வேதபாடங்கள் 15
அந்திகிறிஸ்து யார் அல்லது அது என்ன? அது ஒரு தீய கூட்டணியா? அல்லது தனிநபரின் வஞ்சகமா? அவன் எதிர்காலத்தில்தான் தோன்றுவான் என்று சிலர் சொல்லுகின்றனர்.

அநேக வருடங்களுக்கு முன்பாக ரோமர்களின் காலத்திலேயே அவன் தோன்றிவிட்டதாக மற்றவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அவன் இன்று உயிரோடிருக்கிறான் என்று வேதாகமம் காட்டுகிறது. இந்த பூமியின் முடிவுகால சம்பவங்களில் அந்திகிறிஸ்துவின் வல்லமை முக்கிய பங்குவகிக்கும் என்று வேதாகம தீர்க்கதரிசனங்கள் போதிக்கின்றன. அவன் யார் என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? இந்த தீய வல்லமையை புரிந்துகொள்ளும்வரை முடிவுகால சம்பவங்களை நீங்கள் புரிந்துகொள்ளமுடியாது. எனவே நீங்கள் நிச்சயத்தோடு இருக்கவேண்டும். மிகவும் புதிரான இந்த வேதபாடத்திற்கு ஆயத்தப்படுங்கள்.
தானியேல் 7ம் அதிகாரத்தின் அடிப்படையிலான இந்தப் பாடம் அந்திக்கிறிஸ்துவை தெளிவாகவும் தவறில்லாமலும் அடையாளம் காட்டுகிறது. எனினும் இது ஒரு முகவுரையே. அடுத்துவரும் பாடங்கள், உலக முழுவதையும் தாக்கப்போகிற அவனுடைய சில நடவடிக்கைகளை வெளிக்காட்டும். இன்று நீங்கள் அறிந்துகொள்ளப்போவது உங்களை வருத்தப்படுத்தலாம். ஆனால் தானியேல் 7ன் தீர்க்கதரிசனம் உங்களை நேசிக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது என்பதை நினைவுகூருங்கள். அவசரமான இந்த முக்கியப்பொருளை ஆராயும்போது தேவனுடைய நடத்துதலுக்காக ஜெபியுங்கள். இந்த பாடத்தை படிக்கும்முன்பாக தானியேல் 7ஜ ஒருமுறை வாசியுங்கள்.
1. இந்த அதிகாரம் துவங்கும்போது நான்கு மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பிவருகிறதை தானிலே் காண்கிறான். தீர்க்கதரிசனத்தில் மிருகம் எதைக் குறிக்கிறது? சமுத்திரம் எதைக் குறிக்கிறது?

“நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்” – தானியேல் 7:23;
“அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் காண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்” – வெளிப்படுத்தல் 17:15.
பதில்: மிருகம் இராஜ்யங்களையோ அல்லது தேசங்களையோ குறிப்பிடுகிறது. தண்ணீர் ஜனக்கூட்டத்தை அல்லது திரளான மக்களை குறிக்கிறது.

2. தானியேல் 7லிருக்கும் நான்கு மிருகங்களும் நான்கு உலகளாவிய சாம்ராஜ்யங்களை
(வசனம் 17,18) குறிக்கின்றன. முதல் இராஜ்யமாகிய பாபிலோன் (தானியேல் 2:38,39) தானியேல் 7:4ன்படி சிங்கமாக குறிக்கப்படுகிறது. (பாபிலோனை சிங்கமாகக் காட்டுகிற எரேமியா 4:7; 50:17,43,44ஜ பார்க்கவும்). “கழுகின் செட்டைகள்” என்றால் என்ன? வசனம் 2லிருக்கும் “நாலு காற்றுகள்” எதைக் குறிக்கின்றன?
“உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்” – உபா. 28:50;
“பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்” – எரேமியா 25:32,33.
பதில்: கழுகின் செட்டைகள் வேகத்தை குறிக்கின்றன (எரேமியா 4:13; ஆபகூக் 1:6-9ஜ பார்க்கவும்) காற்று யுத்தங்களையும், குழப்பங்களையும், அழிவுகளையும் குறிக்கின்றது (வெளிப்படுத்தல் 7:1-3யும் பார்க்கவும்)
3. கரடி (தானியேல் 7:5) எந்த இராஜ்யத்தைக் குறிக்கிறது? அதன் வாயிலிருக்கும் மூன்று விலா எலும்புகள் எதை அடையாளப்படுத்துகின்றன?

பதில்: தானியேல் 8ஜ படிக்கவும். தானியேல் 7ல் வரும் மிருகங்கள் 8ம் அதிகாரத்திலும் அதற்கு இணையாக வருகிறதை கவனியுங்கள். வசனம் 21ல் வரும் கிரேக்கர் அல்லது வெள்ளாட்டுக்கடாவிற்கு முன்னதாக வரும் இராஜ்யம் மேதியா பெர்சியா என்று தானியேல் 8:20 குறிப்பாக சொல்லுகிறது. அது தானியேல் 7ல் கரடியால் குறிக்கப்பட்ட அதே வல்லமை-இரண்டாவது உலக சாம்ராஜ்யம். இந்த இராஜ்யம் இரண்டு மக்கள் கூட்டத்தால் ஆகியிருந்தது. மேதியர்கள் முதலாவது வந்தனர். (தானியேல் 7:5ல் கரடி ஒருபக்கம் சாய்ந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது). ஆனால் முடிவில் பெர்சியர்கள் வல்லமை கொண்டனர் (தானியேல் 8:3ல் ஆட்டுக்காடாவின் கொம்புகளில் பிந்தி முளைத்த கொம்பு உயர்ந்தது). அந்த மூன்று விலா எலும்புகளும் மேதிய பெர்சியர்கள் வெற்றிகொண்ட மூன்று முதன்மையான வல்லமைகள். அவை லிடியா, பாபிலோன் மற்றும் எகிப்து என்னும் நாடுகள்.

4. மூன்றாவது இராஜ்யமான கிரேக்கு (தானியேல் 8:21) நான்கு செட்டைகளும் நான்கு தலைகளும் (தானியேல் 7:6) கொண்டிருந்த சிவிங்கியால் காட்டப்படுகிறது. அதன் தலைகள் எதைக் குறிப்பிடுகின்றன? அதன் நான்கு செட்டைகளும் எதைக் குறிப்பிடுகின்றன?
