரேக்குசிவிங்கி (சிறுத்தை)யைப்
 போன்ற மிருகம் (வச. 6)
“சிறுத்தையைப்போல” (வச. 2)
ரோம் பத்து கொம்புகளுள்ள மிருகம்
(வச. 7)
“பத்துக் கொம்புகள் இருந்தன” (வச. 1)
நான்கு சாம்ராஜ்யங்களிலுமிருந்த அஞ்ஞான நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் போப்புமார்க்கம் இணைத்திருக்கிறபடியால், தானியேல் 7 ன் நான்கு மிருகங்களும் அந்திகிறிஸ்துவின் அல்லது மிருகத்தின் அங்கங்களாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.  அவள் அவைகளுக்கு ஆவிக்குரிய ஆடையை போர்த்தி, கிறிஸ்தவ போதனைகளென்று உலகமுழுவதும் பரப்பினாள்.  இதற்கான சரித்திர ஆதாரத்தை பாருங்கள்: “ஒருவிதத்தில் அவள் (போப்புமார்க்கம்) ரோம சாம் ராஜ்யத்தை தன்னுடைய அமைப்பின் நகலாக எடுத்து, சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவங்களைப் பாதுகாத்து– கனிகொடுக்க  வைத்து, பார்பேரியன்களிடமிருந்தும் பைசான்டின் ரோம சாம்ராஜ்யத்திலிருந்தும் கடன்வாங்கி, வெளியிலிருந்து  எடுத்த அத்தனை ஆதாரங்களையும் முழுமையாக சீரணித்து, அவள் தானாகவே நிற்கிறாள்.”1 இந்த குறிப்பு போப்புமார்க்கத்திற்கு குறிப்பாக பொருந்துகிறது.

இ. மிருகம் தனது பலத்தையும், சிங்காசனத்தையும் (தலைநகரையும்), அதிகாரத்தையும் வலுசர்ப்பதிடமிருந்து வாங்கவேண்டும் (வெளி. 13:2).

இந்த வலுசர்ப்பத்தை அடையாளங்கான நாம் வெளி. 12 க்கு போகவேண்டும்.  தேவனுடைய முடிவுகால சபை அங்கே தூய்மையான ஸ்திரீயாக காட்டப்பட்டுள்ளது.  தீர்க்கதரிசனத்தில் ஸ்திரீ என்றால் சபை (ஏரேமியா 6:2; ஏசாயா 51:16). வெளி. 12லிருக்கும் கடைசிகால தேவனுடைய சபையைக்குறித்த விளக்கமான பாடத்தை பாடம் 23 ல் படிக்கலாம்.  வெளி. 17, 18 ம் அதிகாரங்களில் வரும் விழுந்துபோன தாயாலும் அவளுடைய குமாரத்திகளாளும் அடையாளங்காட்டப் பட்டிருக்கிற விழுந்துபோன சபைகளைக்குறித்து பாடம் 22 பேசும்.  இந்த தூய்மையான ஸ்திரீ பிள்ளையோடிருந்து, பிரசவிக்கும் நேரத்தில் இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.  வலுசர்ப்பமோ, பிள்ளை பிறந்ததும் அதை விழுங்கிப்போட நம்பிக்கையாயிருந்து, ஸ்திரீக்கருகில் பதுங்கியிருந்தது.  எனினும் அந்த குழந்தை பிறந்து, வலுசர்ப்பத்துக்கு விலகி, தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி, பின்னர் பரலோகத்திற்கு ஏறிச்செல்லுகிறது.  இந்தக் குழந்தை இயேசுவே! பெத்லகேமின் குழந்தைகளை எல்லாம் அழிப்பதன்வழியாக ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல முயன்றான் (மத்தேயு 2:16). இவ்விதம் வலுசர்ப்பம் ஏரோதை இராஜாவாகக் கொண்டிருந்த அஞ்ஞான ரோம ராஜ்யத்தைக் குறிக்கிறது. ஏரோதினுடைய சதித்திட்டத்திற்கு பின்னால் இருந்தது சாத்தான்தான் (வெளி. 12:7-9).  சாத்தான் வெவ்வேறு அரசாங்கங்கள்வழியாக தன்னுடைய கீழ்த்தரமான வேலையை நிறைவேற்ற செயல்படுகிறான்.  இந்த இடத்தில் அஞ்ஞான ரோமின் வழியாக செயல்பட்டான்.

சரித்திரத்தில் அநேக ஆதாரங்கள் இருந்தாலும், இரண்டை மாத்திரம் நாம் குறிப்பிடுவோம். (1) “ரோம சபை உலக ரோம சாம்ராஜ்யத்தின் இடத்தில் தன்னை வைத்துக்கொண்டது.  இன்றைய ரோமசபை அதனுடைய தொடர்ச்சியே.  போப்பு-இராயனுடைய வாரிசு.”2  (2) “வல்லமையான கத்தோலிக்க சபை, ஞானமுழுக்கெடுத்த ரோம சாம்ராஜ்யமே.  ரோம் மாற்றமடைந்து உருமாறியுமிருக்கிறது.  பழைய சாம்ராஜ்யத்தின் தலைநகரமே கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாகிற்று.  பான்டிஃபஸ் மேக்சிமஸ் என்னும் ஸ்தானம் போப் என்பவரில் தொடர்ந்தது.”3  எனவே, இந்த குறிப்பும் போப்புமார்க்கத்திற்குப் பொருந்துகிறது. அவள் தன்னுடைய தலைநகரையும் அதிகாரத்தையும் அஞ்ஞான ரோமிலிருந்து பெற்றுக்கொண்டாள்.

ஈ. சாவுக்கேதுவான காயமடையும் (வெளி. 13:3).

நெப்போலியனுடைய படைத்தளபதி அலெக்சாண்டர் பெர்த்தியர் 1798 ன் பிப்ரவரி மாதத்தில் ரோமில் நுழைந்து போப் ஆறாவது பயஸை சிறைபிடித்தபோது அதன்மேல் சாவுக்கேதுவான காயம் விழுந்தது.  போப்பின் மரணத்தினால் போப்புமார்க்கம் முடிவடையும் என்று நெப்போலியன் அறிக்கையிட்டான்.  1799 ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் போப் மரித்தார்.  “போப்பு இல்லாத பட்சத்தில் போப்புமார்க்கம் மரித்துவிடும் என்று பாதி ஐரோப்பா நினைத்தது.”4  எனவே இந்த குறிப்பும் போப்புமார்க்கத்திற்கு பொருந்துகிறது.