பதில்: மகா அலெக்சாண்டர் மரித்தபோது, பிரிந்துபோன அவனுடைய இராஜ்யத்தின் நான்கு பகுதிகளை அதன் நான்கு தலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நான்கு பகுதிகளுக்கும் கேசண்டர், லிசிமேக்கஸ், டாலமி மற்றும் செலூக்கஸ் என்னும் நான்கு தளபதிகள் தலைமை தாங்கினார்கள். நான்கு செட்டைகள் (சிங்கத்திற்கு இருந்ததைப்போன்று இரண்டல்ல!) மிக அதிக வேகத்தைக் குறிப்பிடுகின்றன. இது அலெக்சாண்டரின் வெற்றிகளில் உண்மையென்று தெரிகிறது (எரேமியா 4:11-13).
5. இருப்பு பற்களையும் பத்துக் கொம்புகளையுமுடைய பயங்கரமான மிருகமாக ரோம சாம்ராஜ்யம் காட்டப்படுகிறது (தானியேல் 7:7) . அதன் கொம்புகள் எதை குறிக்கின்றன?

பதில்: அந்த அஞ்ஞான ரோம இராஜ்யத்தின் உடைந்துபோன பத்து பிரிவுகளை அல்லது பத்து இராஜாக்களை இந்த பத்து கொம்புகளும் காட்டுகின்றன (தானியேல் 7:24). (இந்த பத்து இராஜ்யங்களும் தானியேல் 2:41-44 வரை விவரிக்கப்பட்டுள்ள அந்த சிலையின் பத்து விரல்களுக்கு ஒப்பானவை). அலைந்துகொண்டிருந்த அந்த நாகரீகமற்ற கோத்திரங்கள் ரோம சாம்ராஜ்யத்தின் மேல் பரவி, தங்களுக்குள் தேசங்களை பிரித்துக் கொண்டனர். அந்த பத்தில் ஏழு கோத்திரங்கள் இன்றைய நாகரீக மேற்கு ஜரோப்பாவில் இருக்கும் நாடுகளாக வளர்ந்தன. அதில் மூன்று கோத்திரங்கள் பிடுங்கப்பட்டு அழிக்கப்பட்டன. தகர்த்தப்பட்ட இராஜ்யங்களைக்குறித்து கீழே பார்க்கலாம்.
| விசிகோத் | ஸ்பெயின் |
| ஆங்கிலோ சாக்சன்ஸ் | இங்கிலாந்து |
| பிரான்ஸ் | பிரான்ஸ் |
| அலிமானி | ஜெர்மனி |
| பர்கண்டியன்ஸ் | சுவிட்சர்லாந்து |
| லம்பார்ட்ஸ் | இத்தாலி |
| சூவி | போர்ச்சுக்கல் |
| ஹெருளி | பிடுங்கப்பட்டது |
| ஆஸ்ட்ரோகோத்ஸ் | பிடுங்கப்பட்டது |
| வாண்டல்ஸ் | பிடுங்கப்பட்டது |

6. தானியேல் 7ன் தீர்க்கதரிசனத்தில் அடுத்து என்ன சம்பவிக்கிறது?
“அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது” – தானியேல் 7:8.
பதில்: அடுத்ததாக “சின்ன கொம்பின்” வல்லமை தோன்றுகிறது. மற்ற நான்கு சாம்ராஜ்யங்களையும் இணைத்து சொல்லப்பட்டிருப்பதைக் காட்டிலும் இதை விவரிப்பதற்கு தேவன் அதிக இடம் கொடுத்திருப்பதாலும், வேதாகம குணலட்சணங்கள் இதை தீர்க்கதரிசனம் மற்றும் சரித்திரத்தின் அந்திகிறிஸ்துவாக காண்பிப்பதாலும் இதை நாம் கவனமாக அடையாளங்காணவேண்டும். இதை அடையாளம் காணுவதில் எந்தத் தவறும் இருக்கக்கூடாது.
7. அடையாளம் காணும் தெளிவான குறிப்புகள் இருக்கின்றனவா?
பதில்: ஆமாம். தானியேல் 7 லிருக்கும் அந்திகிறிஸ்துவை உறுதியாக அடையாளப்படுத்த தேவன் 9 குணங்களைக் கொடுக்கிறார். தேவனுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சத்தியங்கள் வேதனை தரக்கூடியதாக சிலர் பார்த்தாலும், அவருடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தமாக அவைகளை ஒப்புக்கொள்ள நாம் உண்மையாக இருக்கவேண்டும். இயேசுவின் 9 குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
அ. மேற்கு ஜரோப்பிய நாடுகளான பத்து கொம்புகளை (தானியேல் 7:8) “இடையிலே” வேறொரு “சின்ன கொம்பு” எழும்பிற்று. அப்படியானால் அது மேற்கு ஜரோப்பாவிலிருக்கிற சின்ன சாம்ராஜ்யமாக இருக்கும்.
ஆ. அதற்காக பேசக்கூடிய ஒரு மனிதனை அது தலைமையாகக் கொண்டிருக்கும் (தானியேல் 7:8).
இ. அது மூன்று இராஜ்யங்களைப் பிடுங்கிப்போடும் (தானியேல் 7:8).
ஈ. அது மற்ற பத்து இராஜ்யங்களைவிடவும் “வேறாயிருக்கும்” (தானியேல் 7:24).
உ. அது பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணி அவர்களை ஒடுக்கும் (தானியேல் 7:21,25).
ஊ. அது உலக சாம்ராஜ்யமான அஞ்ஞான ரோம இராஜ்யத்திலிருந்து எழும்பும் நான்காம் இராஜ்யம் (தானியேல் 7:7,8).
எ. தேவனுடைய மக்கள் (பரிசுத்தவான்கள்) “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புவிக்கப்படுவார்கள்” (தானியேல் 7:25).
ஏ. அது “உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசும்” அல்லது தேவனை தூஷக்கும் (தானியேல் 7:25). அதே வல்லமை “பெருமையானவைகளையும் தூஷணங்களையும்” பேசியதாக வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 13:5ல் கூறுகிறது.
ஜ. அது “காலங்களையும் பிரமாணங்களையும்” மாற்ற நினைக்கும் (தானியேல் 7:25).
இந்த குறிப்படையாளங்களெல்லாம் வேதாகமத்திலிருந்து நேரடியாக வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இவைகள் மனித கருத்தோ அல்லது கற்பனையோ அல்ல. விவரிக்கப்பட்டுள்ள வல்லமை எது என்பதை சரித்திர ஆசிரியர்கள் உடனே சொல்லிவிடமுடியும். இந்த குறிப்புகள் போப்புமார்க்கமான பேப்பசி என்கிற ஒரு வல்லமைக்கு மாத்திரமே பொருந்துகிறது. எனினும் குறிப்பாக அறியும்படி ஒன்பது அடையாளங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கவனமாக ஆராய்ந்து பார்ப்போம். சந்தேகத்திற்கு எந்த இடமும் வைக்கப்படக்கூடாது.
இந்த குறிப்படையாளங்களெல்லாம் வேதாகமத்திலிருந்து நேரடியாக வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இவைகள் மனித கருத்தோ அல்லது கற்பனையோ அல்ல. விவரிக்கப்பட்டுள்ள வல்லமை எது என்பதை சரித்திர ஆசிரியர்கள் உடனே சொல்லிவிடமுடியும். இந்த குறிப்புகள் போப்புமார்க்கமான பேப்பசி என்கிற ஒரு வல்லமைக்கு மாத்திரமே பொருந்துகிறது. எனினும் குறிப்பாக அறியும்படி ஒன்பது அடையாளங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கவனமாக ஆராய்ந்து பார்ப்போம். சந்தேகத்திற்கு எந்த இடமும் வைக்கப்படக்கூடாது.

8. போப்புமார்க்கம் இந்த குறிப்புகளுக்குள் அடங்குகிறதா?
பதில்: ஆமாம். மிகப் பூரணமாக ஒவ்வொரு குறிப்பிலும் பொருந்துகிறது. கீழே கவனியுங்கள்.
அ. மேற்கு ஜரோப்பிய நாடுகளான பத்து கொம்புகளுக்கு “இடையிலே” எழும்பிற்று.
பூமியில் போப்புமார்க்கத்தின் இடம் மேற்கு ஜரோப்பாவின் மைய இடமான ரோமிலிருக்கும் இத்தாலி.
ஆ. அதற்காக பேசக்கூடிய ஒரு மனிதனை அது தலைமையாகக் கொண்டிருக்கும்.
போப்புமார்க்கம் இந்த அடையாளத்திற்குள் பொருந்துகிறது. எப்படியெனில் அதற்காக பேசும் ஒரு மனிதன் (போப்பு) அதற்குத் தலையாயிருக்கிறான்.

இ. அது மூன்று இராஜ்யங்களைப் பிடுங்கிப்போடும்.
மேற்கு ஜரோப்பாவின் சக்கரவர்த்திகள் பெரும்பாலும் கத்தோலிக்கராயிருந்து போப்புமார்க்கத்தின் வளர்ச்சிக்கும் அதிகாரத்திற்கும் ஆதரவளித்தனர். எனினும் வாண்டல்ஶ், ஹெருளி மற்றும் ஆஸ்ட்ரகோத் என்னும் மூன்று ஆரிய இராஜ்யங்கள் போப்புமார்க்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, அவர்கள் அடக்கப்பட்டு அழிக்கப்படவேண்டும் என்று கத்தோலிக்க மன்னர்கள் தீர்மானித்தனர். தத்துவ அறிஞரும் சரித்திர ஆசிரியருமான டாக்டர் மெர்வின் மேக்ஸ்வெல் “God Cares” என்கிற தனது புத்தகத்தின் முதல்பாகம் 129ம் பக்கத்தில் அதன் விளைவுகளை இவ்விதம் விளக்குகிறார்.
“கத்தோலிக்க மன்னன் ஜெனோ (474-491) ஆஸ்ட்ரகோத்துகளோடு 487ல் ஒரு ஒப்பந்தத்தை ஒழுங்குபண்ணினார். 493ல் ஆரிய ஹெருளி இராஜ்யத்தை முற்றிலும் அழிப்பதில் அது முடிந்தது. கத்தோலிக்க மாமன்னன் ஜஸ்டீனியன் (527-565) 534ல் வாண்டல்களை நாட்டைவிட்டு வெளியேற்றி, 538ல் ஆரிய ஆஸ்ட்ரகோத்தின் வல்லமையை குறிப்பாக முறியடித்தான். இவ்விதம் தானியேலின் மூன்று கொம்புகளான ஹெருளியும், வாண்டல்ஸ்ம், ஆஸ்ட்ரகோத்தும் வேரோடு பிடுங்கப்பட்டன.” போப்புமார்க்கம் இதில் பொருந்துகிறது என்பதைக் காண்பது கடினமல்ல.

ஈ. அது மற்ற பத்து இராஜ்யங்களைவிடவும் “வேறாயிருக்கும்.
போப்புமார்க்கம் இந்த விளக்கத்திற்குள்ளும் அழகாக பொருந்துகிறது. அது ஒரு மத வல்லமையாக ஆட்சிக்கு வந்து, அரசியல் ரீதியான மற்றும் பத்து சாம்ராஜ்யங்களிலும் வேறுபட்டிருந்தது.
உ. அது பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணி அவர்களை ஒடுக்கும்.
அந்த சபை உபத்திரவப்படுத்தினது என்பது நன்கு அறிந்த உண்மையாக இருக்கிறது. போப்புமார்க்கம் தானும் அப்படிச் செய்ததை ஒப்பிக்கொள்ளுகிறது. அதிக ஆதாரமான சான்றுகளும் அதற்கு இருக்கின்றன. அப்போது வாழ்ந்த சரித்திர ஆசிரியர்களுங்கூட, சபை ஐந்துகோடி மக்களை மத உணர்த்துதலின் காரியங்களால் அழித்துப்போட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இரண்டு சான்றுகளை கீழே பார்க்கலாம்..
- “ரோம சபை மனுக்குலத்திலே இதுவரை இருந்திருக்கிற மற்ற எந்த ஸ்தாபனத்தைக்காட்டிலும் அதிக குற்றமில்லாத இரத்தத்தை சிந்தியிருக்கிறது என்பது போதுமான சரித்திர அறிவுகொண்ட எந்த புரோட்டஸ்டண்டினாலும் கேள்விகேட்கப்பட அவசியமில்லாத ஒன்று.”1
2. ஸ்பானிய தேசத்தில் மாத்திரம் நடந்த விசாரணையைக்குறித்து: “In The History of the Inquisition of spain” என்கிற புத்தகத்தில் D. Ivan Antonio Llorente என்பவர் கீழ்காணும் எண்ணிக்கைகளை கொடுக்கிறார். 31,912 நபர்கள் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு அக்கினியினால் அழிக்கப்பட்டனர். 2,41,450 நபர்கள் கொடுமையான ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
கவனமும் கருத்தான வார்த்தைகள்.