உ. சாவுக்கேதுவான காயம் சொஸ்தமடையும், முழு உலகமும் மிருகத்திற்கு மரியாதை கொடுக்கும் (வெளி. 13:3): அது சொஸ்தமானதிலிருந்து போப்புமார்க்கத்தின் பலம் இன்றுவரையிலும் வளர்ந்திருக்கிறது.  இன்றைக்கு மிக வல்லமையான அரசியல் மத அமைப்பாக, உலகத்திலே செல்வாக்குகளின் மையமாகும்வரைக்கும் அது வளர்ந்திருக்கிறது.

வாட்டிகனின் செய்தியாளரும் ஞானியுமான மலாக்கி மார்டின் என்பவர் மிகவும் பிரபலமான “Keys of This Blood” என்கிற புத்தகத்தில் இவ்விதம் வெளிப்படுத்துகிறார்.5

போப்பைக்குறித்து

  கான்ஸ்டன்டைன் அவனுடைய நாளில் இருந்ததைப்போல, இவரும் உலக அதிகாரியாக வேண்டும் என்பதில் தீர்மானமாயிருக்கிறார் (49); அவர் நான்கு அரசாங்கங்களினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறார் (120); 20 ம் நூற்றாண்டின் மிகவும் அறியப்பட்டவர் (123); 91 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் தனிப்பட்ட நண்பர் (490).  வல்லமையான உலகளாவிய சன்மார்க்க அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கு உலகமக்கள் ஆயத்தமாயிருப்பதாக அவருக்குத் தெரிகிறது. (160); அவரின் அமெரிக்க சந்திப்பை 16,000 பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர். போப்புமார்க்கத்தைக் குறித்து: “Listening Post”  ஆக (கேட்கும் இடமாக) இருப்பதில் வாட்டிகனுக்கு நிகரில்லை என்று அமெரிக்க தூதுவர் கூறுகிறார் (120).  உலகத்தில் எவ்விடத்திலும் திங்கட்கிழமை என்ன நடக்கும் என்பதை சனிக்கிழமையிலேயே வாட்டிகன் அறியும் (439).  உலகளாவிய ஆட்சிக்கு போப்பு அமைப்பு இப்போது ஆயத்தமாயுள்ளது. (143).  காயம் சொஸ்தமடைந்து தேசங்களின் கவனமெல்லாம் வாட்டிகன்மேல் இருக்கிறதென்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  எனவே இந்த குறிப்பும் போப்புமார்க்கத்திற்குப் பொருந்துகிறது.

ஊ. அது பலமான அரசாங்க வல்லமை (வெளி. 13:3,7): குறிப்பு: உ -வை கவனிக்கவும்.

எ. மிகவும் வல்லமையான மத அமைப்பாகும் (வெளி. 13:3,8): குறிப்பு: உ -வை பார்க்கவும்.

ஏ.

தேவதூஷணத்தைக்குறித்த குற்றத்தில் இருக்கும் (வெளி. 13:5,6): போப்பு தன்னை கிறிஸ்து என்று அறிவிப்பதாலும், அதன் பாதிரிமார்கள் பாவங்களை மன்னிக்க  தங்களுக்கு உரிமை உண்டென்பதாலும் போப்புமார்க்கம் தேவதூஷணத்தைக்குறித்த குற்றத்தில் இருக்கிறது.

ஐ. “பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்” (வெளி. 13:7): போப்புமார்க்கம் இருண்ட காலத்தில் கோடிக்கணக்கான பரிசுத்தவான்களை உபத்திரவப்படுத்தி அழித்தது.

ஒ.  42 மாதங்கள் ஆட்சி செய்யும் (வெளி. 13:5):   போப்புமார்க்கம் கி.பி.538 லிருந்து 1798 வரையிலும் 42 தீர்க்கதரிசன மாதங்கள் அதாவது 1260 வருடங்கள் ஆட்சி செய்தது.

ஊ-லிருந்து ஒ-வரையிலும் போப்புமார்க்கத்திற்குப் பொருந்துவது பாடம் 15ன் 8வது கேள்வியில் இ.,ஊ., எ. ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே விளக்கப்பட்டிருப்பதால் இங்கே சுறுக்கமாக விளக்குகிறோம்:

ஓ. அது 666 என்கிற மர்மமான எண்ணை பெற்றிருக்கும் (வெளி. 13:18):  “அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது” என்று இந்த வசனம் கூற, “அதின் நாமத்தின் இலக்கத்திற்கும்” என்று வெளி. 15:2 கூறுகிறது.  போப்புமார்க்கம் என்று நினைத்ததும் யார் உங்கள் நினைவிற்கு வருகிறார்கள்? இயற்கையில் போப்புவைத்தான் நினைப்போம்.  அவருடைய அதிகாரப்பெயர் என்ன?  இங்கே ஒரு கத்தோலிக்க குறிப்பு இருக்கிறது.  கவனியுங்கள்: “ரோமிலிருக்கும் போப்புவினுடைய பெயர்:  “விகாரியஸ் ஃபிலி டை” (“தேவகுமாரனுடைய பிரதிநிதி”).6 :The Keys of This Blood” என்கிற தனது புத்தகத்தில் மலாக்கி மார்டின், பக்கங்கள் 114, 122 ல் போப்புவிற்கு இதே பெயரை உபயோகிக்கிறார்.  ஒரு ஆங்கில தொழிபெயர்ப்பு (அதன் கத்தோலிக்க பதிப்பில்) வெளிப்படுத்தல் 13:18ற்கான குறிப்பில்: “அவருடைய பெயரின் எண்ணிக்கை இந்த எண்ணில் இருக்கும்” என்று சொல்லுகிறது.