இந்த சின்னகொம்பின் வல்லமையை அடையாளம் காண்பதில் சக கிறிஸ்தவர்களைத் தாக்குவதாக எவரும் புரிந்துகொள்ளக்கூடாது. இந்த தீர்க்கதரிசனம் தனிப்பட்ட நபர்களை அல்ல, ஒரு அமைப்பையே குறிக்கிறது என்பதை தயவுசெய்து மனதில் கொள்ளுங்கள். உண்மையான பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மார்க்கம் உட்பட அனைத்து சபைகளிலும் இருக்கிறார்கள். தனக்குப்பிறகு வந்த அநேக சபைகளைப்போல, அஞ்ஞான மார்க்கங்களோடு ஒப்புரவாகிய ஒரு மிகப்பெரிய மத அமைப்பின்மீது வரும் நியாயத்தீர்ப்பையும் சீர்திருத்தங்களையும் கொண்ட செய்தியே தானியேல் 7ம் அதிகாரம்.
அனைத்து விசுவாசங்களின் குறைகளையும் தீர்க்கதரிசனம் காட்டுகிறது
மற்ற தீர்க்கதரிசனங்கள் புரொட்டஸ்டண்டு மார்க்கம் மற்றும் யுத மார்க்கத்தின் விசுவாச குறைகளை குறித்துக்காட்டுகின்றன. அனைத்து மதத்திலும் தேவனுக்கு உண்மையான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவருடைய உண்மையான பிள்ளைகள் (அவர்களுடைய விசுவாசம் என்னவாக இருப்பினும்) தங்களை பாதுகாக்கும் எண்ணத்தில் தங்கள் காதுகளையும் இருதயங்களையும் அவருக்கு எதிராக மூடிக்கொள்ளாது, அவர் கொடுக்கும் திருத்தங்களை தாழ்மையோடு ஏற்றுக்கொள்வார்கள். தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு காரியத்தையும் பட்சபாதமின்றி பேசுவதற்காக நாம் அவருக்கு நன்றியோடு இருக்கவேண்டும்.
ஊ. அது உலக சாம்ராஜ்யமான அஞ்ஞான ரோம இராஜ்யத்திலிருந்து எழும்பும்.
இந்த குறிப்பில் 2 சான்றுகளை நாம் குறிப்பிடுகிறோம்.
- “ஞானமுழுக்கெடுத்த ரோம சாம்ராஜ்யம் என்பதைவிடவும் இந்த கத்தோலிக்க சபை சற்று அதிகமாயிருந்தது … பழைய ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரம் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாகியது. பான்டிபஸ் மேக்சிமஸன் அதிகாரம் போப்பினால் தொடரப்பட்டது.2
- பார்பேரியர்களும் ஆரியர்களும் விட்டுச் சென்ற ரோம கூறுகள் சக்கரவர்த்திக்கு அடுத்து முதன்மையானவராக இருந்த ரோம பாதிரியின் பாதுகாப்பின்கீழ் … (வந்தது). இவ்விதமாக ரோம சபை, உலகளாவிய ரோம சாம்ராஜயத்தின் இடத்தில் தன்னை நுழைத்துக்கொண்டது.”3 எனவே மீண்டும் ஒருமுறை இந்த குறிப்பு போப்புமார்க்கத்திற்கு சரியாகப் பொருந்துகிறது.
எ. தேவனுடைய மக்கள் (பரிசுத்தவான்கள்) “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புகொடுக்கப்படுவார்கள்.”
இந்த குறிப்பைக்குறித்த அநேக காரியங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்.
- காலம் என்பது ஒரு வருடம்; காலங்கள் இரண்டு வருடங்கள்; அரைக் காலம் என்பது அரை வருடம். மற்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு இதை மூன்றரை வருடங்கள் என்றே மொழிபெயர்த்திருக்கிறது.4
- இதே கால அளவு தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களில் (தானியேல் 7:25; 12:7; வெளிப்படுத்தல் 11:2,3; 12:6,14; 13:5). காலமும் காலங்களும் அரைக்காலமும் என 3 முறையும், நாற்பத்திரண்டு மாதங்கள் என 2 முறையும், 1260 நாட்கள் என 2 முறையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. யூதர்களால் உபயோகிக்கப்பட்ட 30 நாட்கள் கொண்ட நாட்காட்டியின் அடிப்படையில் இந்த கால அளவுகள் அனைத்தும் ஒரே அளவையே குறிக்கின்றன. 31/2 வருடங்கள் = 42 மாதங்கள் = 1260 நாட்கள்.
- ஒரு தீர்க்கதரிசன நாள் ஒரு வருடத்திற்கு சமம் (எசே. 4:6; எண். 14:34).
- இவ்விதம் இந்த சின்னக்கொம்பு (அந்திகிறிஸ்து) பரிசுத்தவான்கள்மீது 1260 தீர்க்கதரிசன நாட்கள் — 1260 வருடங்கள் வல்லமை கொண்டிருக்கவேண்டும்.
- தன்னை எதிர்த்த 3 சாம்ராஜ்யங்களையும் பிடுங்கிய கி.பி. 538ல் போப்புமார்க்கத்தின் ஆட்சி துவங்கியது. போப்பின் ஆரசியல் வல்லமையை அழிக்கும் நம்பிக்கையில் நெப்போலியனுடைய தளபதி பெர்த்தியர் போப் ஆறாம் பயஸை சிறைபிடித்த கி.பி. 1798 வரை இதன் ஆட்சி இருந்தது. இந்த காலஅளவு 1260 வருட தீர்க்கதரிசனத்தின் மிகச் சரியான நிறைவேறுதல்! அந்த அடி போப்பு மார்க்கத்திற்கு சாவுக்கேதுவான காயமாக இருந்தது. எனினும் அந்தக் காயம் சொஸ்தமடையத் துவங்கி இன்றும் சொஸ்தமடைந்து கொண்டிருக்கிறது.
- இதே அளவு காலம் தேவனுடையமக்கள் அனுபவிக்கும் மிகக் கொடிய உபத்திரவ காலமாக மத்தேயு 24:21 குறிக்கப்பட்டிருக்கிறது. தேவன் அதை குறுக்காது இருந்திருந்தால் ஒரு ஆத்துமாகூட பிழைக்கக்கூடாது போயிருக்கும் என்று வசனம் சொல்லுகிறது. ஆனால் தேவன் அதை குறைத்துப்போட்டார். 1798ல் போப்பு சிறை பிடிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்குமுன்பே இது முடிவிற்கு வந்தது. இந்த கருத்தும் அதேபோல போப்புமார்க்கத்திற்கு பொருந்துவது இங்கே தெளிவாக இருக்கிறது.
அது “உன்னதமானவருக்கு விரோதமாக” “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும்.” தூஷணம் என்கிற வார்த்தைக்கு

வேதவாக்கியம் இரண்டு விளக்கங்களைக் கொடுக்கிறது.
- பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் (லூக்கா 5:21).
- தன்னை தேவனாக அறிவிப்பது (யோவான் 10:33).
இந்த கருத்து போப்புமார்க்கத்திற்கு பொருந்துகிறதா? ஆம். பாவங்களை மன்னிக்கும் அதன் உரிமைக்கான சான்றுகளை நாம் முதலாவது பார்க்கலாம்: “பாதிரியார் மெய்யாகவே பாவங்களை மன்னிக்கிறாரா அல்லது அவைகள் அழிக்கப்பட்டதென்று அறிவிக்கிறாரா? கிறிஸ்துவினால் தனக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையினால் பாதிரியார் மெய்யாகவே பாவங்களை மன்னிக்கிறார்.”5 நம்முடைய பிரதான ஆசாரியரும் (எபி. 3:1; 8:1,2) ஒரே மத்தியஸ்தருமாகிய (1 தீமோ. 2:5) கிறிஸ்துவை தாண்டிச்சென்று உலக பாதிரிகளிடம் பாவ அறிக்கை செய்யும் அமைப்பினால் போப்புமார்க்கம் இயேசுவை இன்னும் கீழாக்குகிறது அது தன்னை தேவனாக உரிமைபாராட்டுவதற்கான சான்றை கவனியுங்கள்: “நாங்கள் (போப்புகள்) இந்த பூமியில் சர்வ வல்லமையுள்ள தேவனின் இடத்தைப் பெற்றிருக்கிறோம்.”6 இங்கே இன்னொரு சான்று: “போப்பு இயேசுகிறிஸ்துவின் பிரதிநிதி மாத்திரமல்ல, அவர் மாமிசமென்னும் திரையின்கீழாக மறைக்கப்பட்டிருக்கிற இயேசுகிறிஸ்துதாமே.”7 இந்த வெளிப்படையான குறிப்பு போப்புமார்க்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது.
ஐ. அது “காலங்களையும் பிரமாணங்களையும்” மாற்ற நினைக்கும் (தானியேல் 7:25).
இதைத் தொடரும் பாடங்களில் காலங்கள் என்கிற அந்த கருத்தை நாம் படிக்கலாம். அது பெரிய தலைப்பாக இருப்பதினால் அதை தனியாகப் படிக்கவேண்டும். “பிரமாணங்களை மாற்றுவது என்றால் என்ன? ஆம்ளிபைட் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரமாணங்களை பிரமாணம் என்று மொழிபெயர்த்திருக்கிறது. அது தேவனுடைய பிரமாணங்களை மாற்றுவதே. எவரும் அதை மாற்றமுடியாது. ஆனால் மாற்றும்படியாக போப்புமார்க்கம் முயற்சித்ததா? ஆம், அது மாற்றியிருக்கிறது.
அதனுடைய மத குறிப்பு புத்தகத்தில் (catechism), விக்கிரகத்தை ஆராதிக்கக் கூடாதென்னும் 2ம் கற்பனையை அகற்றி, 4ம் கற்பனையை மிகவும் குறுக்கி, 10ம் கற்பனையை இரண்டாக அது பிரித்திருக்கிறது (நீங்களே இதை சரிபாருங்கள்). யாத்திரகமம் 20:3-17 வரையிருக்கிற தேவனுடைய கற்பனைகளோடு கத்தேலிக்க கேடிகிசத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தானியேல் 7ம் அதிகாரத்தின் சின்னகொம்பு வல்லமை (அந்திகிறிஸ்து) போப்புமார்க்கமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஒன்பது குறிப்பிற்குள்ளும் வேறு எந்த அமைப்பும் பொருந்தாது. இது தற்செயலாக வந்த புதிய போதனையும் அல்ல. எந்த விதிவிலக்குமின்றி ஒவ்வொரு மறுமலர்ச்சியாளரும் போப்புமார்க்கத்தை அந்திகிறிஸ்து என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.8
1 W.E.H.Lecky, History of the Rise and Influence of the Spirit of Rationalism in Europe, Volume 2, P. 40.
2 Alexander Clarence Flick, The Rise of the Medieval Church, pp. 148,149.
3 Adolf Harnack, What is Christianity? (new York: Putnam, second edition, revised, 1901). pp. 269,270.
4 The Amplified Bible, Zondervan Publishing House, GrandRapids, Michigan 1962.
5 Joseph Deharbe, S.J., A Complete Catechism of the Catholic Religion (New York: Schwartz, Kirwin & Fauss, 1924), p. 279.
6Pope Leo XIII, Encyclical Letter “The Reunion of Christendom” (dated June 20, 1894) trans. in the Great Encyclical Letters of Pope Leo XIII (New York: Benziger, 1903), p. 304.
7 Catholic National, July 1895.
8 R.Allan Anderson, Unfolding the Revelation, p. 37.

9.முடிவுகாலமட்டும் இந்த புத்தகத்தை முத்திரைபோடும்படி தானியேலுக்கு சொல்லப்படவில்லையா? (தானியேல் 12:4). எப்போது தானியேலின் தீர்க்கதரிசனங்கள் நமது புரிந்துகொள்ளுதலுக்குத் திறக்கப்படும்?