மீண்டும் போப்புமார்க்கம் இந்த குறிப்படையாளத்தில் பொருந்துகிறது.  எனவே, “முத்திரை” வைத்திருக்கிற மிருகம் போப்புமார்க்கமே!  சரித்திரத்தில் வேறு எந்த வல்லமையும் தெய்வீகம் விவரிக்கும் இந்த குறிப்புகளில் அடங்கமுடியாது.  இப்போது மிருகம் யார் என்கிறதை அடையாளம் கண்டிருக்கிறோம்.  இனி அதனுடைய முத்திரை அல்லது அதிகாரத்தின் அடையாளம் என்ன என்பதை கண்டுபிடிக்கலாம்.  முதலாவது தேவனுடைய அதிகாரத்தின் அடையாளம் என்ன என்பதை நாம் பார்ப்போம்.

1 Andre Retif, The Catholic Spirit, trans. By Dom Aldhelm Dean. Vol. 88 of The Twentieth Century Encyclopedia of Catholicism (New York, Hawthorme Books. 1959, 1959), p.85.

2 Adolf Harnack. What is Christianity? trans. by Thomas Bailey Saunders (new York: Putnam 2nd ed., rev., 1901),p. 270.

3 Alexander Clarence Flick, The Rise of the Mediiaeval Church (reprint New York, Burt Franklin, 1959), pp. 148,149.

4 Joseph Rickaby, ”The Modern Papacy,” Lectures on the History of Religion, Lecture 24, (London Catholic Truth Society, 1910), p.1.

5 (New York, Simon & Schuster, 1990)

6 “Answers to Readers” Questions,” Our Sunday Visitor, Nov. 15, 1914, p. 3

2. தேவனுடைய அதிகாரத்தின் சின்னம் அல்லது முத்திரை என்ன்?

“நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஒய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” – எசேக்கியேல் 20:12;  “அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; “ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி,” – யாத்திராகமம் 31:17.

பதில்:  மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில், தம்முடைய சிருஷ்டிக்கும் வல்லமையின் அடையாளமாகவும், நம்மை பரிசுத்தப்படுத்தும் தமது வல்லமையின் அடையாளமாகவும் நமக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருக்கிறதாக தேவன் கூறுகிறார்.  வேதாகமத்தில் முத்திரை மற்றும் சின்னம் என்கிற வார்த்தைகள் மாறி மாறி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.7  தேவனுடைய அடையாளமான ஓய்வுநாள் சிருஷ்டிகராகவும் இரட்சகராகவும் நம்மை ஆட்சி செய்யும் அவருடைய பரிசுத்த வல்லமையைக் குறிக்கிறது.  அது அவருடைய மக்களின் நெற்றியில் எழுதப்படும் (மனங்களில்-எபிரெயர் 10:16) என்று வெளிப்படுத்தல் 7:1-3 சொல்லுகிறது.  அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவருடைய குணங்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றும் அது அடையாளம் காட்டும்.  அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்போது (இராட்சிப்பைப் பெறும்போது) ஏழாம்நாள் ஓய்வுநாளை பரிசுத்தமான இரட்சிப்பின் சின்னமாக அல்லது முத்திரையாக ஆசரிக்கவேண்டும் என்பதை எபிரெயர் 4:4-10 உறுதிப்படுத்துகிறது. ஒரு நபர் தன் வாழ்க்கையை இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்தார் என்பதையும், அவர் நடத்தும் இடம் எதுவாயினும் அங்கே செல்ல விரும்புவதையும் மெய்யான ஓய்வுநாள் ஆசரிப்பு அடையாளப்படுத்துகிறது.

தேவனுடைய அதிகாரம் அல்லது வல்லமையின் அடையாளமாக அவருடைய பரிசுத்த ஓய்வுநாள் இருப்பதினால், அவருக்குச் சவால்விட்ட மிருகத்தினுடைய சின்னமும் முத்திரையும் ஒரு பரிசுத்த நாளை உள்ளடக்கியிருக்கலாம்.  இது சரியா என்பதைப் பார்ப்போம்.

 7(ஆதியாகமம் 17:11 ஐ ரோமர் 4:11 னோடும், வெளிப்படுத்தல் 7:3 ஐ எசேக்கியேல் 9:4 டனும் ஒப்பிடவும்).

3. போப்புமார்க்கம் தன்னுடைய வல்லமையின் சின்னமாக அல்லது முத்திரையாக எதைக் குறிப்பிடுகிறது?

பதில்:  கத்தோலிக்க கேடிகிசத்திலிருக்கும் இந்த குறிப்பை கவனியுங்கள்.

கேள்வி:  பண்டிகைகளை நியமிக்க சபைக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீங்கள் எவ்விதத்திலாவது நிரூபிக்கமுடியுமா?

பதில்:  அப்படிப்பட்ட அதிகாரம் அதற்கு இல்லாதிருந்தால், இன்றைய நவீன மதவாளர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளுகிற இந்தக் காரியத்தை அவளால் செய்திருக்கமுடியாதே.  ஏழாம்நாளான சனிக்கிழமை ஆசாரிப்பை வேதாகம ஆதாரம் இல்லாத வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பாக அவள் மாற்றியிருக்கமாட்டாள். 8

அதாவது, நான்தான் ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினேன்; ஏறக்குறைய அனைத்து சபைகளும் புதிய பரிசுத்த நாளை ஏற்றுக்கொண்டன என்று போப்புமார்க்கம் இங்கே சொல்லுகிறது.  இவ்விதம், ஞாயிற்றுக்கிழமையே பரிசுத்த நாளாக தன்னுடைய அதிகாரத்தின் சின்னம் அல்லது அடையாளமாக இருக்கிறதென்று போப்புமார்க்கம் உரிமைபாராட்டுகிறது.

4. இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை தேவன் வேதவாக்கியங்களில் முன்னறிவித்திருக்கிறாரா?

பதில்:  ஆமாம்.  தானியேல் 7:25 ல் அந்திகிறிஸ்துவை விவரிக்கும்போது, அது “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற” நினைக்கும் என்று தேவன் கூறியிருக்கிறார்.