பதில்: தானியேல் 12:4ல் முடிவுகாலமட்டும் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை முத்திரையிடும்படி தீர்க்கதரிசி அறிவுறுத்தப்பட்டான். வசனம் 6ல் “இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும்” என்று ஒரு தூதனின் குரல் கேள்வி எழுப்பியது. வசனம் 7: “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும்” என்று பதில் இருக்கிறது. முத்திரிக்கப்பட்ட முடிவுகால சம்பவங்களைக்குறித்து பேசுகிற இந்த புத்தகத்தின் பகுதி, நாம் இன்றைய பாடத்தில் இதற்குமுன்பே படித்ததைப்போல போப்புமார்க்க அதிகாரத்தின் முடிவாகிய 1260 வருடங்களின் முடிவில், அதாவது 1798ல் திறக்கப்படும் என்று தூதன் தானியேலுக்கு உறுதியளித்தான். எனவே முடிவுகாலம் 1798ல் துவங்கியது. தானியேலின் புத்தகம் இன்று நமக்கான பரலோகத்தின் முக்கியமான செய்திகளைக் கொண்டிருக்கிறது தெளிவாகிறது. நாம் இவைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

10 வருந்தக்கூடியவிதத்தில் இன்று அனைத்து கிறிஸ்தவர்களும் அந்திகிறிஸ்துவைக் குறித்து தவறாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்திகிறிஸ்துவைக் குறித்த பொய்களை நம்புவது, ஒரு நபர் வஞ்சிக்கப்பட்டு இரட்சிப்பை இழக்க வழிவகுக்கும். புதிய வேதாகமப் போதனைகள் வரும்போதும் ஒரு நபர் என்ன செய்யவேண்டும்?
“அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” – அப்போஸ்தலர் 17:11.
பதில்: ஒரு புதிய வேதாகம போதனை வரும்போது நமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு அதை வேதவாக்கியங்களோடு ஒப்பிட்டு தேவனுடைய வார்த்தையோடு இணைந்துபோகிறதா என்று பார்ப்பதே.
11. இயேசு என்னை நடத்தும் இடம் வேதனையான ஒன்றாக இருப்பினும் அவரை பின்பற்ற தீர்மானிக்கிறீர்களா?

பதில்: _____________
முடிவான குறிப்புகள்:
அநேக குறிப்பான தீர்க்கதரிசனங்கள் தானியேல் மற்றும் வெறிப்படுத்தல் புத்தகங்களிலிருந்து இனிவரும் பாடங்களில் வரவிருக்கின்றன. கீழ்காணும் காரணங்களுக்காக தேவன் அந்த தீர்க்கதரிசனங்களைக் கொடுத்திருக்கிறார்.
- இந்த பூமியின் முடிவுகால சம்பவங்களை வெளிப்படுத்த,
- இயேசுவிற்கும் சாத்தானுக்கும் இடையே இருக்கிற யுத்தத்தின் முடிவுகாட்சிகளில் பங்கெடுப்பவர்களை அடையாளம் காண.
- நம்மனைவரையும் கண்ணியில் பிடித்து அழிப்பதற்கான சாத்தானின் தீய திட்டங்களை தெளிவாக வெளிப்படுத்த.
- நியாயத்தீர்ப்பின் பாதுகாப்பையும் அன்பையும் கொடுக்க—அதிலே தேவனுடைய பரிசுத்தவான்கள் நீதிமான்களாக அறிவிக்கப்படுவார்கள்.
- இயேசுகிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும், அன்பையும், வல்லமையையும், கிருபையையும் நியாயத்தையும் உயர்த்திப்படிக்க.
இவைகளில் முக்கியமான பங்கெடுப்பவர்கள் இதில் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள்.
இயேசுவிற்கும் சாத்தானுக்குமிடையே நடக்கிற இந்த முக்கிய யுத்தத்தின் பங்காளிகள், இந்த தீர்க்கதரிசனங்களில் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள். சாத்தானும், இயேசுவும், அமெரிக்க ஐக்கிய நாடும், போப்புமார்க்கமும் புரொட்டஸ்டண்டு மார்க்கமும், ஆவிமார்க்கமும் இதில் அடங்கியிருக்கிறது. இயேசுவின் அன்பையும் பாதுகாப்பையும் குறித்த எச்சரிப்புகள் தெளிவாகவும் நிச்சயமாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தீர்க்கதரிசனங்களின் செய்திகளை இயேசு திரும்பவும் கூறி விளக்கிக் காண்பிக்கிறார்.
சிந்தனைக் கேள்விகள்
1. அந்திகிறிஸ்து ஒரு அமைப்பு என்பதைக்காட்டிலும் ஒரு நபர் என்றே நான் எப்போதும் நினைத்ததுண்டு. நான் நினைத்தது தவறா?
பதில்: அந்திகிறிஸ்து ஒரு அமைப்பே-போப்புமார்க்கமே. தானியேல் 7:8ல் இருக்கும் “மனித கண்கள்” என்கிற வார்த்தைகள் ஒரு தலைவரைச் சுட்டிக்காட்டுகிறது. எண்ணிக்கைகொண்ட ஒரு நபர் ஈடுபட்டிருப்பதாக வெளிப்படுத்தல் 13:18 பேசுகிறது. தானியேல் 8ன் கிரேக்க சாம்ராஜ்யம் வெள்ளாட்டுக்கடாவாலும், மகா அலெக்சான்டர் அதன் ஒரு கொம்பினாலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான். இது அந்திகிறிஸ்துவிற்கும் பொருந்துகிறது. அதன் அமைப்பு போப்பிமார்க்கமும், அதன் தலைமையில் இருக்கும் போப்பு அதன் பிரதிநிதியாகவும் இருக்கிறார். போப்புகள் தீயவர்கள் என்றும், கத்தோலிக்கர்கள் கிறிஸ்துவர்கள் அல்ல என்றும் தானியேல் 7ன் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை. அநேக அன்பான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். எனினும் இந்த அமைப்பு இயேசுவின் அதிகாரத்தை பறித்து அவருடைய பிரமாணத்தை மாற்ற முயற்சித்ததால் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது.
2. கிறிஸ்தவத்தை காட்டாயப்படுத்தும் சட்டங்களை அமைப்பது கிறிஸ்தவ வழி என்றோ அல்லது ஞானமானது என்றோ நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: இல்லை. மனசாட்சிக்கடுத்த காரியங்களில் அனைவரும் தாங்கள் விரும்பினதை தெரிந்துகொள்ளும் சுதந்திரம் (அது தேவனை மறுதலிப்பதானாலும், தேவனே இல்லை என்று சொல்லுவதானாலும்) பெற்றிருக்கவேண்டும் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்லுகிறது (யோசுவா 24:15). ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையைத் தெரிந்துகொள்ள, அது தம்மையும் அவர்களையும் பாதித்தபோதும் தேவன் அதை அனுமதித்தார். கட்டாயப்படுத்தும் தொழுகை தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல. கட்டாயப்படுத்தும் தொழுகை பிசாசின் வழி; தேவனுடைய வழியெல்லாம் அன்பான அறிவுறுத்துவதுதான். சபை தன்னுடைய நம்பிக்கைகளைக் கட்டாயப்படுத்த சட்டம் இயற்றினபோதெல்லாம் உபத்திரவமும் கொலையுமே அதைத் தொடர்ந்தது என்பதை சரித்திரம் மெய்ப்பிக்கிறது. இதுவும் சின்னகொம்பின் சரித்திர காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்.
3.ஒருவேளை நான் தவறாக புரிந்திருக்கலாம். ஆனால் அந்திகிறிஸ்து தேவனை வெளிப்படையாக எதிர்த்த ஒரு தீய மனிதன் என்பதுதான் எப்போதுமே என்னுடைய கருத்து. இந்த கருத்து சரிதானே?
பதில்: “அந்தி” என்கிற வார்த்தையை “எதிராக” என்றுதான் பொதுவாக நாம் கருதுவோம். ஆனால் “அந்திகிறிஸ்து” என்பது “அந்த இடத்தில்” அல்லது “அதற்கு பதிலாக” என்றும் பொருள் தருகிறது. தேவனுடைய குண நலன்களை தனக்கு எடுத்துக்கொண்ட குற்றத்தில் அந்திகிறிஸ்து இருக்கிறது. அது,
- தேவன்மாத்திரமே கொடுக்கக்கூடிய பாவமன்னிப்பை அதன் பாதிரிகளும் கொடுக்கலாம் என்கிறது (லூக்கா 5:21).
- தேவனுடைய இரண்டாவது கற்பனையை (விக்கிரகங்களை வணங்குவதை தடைசெய்கிற கற்பனையை) அப்புறப்படுத்தி, பத்தாவது கற்பனையை இரண்டாகப் பிரித்து மாற்றியிருக்கிறது. தேவனுடைய பிரமாணம் மாற்றப்படக்கூடாது (மத்தேயு 5:18).
- போப்பு பூமியில் தேவனாயிருக்கிறார் என்கிறது.
சத்தானுடைய ஆதி திட்டம்
தேவனுடைய இடத்தையும் அதிகாரத்தையும் தன்னுடையதாக்குவதே (பரலோகத்தில்) சாத்தானுடைய ஆதித் திட்டம். அவனுடைய நோக்கம் தேவனை வெளியேற்றி, அவருடைய இடத்தில் ஆட்சி செய்வதே (பாடம் 2ஐ பார்க்கவும்). சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவனுடைய நோக்கம் மாறவில்லை, மாறாக, அது தீவிரமடைந்துது. நூற்றாண்டுகள் நெடுகாக (வெவ்வேறு மனித முகவர்களை உபயோகித்து) தேவன்மேல் நிந்தனையைக் கொண்டுவந்து, அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள அவன் முயன்றிருக்கிறான்.
அந்திகிறிஸ்து ஆவிக்குரியவனாக காணப்படுவான்
ஆவிக்குரியவனாகவும் பரிசுத்தவானாகவும் தோன்றுகிற அந்திகிறிஸ்துவை பின்பற்றும்படி மக்களை இந்த கடைசிகாலத்தில் வஞ்சிப்பதினால் தேவனுடைய இடத்தை எடுத்துக்கொள்ள சாத்தான் எண்ணங்கொண்டிருக்கிறான். அவனுடைய கண்ணிகளையும் கொள்கைகளையும் வெளிக்காட்டி, பாதுகாப்பிற்காக இயேசுவின்மேலும் அவருடைய வசனங்களின்மேலும் அஸ்திபாரப்பட மக்களை நடத்துவதே தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனங்களுடைய நோக்கம்.
அந்திகிறிஸ்து அநேகரை வஞ்சிப்பான்
கிறிஸ்துவை பின்பற்றுவதாக நினைத்து மிக அதிக மக்கள் அந்திகிறிஸ்துவைப் பின்பற்றுவார்கள் (வெளிப்படுத்தல் 13:3). தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே பாதுகாப்பாயிருப்பார்கள் (மத்தேயு 24:23,24). அவர்கள் ஆவிக்குரிய போதனைகள் ஒவ்வொன்றையும், ஆவிக்குரிய தலைவர்களையும் வேத வாக்கியங்களோடு ஒப்பிட்டு சோதித்துப் பார்ப்பதினால் (ஏசாயா 8:20) பாதுகாப்பாயிருப்பார்கள். மத வஞ்சனைகள் இன்றைக்கு எங்கும் இருக்கிறது. நாம் கவனமாயிருக்கவேண்டும்.
4. அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள் என்று 1 யோவான் 2:18-22ல் வேதாகமம் சொல்லவில்லையா?
பதில்: தேவனுடைய இராஜ்யத்திற்கு ஏதிராக வேலைசெய்த அநேக அந்திகிறிஸ்துகள் சரித்திரம் நெடுகிலும் இருந்திருக்கிறார்கள். எனினும் அதைக்குறித்து தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து குணநலன்களிலும் பொருந்துகிற ஒரே ஒரு அமைப்பே இருக்கிறது. தானியேல் 7,8 மற்றும் வெளிப்படுத்தல் 13ம் அதிகாரங்களில் அந்திகிறிஸ்துவின் பத்து (குறைந்தது) குறிப்படையாளங்களை நாம் காணலாம். இந்த பத்து அடையாளங்களும் ஒரேஒரு அமைப்பில்தான் அதாவது போப்புமார்க்கத்தில்தான் முழுமையாக பொருந்துகின்றன.
5. தீர்க்கதரிசனத்தில் மிருகம் என்பது மிருக குணத்தை அடையாளப்படுத்துகிறதா?