அ. போப்புமார்க்கம் எவ்விதம் தேவனுடைய பிரமாணத்தை மாற்ற முயன்றது? அது மூன்று வெவ்வேறு வழிகளில் முயன்றிருக்கிறது.  அவளுடைய கேடிகிசத்தில்: (1) விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கெதிரான இரண்டாவது கற்பனையை அகற்றியிருக்கிறது. (2) நான்காவது கற்பனையை (ஓய்வுநாள் கற்பனையை ) (94 வார்த்தைகளை 8 வார்த்தைகளாகக்) குறுக்கியிருக்கிறது.  ஓய்வுநாள் கற்பனை (யாத்திராகமம் 20:8-11), வாரத்தின் ஏழாம்நாளே தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் என்று தெளிவாக குறிப்பிடுகிறது.  போப்புமார்க்கத்தால் மாற்றப்பட்ட கற்பனை: “ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என்று மாத்திரம் இருக்கிறது.  இவ்விதம் எழுதப்பட்டிருப்பதால் அது எந்தநாளையும் குறிக்கலாம் என்பதை கவனியுங்கள்.  (3) பத்தாவது கற்பனையை அது இரண்டாக பிரித்திருக்கிறது.

ஆ. தேவனுடைய காலங்களை போப்புமார்க்கம் எவ்விதம் மாற்ற முயன்றது?  இரண்டு விதங்களில் முயற்சித்திருக்கிறது.  (1) ஓய்வுநாளை ஏழாம் நாளிலிருந்து முதல் நாளுக்கு மாற்றியிருக்கிறது.  (2) ஓய்வுநாள் துவங்கி முடிகிற தேவனுடைய காலத்தை மாற்றியிருக்கிறது.  வெள்ளிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனவரையிலும் என்று தேவன் நியமித்த ஓய்வுநாளை (லேவி. 23:32), சனிக்கிழமையின் நடுஇரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமையின் நடுஇரவுவரை என்று, அஞ்ஞான ரோம வழக்கத்தின்படி அது அளக்கிறது.  இந்த “மாற்றங்கள்” மிருகத்தால் அல்லது அந்தகிறிஸ்துவினால் முயற்சிசெய்யப்படும் என்று தேவன் அறிவித்திருந்தார்.

கத்தோலிக்க கேடிகிசத்தின் கீழ்கண்ட பிரிவை கவனியுங்கள்.

கேள்வி: எந்த நாள் ஓய்வுநாள்?

பதில்: சனிக்கிழமையே ஓய்வுநாள்.

கேள்வி: சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையை நாம் ஏன் ஆசரிக்கிறோம்?

பதில்: கத்தோலிக்க சபை அதன் பரிசுத்தத்தை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியிருப்பதால் நாம் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிக்கிறோம்.”9

இங்கே மற்றொரு கத்தோலிக்கக் கூற்று:

“சபை வேதாகமத்திற்கு மேலாக இருக்கிறது.  ஓய்வுநாள் ஆசரிப்பை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியதுவே இந்த உண்மைக்கு பலமான ஆதாரம்”10

ஓய்வுநாள் ஆசரிப்பை ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு வெற்றிகரமாக மாற்றியதில், அதனுடைய அதிகாரம் வேதவாக்கியங்களுக்கு “மேலானது” அல்லது “மிஞ்சியது” என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்று போப்புமார்க்கம் கூறுவது இந்த குறிப்புகளினால் தெரிகிறது.

9 Peter Geiermann, The Convert”s Catechism of Catholic Doctrine (St. Louis, B. Herder Book Co., 1957 ed.). p. 50.

10 The Catholic Record (London, Ontario, Canada, Sept. 1, 1923).

5. தேவனுடைய பரிசுத்த நாளை யாரால் துணிவாக மாற்ற முடியும்?

பதில்:  “மெய்யாகவே நீங்கள் ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினீர்களா?” என்று நாம் போப்புமார்க்கத்தைக் கேட்க, அவள்: “ஆமாம், நாங்கள் மாற்றினோம்! அதுவே எங்களுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் சின்னம் அல்லது முத்திரை.” கேள்வி: “எவ்வாறு அப்படிச் செய்யமுடியும்?” என்று நாம் கேட்க, போப்புமார்க்கத்திடம் கேட்கவேண்டிய ஒரு பொருத்தமான கேள்வி இது.  ஆனால் போப்புமார்க்கம் புரொட்டஸ்டண்டுகளை அதிகாரப்பூர்வமாக கேட்கும் கேள்வி இன்னமும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது.  தயவுகூர்ந்து கவனமாக படியுங்கள்.  “சனிக்கிழமை யூதர்களுடைய ஓய்வுநாள், ஆனால் கிறிஸ்தவ ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்லலாம்.  அது எவரால் மாற்றப்பட்டது?  சர்வ வல்லமையுள்ள தேவனின் வெளிப்படையான கட்டளையை மாற்றும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?  ஏழாம்நாளை பரிசுத்த நாளாக ஆசரிப்பாயாக என்று தேவன் பேசி சொல்லியிருக்க, இல்லை, நீங்கள் ஏழாம்நாளில் வேலை செய்து அனைத்துவிதமான உலக வர்த்தகங்களையும் செய்யலாம்.  ஆனாலும் அதற்குபதிலாக வாரத்தின் முதல் நாளை பரிசுத்தமாக ஆசரிக்கக்கடவீர்கள் என்று சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது.  இது மிகவும் முக்கியமான கேள்வி.  இதற்கு எவ்விதம் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  நீங்கள் புரொட்டஸ்டண்டுகளாயிருந்து, வேதாகமம் சொல்லுவதன்படியே செய்வோம் என்று சொல்லுகிறீர்கள்.  எனினும் ஏழு நாளில் ஒரு நாளை கைக்கொள்ளும் முக்கியமான காரியத்தில் வேதாகமத்தின் தெளிவான எழுத்துக்களுக்கு எதிராகப்போய், வேதாகமம் கட்டளையிட்டிருக்கிற நாளுக்குப் பதிலாக வேறொரு நாளை அங்கே வைத்திருக்கிறீர்கள்.

ஏழாம்நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்கிற கட்டளை பத்துப் பிரமாணங்களில் ஒன்றாக இருக்க, மற்ற ஒன்பது கற்பனைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் என்று நம்புகிற உங்களுக்கு, நான்காவது கற்பனையை மிதிப்பதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? உங்கள் கொள்கையில் நீங்கள் உறுதியாயிருப்பீர்களென்றால், வேதாகமத்தை மாத்திரமே மெய்யாலும் பின்பற்றுவீர்களானால், நான்காம் கற்பனை மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக காண்பிக்கும் புதிய ஏற்பாட்டுப் பகுதி ஒன்றை உங்களால் காட்ட முடியவேண்டும்”11 என்கிறது.  தேவனுடைய பரிசுத்த நாளை-அவரை அடையாளப்படுத்துகிற புனிதமான சின்னத்தை நெகிழ்ந்ததற்காக கத்தோலிக்கமார்க்கமும் புரொட்டஸ்டுகளும் பரலோக நியாயசங்கத்தின்முன் ஒரேவித குற்றஞ்செய்தவர்களாக நிற்கிறார்கள்.

11 Library of Christian Doctrine: Why Don’t You Keep Holy the Sabbath-Day? (London: Burns and Oates, Ltd.). pp. 3,4.

6. தம்முடைய பிரமாணம், சின்னம் அல்லது முத்திரையைக்குறித்த என்ன பவித்திரமான எச்சரிப்புகளை தேவன் கொடுத்திருக்கிறார்?

பதில்:

அ. சில கற்பனைகள் முக்கியமானதல்ல என்று சொல்லி மக்களை இடறச்செய்வதற்கெதிராக மதத்தலைவர்களை தேவன் எச்சரிக்கிறார் (மல்கியா 2:7-9). உதாரணமாக: “நீங்கள் எந்த நாளையும் பரிசுத்தமாக ஆசரிக்கலாம் அதில் தவறில்லை” என்று சிலர் போதிக்கிறார்கள்.

ஆ. தமது பிரமாணங்களைக்குறித்த சத்தியங்களுக்கெதிராக தங்களுடைய போதகர்கள் மென்மையான கதைகளையே சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிற மக்களை தேவன் எச்சரிக்கிறார் (ஏசாயா 30:9,10).

இ. தமது பிரமாணத்தைக்குறித்த சத்தியத்திற்கு எதிராக தங்கள் இருதயங்களை கடினப்படுத்துகிறதற்காக தேவன் மக்களை எச்சரிக்கிறார் (சகரியா 7:12).

ஈ. தேவனுடைய பிரமாணத்தை (ஓய்வுநாள் பிரமாணம் உட்பட) கைக்கொள்ளுவதை அந்நிய காரியமாக எண்ணுகிற மக்களை தேவன் எச்சரிக்கிறார் (ஓசியா 8:12).

உ. தமது பிரமாணத்தைப் பின்பற்ற மறுத்து அதை மாற்றவும் முயற்சித்ததாலேயே பூமியின் அழிவுகளும், வேதனைகளும், பிரச்சனைகளும், துக்கங்களும் வருகின்றன என்று தேவன் கூறுகிறார் (ஏசாயா 24:4-6).

ஊ. முடிவுகால தீர்க்கதரிசனங்களை போதிக்க மறுக்கிற மத தலைவர்களை தேவன் எச்சரிக்கிறார் (ஏசாயா 29:10,11).

எ. பரிசுத்தமான காரியங்களுக்கும் (பரிசுத்த ஓய்வுநாளைப்போன்று) பொதுவான காரியங்களுக்கும் (ஞாயிற்றுக்கிழமையைப்போன்று) இடையே எவ்வித வேறுபாடும் இல்லையென்று போதிக்கிற தலைவர்கள் அவருடைய உக்கிரத்தை சந்திக்கவேண்டியதிருக்கும் என்று தேவன் பவித்திரமாக எச்சரிக்கிறார் (எசேக்கியேல் 22:26,31).

7. மக்கள் தங்கள் நெற்றியிலோ அல்லது தங்கள் கையிலோ மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளுவார்கள் (வெளி. 13:16) என்பதன் பொருளென்ன?

பதில்:  நெற்றி மனதைக் குறிக்கிறது (எபிரெயர் 10:16).  ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளென்று ஆசரிக்கும் தீர்மானத்தினால் ஒரு நபர் அவருடைய நெற்றியில் முத்திரையிடப்படுவார்.  கை-செயலுக்கு அடையாளம் (பிரசங்கி 9:10).  தேவனுடைய பரிசுத்த ஓய்வுநாளில் வேலை செய்வதினால் அல்லது நடைமுறை காரணங்களுக்காக (வேலை, குடும்பம்) ஞாயிற்றுக்கிழமைச் சட்டத்திற்கு இணைந்து செல்லுவதினால் ஒரு நபர் கைகளில் முத்திரையிடப்படுவார்.  தேவனுக்காகவோ அல்லது மிருகத்திற்காகவோ பெறும் அடையாளம் அல்லது முத்திரையை மக்களால் காணமுடியாது.  தேவனுடைய சின்னம் அல்லது அடையாளமாகிய ஓய்வுநாளையோ, அல்லது மிருகத்தின் முத்திரையாகிய ஞாயிற்றுக்கிழமையையோ ஏற்றுக்கொள்வதின்வழியாக நீங்களே உங்களை முத்திரையிடுகிறீர்கள்.  இதை மனிதரால் காணமுடியாதிருப்பினும் யார் எந்த முத்திரையை பெற்றிருக்கிறார்கள் என்பதை தேவன் அறிவார் (2 தீமோ. 2:19).

8. ஏசாயா 58:1,13,14 ன்படி என்ன தீர்மானமான செய்தியை கடைசி நாட்களில் தேவன் தமது மக்களுக்குக் கொடுக்கிறார்?

“சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலை … தெரிவி.”  “என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி … அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்”- ஏசாயா 58:1,13,14.

பதில்:  என்னுடைய பரிசுத்த நாளை மீறுவதினால் பாவம் செய்கிறார்கள் (ஒருவேளை அறியாமலேகூட இருக்கலாம்) என்பதை “என்னுடைய மக்களுக்கு” காண்பித்து, நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி என்னுடைய ஓய்வுநாளை மீறுவதை நிறுத்தச் சொல்லுங்கள்; அவர்கள் உங்களுக்கு செவிகொடுக்கும்படி உரத்த சத்தமாகப் பேசுங்கள் என்று அவர் கூறுகிறார்.  வெளிப்படுத்தல் 14:9-12 வரை வரும் மிருகத்தின் முத்திரையைக்குறித்த செய்தியைக் கொண்டுவந்த மூன்றாவது தூதனும் (வசனம் 9) உரத்த சத்தத்தோடு பேசுவதை கனியுங்கள்.  சாதாரணமாக நினைத்துவிடாதபடிக்கு இந்த செய்தி மிக முக்கியமான செய்தி.  இது வாழ்வா சாவா என்பதைக் குறித்தது. தாம் அழைக்கும்போது தம்முடைய ஆடுகள் அல்லது மக்கள் தமக்குப் பின்செல்லுவார்கள் (யோவான் 10:16,27) என்று இயேசு கூறுகிறார்.