பதில்: இல்லவே இல்லை. ஒரு அதிபதியையோ, தேசத்தையோ, அரசாங்கத்தையோ அல்லது இராஜ்யத்தையோ குறிப்பிடவே மிருகம் என்கிற அடையாளத்தை தேவன் உபயோகிக்கிறார். தீர்க்கதரிசனங்களில் அரசாங்கங்களை விவரிக்கிற அவருடைய வழி அது. நாமுங்கூட ஒரளவு இவ்விதமே செய்கிறோம். ரஷ்யாவை கரடி என்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை கழுகு என்றும் விவரிக்கிறோம். மிருகம் என்கிற அடையாளம் குறைவான அவமரியாதையான ஒரு வார்த்தை அல்ல, அது “விலங்கு” அல்லது “சிருஸ்டி” என்பதற்கு இணையான பொருளை உடையது. கிறிஸ்துவும்கூட யோவான் ஸ்நானகனாலும், அப்போஸ்தலனாகிய யோவானாலும் (யோவான் 129 வெளிப்படுத்தல் 5:6,9,12,13) ஆட்டுக்குட்டி என்று விவரிக்கப்பட்டார். மிருகம் என்கிற வார்த்தை நன்மையான அல்லது தீமையான தேசங்களையும் தலைவர்களையும் குறித்த செய்தியை கொடுக்கும்படியாக தேவனால் உபயோகப்படுத்தப்படுகிறது.
கேள்விகள்
1. தானியேல் 7ம் அதிகாரத்தில் எந்த நான்கு உலக இராஜ்யங்கள் மிருகங்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன? (4)
_____ சுவீடன்
_____ எகிப்து
_____ கிரேக்கம்
_____ சீனா
_____ மேதிய பெர்சியா
_____ ஜப்பான்
_____ பாபிலோன்
_____ ஈராக்
_____ ரோம்
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களிலும், பட்டியலில் உள்ள வார்த்தைகளில் ஒன்றைத் தேர்வு செய்து, கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசன அடையாளத்திற்குரிய நிஜமான அர்த்தத்தை நிரப்பவும்.
\ அழிவை \ வருடத்தை \ தேசங்களை \ \ மக்களை \ வேகத்தை \
எடுத்துக்காட்டு: மிருகங்கள் என்னும் அடையாள வார்த்தை இராஜ்ஜியங்கள் அல்லது தேசங்களை குறிக்கும்.
தண்ணீர் என்னும் அடையாள வார்த்தை ______________ குறிக்கும்.
செட்டைகள் _________________ குறிக்கும்.
காற்றுகள் என்னும் அடையாள வார்த்தை சண்டை, கொந்தளிப்பு மற்றும் ___________ குறிக்கும்.
ஒரு தீர்க்கதரிசன நாள் என்பது உண்மையான ஒரு __________ குறிக்கும்.
3. கொடிய மிருகத்தின் பத்து கொம்புகள் குறிப்பது: (1)
_____ பத்து வருடங்கள்.
_____ பத்து விசேஷித்த பட்டணங்கள்.
_____ தூதர்கள்.
_____ செல்வம்.
_____ அஞ்ஞான ரோமிலிருந்து பிரிந்துபோன பத்து இராஜ்யங்கள்.
4. சின்னகொம்பின் வல்லமையினால் எத்தனை கோத்திரங்கள் அல்லது நாடுகள் பிடுங்கப்பட்டன? (1)
_____ 8
_____ 1
_____ 6
______ 3
5. சின்னகொம்பின் வல்லமை அல்லது அந்திகிறிஸ்து குறிப்பது: (1)
_____ பாபிலோனிய தளபதிகளில் ஒருவரை.
_____ பழைய அஞ்ஞான ரோமின் காலத்திலிருந்த ஒரு தீய தளபதியை.
_____ இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பின் எழும்பும் ஒரு தீய வல்லமையை.
_____ நாத்தீகத்தை.
_____ போப்புமார்க்கத்தை.
6. சின்னகொம்பைக் (அந்திகிறிஸ்துவை) குறித்த உண்மைகள்: (3)
( ) அது எகிப்திலிருந்து வந்தது.
( ) அது தேவனுடைய மக்களை உபத்திரவப்படுத்தும்.
( ) பாபிலோன் விழுந்தவுடனே எழும்பியது.
( ) தேவனுக்கெதிராக பெருமையானவைகளைப் பேசுகிறது.
( ) தேவனுடைய பிரமாணங்களை மாற்ற முயற்சித்தது.
7. தீர்க்கதரிசனங்களில் “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” என்பது: (1)
_____ மூன்றரை நாட்கள்.
_____ 42 வருடங்கள்.
_____ 1260 வருடங்கள்.
8. முடிவுகாலம் எப்போது துவங்கியது? (1)
_____ கி்.பி.31ல்
_____ கி.பி.1991ல்.
_____ கி.பி.588ல்.
_____ கி.பி.1798ல்.
9. அந்திகிறிஸ்து ஒரு நபர் என்கிறதைக்காட்டிலும் அது ஒரு அமைப்பே. (1)
_____ ஆம்.
_____ இல்லை.
10. அந்திகிறிஸ்து இன்று இருக்கிறது. (1)
_____ ஆம்.
_____ இல்லை.
11. சட்டத்தின் வழியாக மெய்யான தொழுகையை கட்டாயப்படுத்துவதை தேவன் அங்கிகரிக்கிறார். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
12. தளபதி பெர்தியர் போப்புவை பிடித்தது போப்புமார்க்கத்தை காயப்படுத்தியிருக்கிறது. அதன் சாவுக்கேதுவான காயம் சொஸ்தமடையத் துவங்கி இன்றும் சொஸ்தமடைந்து கொண்டிருக்கிறது. (1)
_____ ஆம்.
_____ இல்லை.
13. தேவனுடைய மக்களின் ஆவிக்குரிய பாதுகாப்பிற்கு இந்த கடைசி நாட்களில் அத்தியாவசியமானது: (1)
_____ போதிக்க கற்றுக்கொள்ளுவது.
_____ பொது இடங்களில் அதிகம் ஜெபிப்பது.
_____ ஒவ்வொரு மத போதனையையும் வேதாகமத்தைக்கொண்டு சோதித்துப் பார்ப்பது.
14. இயேசு நடத்தும் இடம் வேதனையானதாயிருந்தாலும் அவரைப் பின்பற்ற தீர்மானிக்கிறீர்களா?
_____ ஆம்.
_____ இல்லை.