9. ஞாயிற்றுக்கிழமையில் (அதை பரிசுத்த நாளாக எண்ணி) ஆராதனைசெய்யும் மக்கள் இப்போது மிருகத்தின் முத்திரையை பெற்றிருக்கிறார்களா?

பதில்:  இல்லை.  ஞாயிற்றுக்கிழமை ஆராதனை சட்டத்தினால் வலியுறுத்தப்படும் வரையிலும் மிருகத்தின் முத்திரையை எவரும் பெறமாட்டார்கள்.  சற்றுமுன் இருக்கிற அந்த நேரத்தில் மிருகத்தின் பொய் போதனைகளை பின்பற்றி ஞாயிற்றுக்கிழமையில் (மிருகத்தின் போலி பரிசுத்தநாள்) ஆராதனை செய்ய தீர்மானிக்கிறவர்கள் மிருகத்தின் முத்திரையை பெறுவார்கள்.  இயேசுவை பின்பற்றி அவருடைய ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்து அவருடைய முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். எதிர்காலத்தில் மிருகத்தின் முத்திரையைப் பெற மறுக்கப்போகிறவர்கள், இயேசுவினுடைய ஓய்வுநாள் கொடியின் கீழாக இப்போதே வரவேண்டும்.  அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு (அப்போஸ்தலர் 5:32) அவருடைய வல்லமை கிடைக்கும்.  அவரின்றி நம்மால் எதுவும் செய்யக்கூடாது (யோவான் 15:5).  அவராலே எல்லாம் கூடும் (மாற்கு 10:27).

10.வெளிப்படுத்தல் புத்தகத்தின்படி தேவனுடைய நித்திய இராஜ்யத்தில் யோவான் யாரை குறிப்பாகக் கண்டான்?

பதில்: பதில் மும்மடங்காகவும் மிகவும் தெளிவாகவும் இருக்கிறது.

  1. தேவனுடைய சின்னத்தை அல்லது முத்திரையை (ஓய்வுநாளை) தங்கள் நெற்றிகளில் பெற்றவர்கள் (வெளிப்படுத்தல் 7:3,4).
  2. மிருகத்தோடும் அதன் சொரூபத்தோடும் தங்களை அடையாளப்படுத்த மறுத்து, அதனுடைய முத்திரையை அல்லது நாமத்தை தங்கள் நெற்றிகளில் பெற மறுத்தவர்கள் (வெளிப்படுத்தல் 15:2)
  3.  இயேசுவை எல்லாவற்றிலும் முழுமையாக நம்பி, அவர் நடத்துமிடமெல்லாம் இன்றைக்கும் நித்தியத்திற்கும் அவரைப் பின்பற்றும் மக்கள் (வெளிப்படுத்தல் 14:4).  இதைவிடுத்து வேறு வழியே இல்லை.
11. இயேசு இன்று மக்களுக்கு என்ன சொல்லுகிறார்?

அடைந்திருப்பான்” – யோவான் 8:12.

பதில்:  என்ன ஒரு வியக்கத்தக்க வாக்குத்தத்தம்!  நாம் அவரை பின்பற்றுவோமானால் இருளில் இருக்கமாட்டோம். மாறாக, மகிமையான சத்தியத்தைப் பெற்றிருப்போம்.  இதைக்காட்டிலும் வேறு எதுவும் நம்மை அதிக உற்சாகப்படுத்த முடியாது.  மேலும், அவரை பின்பற்றி அவருடைய ஓய்வுநாளை ஆசரிப்பது தேவனுயை முத்திரையை நம் நெற்றியில் பதிக்கும்; கீழ்ப்படியாதவர்கள்மேல் (வெளிப்படுத்தல் 16) விழும் பயங்கரமான வாதைகளிலிருந்து (சங்கீதம் 91:10) அது பாதுகாக்கும்.  இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுரூபப்பட நாம் ஆயத்தமாயிருப்பதையும் அது குறிக்கிறது.  என்ன ஆசீர்வாதமான பாதுகாப்பையும் நிச்சயத்தையும் ஆண்டவர் நமக்குக் கொடுக்கிறார்!

அவசரமான எச்சரிப்பு வெளிப்படுத்தல் 14:6-14 வரையிருக்கும் முத்தூதை அறிவிக்கிற 9 வேதபாடங்களில் கடைசி மூன்றை படிக்கும்போது சில அதிர்ச்சியளிக்கும் அறிவிப்புகளை நீங்கள் காண்பீர்கள். அவைகள்:

  1. பூமியின் இறுதிப் போராட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கையும் 2. உலகத்தின் மதங்களும் சபைகளும் அதில் எவ்விதம் ஈடுபடும் என்பதையும், 3. பூமியின் கடைசி யுத்தத்தில் உலகத்தின் நிலைமை என்னவாயிருக்கும் என்பதையும், 4. கோடிக்கணக்கானோரை வஞ்சிக்கும் சாத்தானின் தந்திரங்களையும் விவரிக்கும்.

ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினதாகக் கூறும் போப்புமார்க்கத்தின் உரிமையைக்குறித்து புரொட்டஸ்டண்டு மார்க்கம் என்ன சொல்லும் என்று நீங்கள் அதிசயிக்கலாம்.  அதிர்ச்சியூட்டும் பதில்களை அடுத்த 2 பக்கங்களில் வரும் மேற்கோள்கள் உங்களுக்குக் கொடுக்கும்.

12. அவருடைய ஏழாம்நாள் ஓய்வுநாளை (சனிக்கிழமையை) அவருடைய பரிசுத்த நாளாக ஆசரிக்கத் துவங்கவும், அவர் எங்கு நடத்தினாலும் அவரைப் பின்பற்றவும் நீங்கள் தீர்மானிக்கீறீர்களா?

பதில்: __________________________________________

ஓய்வுநாளைக்குறித்து சபைகளிலும் மற்ற அதிகாரங்களிலுமிருந்து வந்த கருத்துக்கள்:

பேப்டிஸ்டு

“ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற கற்பனை இருந்தது; இப்போதும் இருக்கிறது.  ஆனால் ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமை அல்ல … ஓய்வுநாள் ஏழாம்நாளிலிருந்து வாரத்தின் முதல்நாளுக்கு மாற்றப்பட்டதென்பதை சற்று வெற்றித்தோரணையிலேயேகூட சொல்லிக் கொள்ளலாம் … இந்த மாற்றத்தின் பதிவை எங்கே காணலாம்? புதிய ஏற்பாட்டிலல்ல-நிச்சயமாக அல்ல.  ஓய்வுநாள் ஸ்தாபனத்தை ஏழாம்நாளிலிருந்து வாரத்தின் முதல்நாளுக்கு மாற்றினதற்கான எந்த வேத ஆதாரமும் இல்லை.” Dr. Edward T. Hiscox, author of The Baptist Manual, in a paper read before a New York ministers” conference held Nov. 13, 1893.

கத்தோலிக்க மார்க்கம்

“நீங்கள் வேதாகமத்தில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல்வரை வாசித்தாலும், ஞாயிற்றுக்கிழமையின் பரிசுத்தத்தை அதிகாரமாக அறிவிக்கும் ஒரு வரியைக்கூட பார்க்க முடியாது.  நாங்கள் (கத்தோலிக்கர்கள்) ஒருபோதும் பரிசுத்தமாக நினைக்காத சனிக்கிழமை மதஆசரிப்பை வேதவாக்கியங்கள் கட்டாயப்படுத்துகின்றன.” James Cardinal Gibbons, The Faith of Our Fathers, 93rd edition, 1917, P. 58.

கிறிஸ்துவின் சபை

“முடிவாக, இந்தக் காரியத்தைக் குறித்த கிறிஸ்துவின் சாட்சி நமக்கு இருக்கிறது.  மாற்கு 2:27 ல் “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” என்று அவர் சொல்லுகிறார்.  பேலே என்பவரும் ஹெங்ஸ்டன்பர்ஃ என்பவரும் நம்மை நம்பவைத்ததைப்போன்று ஓய்வுநாள் இஸ்ரவேலருக்காக மாத்திரமல்ல, மனிதனுக்காக – மனுக்குலத்திற்காக உண்டாக்கப்பட்டதென்பது இந்த வசனத்தில் தெளிவாக இருக்கிறது.  எனவே ஓய்வுநாள் ஆதியிலிருந்து பரிசுத்தப்படுத்தப்பட்டதென்றும், அது அனைத்து மனிதரின் சந்தோஷத்திற்காகவும் தேவன் நியமித்த முதல் நியமனங்களில் ஒன்றாக ஏதேன் தோட்டத்திலேயே ஆதாமுக்கு கொடுக்கப்பட்டதென்றும் நாம் முடிக்கிறோம்.” Robert Milligan, Scheme of Redemption, (St.Louis, The Bethany Press, 1962), P. 165.

காங்கிரிகேஷனவிஸ்ட்

“கிறிஸ்தவர்களின் ஓய்வுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வேதவாக்கியங்களில் இல்லை; ஆதிகாலசபையால் அது ஓய்வுநாளென்று அழைக்கப்படவுமில்லை.” Dwight”s Theology, Vol. 4, P. 401.

எபிஸ்கோபல்

“வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ரோம நாட்காட்டியில் டயிஸ் சொலிஸ் “சூரியனின் நாள்”- சூரியனுக்கு பிரதிஷ்டைபண்ணப்பட்ட நாள்) ஆதி கிறிஸ்தவர்களால் ஆராதனை நாளாக பின்பற்றப்பட்டது….. இந்த ஆசரிப்பிற்கு எந்த ஒழுங்கு முறைகளும் புதிய ஏற்பாட்டில் இல்லை.  இது கட்டாயப்படுத்தப்படவுமில்லை,” “Sunday,” A Religious Encyclopedia, Vol. 3, (New York, Funk and Wagnalls, 1883) P. 2259.

லுத்தரன்

“கர்த்தருடைய நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆசரிப்பது தேவனுடைய கட்டளையில் அஸ்திபாரப்படவில்லை.  சபை அதிகாரத்தின்மேல் அஸ்திபாரப்பட்டிருக்கிறது.” Augsburg Confession of Faith, quoted in Catholic Sabbath Manual, Part 2, Chapter 1, Section 10.

மெத்தடிஸ்ட்

“ஞாயிற்றுக்கிழமை… வாரத்தின் முதல்நாளை சபை ஆராதனை நாளாகக் கொண்டிருந்ததற்கான அறிகுறிகள் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றன.  ஆனால் அந்த நாளை ஆசரிக்கவோ அல்லது யூதருடைய ஓய்வுநாளை அந்த நாளுக்கு மாற்றவோ சொல்லும் எந்த வாக்கியமும் இல்லை.” Harris Franklin Rall, Christian Advocate, July 2, 1942.

மூடி வேதாகம நிறுவனம்

“ஏதேனில் ஓய்வுநாள் இருந்தது.  அப்போதிருந்து அது இருந்துகொண்டிருக்கிறது.  நாலாம் கற்பனை “நினைப்பாயாக” என்று கூறுவதினால், தேவன் சீனாயில் கற்பலகைகளில் தமது பிரமாணங்களை எழுதினபோது அது ஏற்கனவே இருந்தது என்று தெரிகிறது.  மற்ற ஒன்பது பிரமாணங்களும் இன்னமும் இருக்கிறது என்று சொல்லும்போது, இந்த ஒரு பிரமாணம் ஒழிந்துவிட்டது என்று மனிதன் எவ்விதம் உரிமைபாராட்டலாம்?” D.L. Moody, Weighed and Wanting, P. 47.

பிரிஸ்பிடேரியன் சபை

“சன்மார்க்க சட்டம் முழுமையும் அகற்றப்பட்டது என்று காண்பிக்கப்படும் வரையிலும் ஓய்வுநாள் இருக்கும்.  கிறிஸ்துவின் போதனை ஓய்வுநாளின் நிலைத்த தன்மையை உறுதிபடுத்துகிறது.  T.C.Blake, D.D., Theology Condensed, PP. 474, 475.

பெந்தெகோஸ்தே சபை

“சனிக்கிழமை கர்த்தருடைய நாளாக இருக்கவேண்டும் என்று வேதாகமம் போதிக்கவில்லையா?… நாம் ஏன் ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்கிறோம்? புதிய ஏற்பாட்டிலல்ல, வேறு ஏதாவது ஆதாரங்களிலிருந்துதான் இதற்கான பதிலை நாம் தேடவேண்டும்.”  David A. Womack, “Is Sunday the Lord’s Day?”, The Pentecostal Evangel, Aug. 9, 1959, No. 2361, P. 3

என்சைக்ளோபீடியா

“வாரத்தின் முதலாம் நாளில் சூரியனை ஆராதித்ததினால் ஞாயிற்றுக்கிழமை என்ற பெயர் அதற்கு புறஜாதிகளால் கொடுக்கப்பட்டது … ஏழாம்நாள் தேவனால்தாமே ஆசீர்வதிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்பட்டது … தம்முடைய சிருஷ்டிகள் அதை தமக்கென்று பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று அவர் கோருகிறார்.  இந்த கற்பனை பிரபஞ்சம் முழுமைக்குமானதும், பெயர்க்கக்கூடாமல் நிலைநிற்கிறதுமான கடமையாயிருக்கிறது. – Eadie’s Biblical Cyclopedia, 1980 ed., P. 561

கேள்விகள்

1. அநேகர் ஏற்கனவே மிருகத்தின் முத்திரையைப் பெற்றுவிட்டார்கள்:  (1)

_____ ஆம்.
_____ இல்லை.


2. மிருகத்தின் முத்திரை: (1)

_____ உங்களுடைய பாதுகாப்பு எண்.
_____ ஞாயிற்றுக்கிழமையே பரிசுத்தநாள் என்பது.
_____ மளிகைப் பொருட்களின்மேலிருக்கும் பார் கோடுகள்.


3. முத்திரை வைத்திருக்கும் மிருகம்: (1)

_____ ஐக்கிய நாடுகள்.
_____ போப்புமார்க்கம்.
_____ ஐரோப்ப ஐக்கிய நாடுகள்.
_____ ட்ரை லேட்டரல் கமிஷன்.


4. முத்திரை அடையாளமானதல்ல, மாறாக, அனைவராலும் பார்க்கமுடிகிற ஒன்று: (1)

_____ ஆம்.
_____ இல்லை.


5. தேவனுக்கும், அவருடைய வல்லமைக்கும் அதிகாரத்திற்குமான ஒரு சின்னம் அல்லது முத்திரை இருக்கிறது. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


6. தேவனுடைய அதிகாரத்தின் முத்திரை: (1)

_____ விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் இரகசிய எண்.
_____ அந்நியபாஷை பேசுவது.
_____ சிருஷ்டிப்பு பரிசுத்தமாக்குதலை நினைவுபடுத்தும் ஓய்வுநாள் ஆசரிப்பு.
_____ ஞானமுழுக்கு.


7. “மிருகம்” எவ்விதம் தேவனுடைய பிரமாணத்தை மாற்ற முயற்சித்தது? (2)

_____ ஓய்வுநாளை (4ம் கற்பனை) ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியதன்வழியாக.
_____ விபசாரம் செய்வது பாவமல்ல என்று போதிப்பதன்வழியாக.
_____ விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளுவதற்கு எதிரான கற்பனையை அகற்றியதன்வழியாக.


8. வேதாகம தீர்க்கதரிசனத்தில் 42 மாதங்கள் என்பது எவ்வளவு காலம்? (1)

_____ 420 வருடங்கள்.
_____ எழுத்தின்படியான மூன்றரை வருடங்கள்.
_____ எழுத்தின்படியான 1260 நாட்கள்.
_____ எழுத்தின்படியான 1260 வருடங்கள்.


9. மிருகத்தின் முத்திரை எங்கே போடப்படும்,? (2)

_____ கையில்.
_____ வாயில்.
_____ கன்னத்தில்.
_____ நெற்றியில்.


10. தேவனுடைய முத்திரை எங்கே போடப்படும்? (1)

_____ கையில்.
_____ நெற்றியில்.
_____ ஒரு நபருடைய நாவில்.


11. முத்தூதில் எந்த தூது மிருகத்தின் முத்திரைக்கு எதிராக எச்சரிக்கிறது? (1)

_____ முதலாம் தூதனின் தூது.
_____ இரண்டாம் தூதனின் தூது.
_____ மூன்றாம் தூதனின் தூது.


12. தேவனுடைய காலங்களை மாற்ற மிருகம் இவ்விதம் முயற்சித்தது. (2).

_____ புது வருட தினத்தை விடுமுறை நாளாக கொண்டாடுவதன்வழியாக.
_____ தேவனுடைய பரிசுத்த நாளை ஏழாம் நாளிலிருந்து வாரத்தின் முதலாம் நாளுக்கு மாற்றினதன்வழியாக.
______ சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரையிலும் என்கிற தேவனுடைய பரிசுத்த நாளுக்கான நேரத்தை, நடு இரவிலிருந்து நடு இரவுவரை என்று மாற்றியதால்.


13. மிருகத்தின் முத்திரையைக்குறித்து இயேசு எச்சரிப்பின் செய்தியைக் கொடுத்திருக்கிறார். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


14. சின்னம், முத்திரை, அடையாளம் இவைகள் வேதவாக்கியங்களில் மாறி மாறி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன (1)

_____ ஆம்.
_____ இல்லை.


15. ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக ஆசரிப்பதற்கு வேதாகம ஆதாரம் இல்லை. (1)

_____ உண்மை.
_____ பொய்.


16. நான் தேவனுடைய ஏழாம்நாள் ஓய்வுநாளை (சனிக்கிழமையை) அவருடைய பரிசுத்த நாளாக ஆசரிக்கவேண்டும் என்று நம்புகிறேன்.

_____ ஆம்.
_____ இல்லை.